சினிமா
ஹாலிவுட்டில் கவனம் செலுத்தும் காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தற்போது ஹாலிவுட் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்திய நாயகிகளான தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஹாலிவுட் திரைப்படங்கள், தொடர்களில் நடித்து வருகின்றனர். இந்தியாவை போல அங்கும் அவர்கள் தங்களுக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்குகின்றனர். தமிழிலிருந்து சுருதி ஹாசனும் ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார். தற்போது காஜல் அகர்வால் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகவுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
‘லி டோக்யோ ரிப்போர்ட்டர்’ என்ற குறும்படம் மூலம் சர்வதேச கவனம்பெற்ற இயக்குநர் ஜெப்ரி ஜீ சின் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு ‘கால் சென்டர்’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. ஒரு சம்பவம் ஒரு தம்பதியரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்ற கதையே காஜலின் ஹாலிவுட் சினிமாவின் கதையாகும்.