செல்வந்தரான நாயகி ஆஷ்னா சவேரி தற்கொலை செய்து கொள்ள விஷத்துடன் தயாராகிறாள். அந்த நேரமாகப் பார்த்து ஒரு திருடன் முனீஷ்காந்த் வீட்டுக்குள் நுழைகிறார். அவரைப் பார்த்த அதிர்ச்சியில் விஷம் இருக்கிற பாட்டில் உடைந்து சிதறிவிட, தன் கையிலிருக்கும் துப்பாக்கியைக் கொடுத்து கொல்ல சொல்கிறார் ஆஷ்னா சவேரி.
பதட்டமடையும் முனீஷ்காந்த், நான் திருடத்தான் வந்தேன், கொலை செய்கிற அளவுக்கு எனக்கு தைரியமில்லை, என்னை விட்டு விடுங்கள் என்கிறார். என்னை கொல்லாவிட்டால், திருட வந்த குற்றத்துக்காக உன்னை போலீஸிடம் ஒப்படைத்து விடுவேன் என்று ஆஷ்னா சவேரி, முனீஷ்காந்த்தை மிரட்டுகிறார்.
இறுதியில் முனிஷ்காந்த், ஆஷ்னா சவேரியை கொலை செய்தாரா? எதற்காக ஆஷ்னா சவேரி தற்கொலை முயற்சி செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சவேரி, தற்கொலைக்கு முயற்சிப்பது, திருடன் வந்ததும் அவனிடம் துப்பாக்கியைக் கொடுத்து சுட சொல்வது, மறுக்கும்போது மிரட்டி சம்மதிக்க வைப்பது, தற்கொலை முடிவுக்கான காரணத்தை விளக்குவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
ஆஷ்னாவின் கணவராக நடித்து இருக்கும் அசோக், மனைவியைக் கொடுமைப்படுத்துபவர், மனைவியால் கொடுமைகளை அனுபவிப்பவர் என இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
திருடனாக வரும் முனீஷ்காந்த், ஆஷ்னா சவேரியிடம் மாட்டிக்கொண்டு, தவிக்கும் காட்சியில் சிரிக்க வைத்து இருக்கிறார். நிழல்கள் ரவி, வினோத் சாகர், ஷரவண சுப்பையா, ராட்சசன் சரவணன், ஆர்.எஸ். நித்தீஷ், அஸ்மிதா உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரங்களில் வந்து போகிறார்கள்.
இயக்கம்
சூழ்நிலைகள்தான் மனிதர்கள் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாறுவதற்கு காரணமாக அமைகிறது என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்தி தட்சிணாமூர்த்தி. திரில்லர் பாணியில் படத்தை கொடுக்க நினைத்து இருக்கிறார். திரைக்கதையில் சுவாரசியம் கூட்டியிருந்தால் ரசித்து இருக்கலாம்.
இசை
என்.டி.ஆர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.
ஔிப்பதிவு
ஒரு வீட்டுக்குள்ளேயே கேமரா கோணங்களை அமைத்திருக்கும் ஆர்.அதிசயராஜின் ஒளிப்பதிவு சிறப்பு.
ரேட்டிங்-2/5