சினிமா

நடிகர் சங்க தேர்தல் 23-ந்தேதி நடக்காது - ராதாரவி

Published On 2019-06-12 10:12 GMT   |   Update On 2019-06-12 10:12 GMT
நடிகர் சங்க தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி நடைபெறாது என்று முன்னாள் நடிகர் சங்க செயலாளர் ராதாரவி பேட்டியளித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.

இந்தநிலையில் கடந்த தேர்தலில் பாண்டவர் அணிக்கு எதிர் அணியாக போட்டியிட்டு தோல்வியை தழுவிய சரத்குமார் அணியில் இருந்தவரும் நடிகர் சங்க முன்னாள் பொதுச் செயலாளருமான ராதாரவி, இந்த முறை தேர்தல் நடைபெறாது என கூறியிருக்கிறார்.

ராதாரவி இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

‘கடந்த முறை எங்களுக்கு எதிராக போட்டியிட்ட விஷால் அணி மாற்றம் தேவை என்றார்கள். நான் மாற்றம் வரலாம் ஏமாற்றம் வரக்கூடாது என்றேன். இப்போது அது தான் நடந்து இருக்கிறது. விஷால் மீது ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எங்களுக்கு எதிராக அவருக்கு ஆதரவாக நின்ற அனைவரும் இப்போது அவருக்கு எதிராக நிற்கிறார்கள்.



கடந்த முறை ரஜினி தேர்தலில் ஓட்டு போட்ட போது யார் ஜெயித்தாலும் மூன்று ஆண்டுகளில் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்றார். இப்போது அவர்கள் ஒன்றையும் நிறை வேற்றாததால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த அணி பொய்களை கூறி ஜெயித்த அணி.

எதற்கெடுத்தாலும் விஷாலை முன்னிலைப்படுத்தி முன்னிலைப்படுத்தி இப்போது அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது நடக்கும் என்று முன்பே கூறினேன். இன்னும் நிறைய வேடிக்கைகள் காத்திருக்கிறது. இது சட்ட விரோதமான தேர்தல்.

23-ந் தேதி கண்டிப்பாக தேர்தல் நடக்காது. அவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகளுக்கு முறையான கணக்கு தாக்கல் செய்யவில்லை. நிறைய குளறுபடிகள் நடந்திருக்கிறது. இந்த தேர்தல் கண்டிப்பாக நடக்காது. வரும் 13-ந்தேதி நீதிமன்றம் மூலம் தேர்தல் நிறுத்தப்படும்’.

இவ்வாறு ராதாரவி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News