சினிமா
இளையராஜா, சீனு ராமசாமி

இளையராஜாவுடன் மோதலா? - சீனு ராமசாமி விளக்கம்

Published On 2019-09-29 09:02 GMT   |   Update On 2019-09-29 09:02 GMT
இளையராஜாவுடன் மோதல் ஏற்பட்டதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாமனிதன்’. யுவன் சங்கர் ராஜா தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்து வருகிறார்கள். 

இந்த படம் தொடங்கப்பட்ட போது, ‘மாமனிதன்’ மூலமாக இளையராஜா - வைரமுத்து மீண்டும் இணைவார்கள் என்று செய்திகள் வெளியானது. ஆனால், அது நடைபெறவில்லை. மேலும், வைரமுத்து குறித்து பேச்சை எடுத்ததால் இயக்குநர் சீனு ராமசாமி மீது கோபமாக இருக்கிறார் இளையராஜா என்று இப்போது செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால், ‘மாமனிதன்’ இசைக் கோர்ப்பு பணிகளில் கூட சீனு ராமசாமியால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் சிலர் குறிப்பிட்டார்கள். 

இந்த விவகாரம் தொடர்பாக சீனு ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நான் கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய ’மாமனிதன்’ படத்தில் இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே.இளையராஜாவிடம் அவரது புதல்வர் யுவன் என்னை அழைத்து சென்றார். இசை மூத்தவர் பாதம் தொட்டு வணங்கினேன்.”



திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது, நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும்“ என்றேன் ‘அது சரி’ என்று சிரித்தபடி வந்தார். பாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய முழு படத்தையும் அவருக்கு காட்டினோம். படத்தின் இடைவேளைக்கு கூட அனுமதிக்காமல் முழு படத்தையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்தார். படத்தில் பாடல் காட்சி வரும் போது மட்டும் உதாரணத்திற்கு “உன்ன விட இந்த உலகத்தில் உயர்த்தது ஒன்னும் இல்ல” அது மாதிரி சார் என்று மட்டும் கூறுவேன். அவ்வளவுதான்.

1000 படங்களுக்கு மேல் இசை அமைத்த இளையராஜாவுக்கு இதற்கு மேல் விளக்கம் சொல்லி நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.இளையராஜா பாடலுக்கு மெட்டு போடுகிறார் .அதற்கு யுவன் இசை கோர்க்கிறார். இது இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். பின்னணி இசை சேர்ப்பில் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா, எனினும் பின்னணி இசையில் எனது எண்ணங்களைக் கடிதமாக எழுதி தந்தேன். அவர் அன்போடு பெற்றுக் கொண்டார். 

படத்தில் பாடல்கள் என்று வந்த போது “அண்ணன் பழனி பாரதிக்கும் கவிஞர் ஏகாதேசிக்கும் கொடுக்கலாம்“ என்றேன் யுவன் தரப்பில் “பா. விஜய்” என்றார்கள். நான் சம்மதித்தேன். ரெக்கார்டிங் தருவாயில் “பாடல் வரிகளில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார். எனக்கு இயக்குநராக முழு சுதந்திரம் தயாரிப்பாளராக வழங்கியிருக்கிறார் யுவன். இது நான் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணி புரியும் 4-வது படம். இளையராஜாவுடன் பணிபுரியும் முதல் படம் . 

’மாமனிதன்’ எனக்கு 7-வது படம். இளையராஜா மீது எனக்கு இருக்கிற நேசத்தால் அவர் பிறந்த பண்ணைபுரத்தில் கதாநாயகன் வாழும் ஊராகப் படம் பிடித்திருக்கிறேன். இளையராஜாவின் சொந்த ஊரில் அவர் நடந்த தெருக்களில் படம் பிடித்த பெருமையில் இருக்கிறேன். இதில் என் பெயரை வைத்து இளையராஜாவைச் சிறுமை படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மேலும் நான் யாரையும் அவருக்குச் சிபாரிசு செய்யவில்லை.

என் மீது அவருக்கு கோபம் இருப்பதாகவும் கூறுவது உண்மையல்ல. நானும் யுவனும் கவிஞர் வைரமுத்துவுடன் நான்கு படத்தில் பணி புரிந்தோம்.’தர்மதுரை’யில் வைரமுத்து பாடல் வரிகளுக்குத் தேசிய விருது கிடைத்தது இந்த முறை நானும் யுவனும் இசைஞானியுடன் பணிபுரிகிறோம், நிச்சயமாக இந்த படத்தின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைக்குமெனக் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News