சினிமா
என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை
லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் காஞ்சனா 3 படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், லாரன்ஸ் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். #Kanchana3 #RaghavaLawrence
ராகவா லாரன்ஸ் இயக்கி, அவரே நடித்திருக்கும் காஞ்சனா 3 படம் வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களிடையே படத்திற்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படம் வெற்றி பெற ரசிகர் ஒருவர் கிரேன் மூலமாக தூக்கு காவடி எடுத்து வந்து லாரன்ஸின் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.
இந்த வீடியோவை பார்த்த பலரும், ரசிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாத வண்ணம் அவர்களுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டு வந்தனர்.
இந்த வீடியோவை பார்த்த லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
This is very important “Note” to my Friends and Fans👇 pic.twitter.com/S7J6J5Tz0k
— Raghava Lawrence (@offl_Lawrence) April 21, 2019
ரசிகர் ஒருவர் இதுபோன்று கிரேன் மூலமாக எனது கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் வீடியோவை பார்த்து மிகவும் வருத்தமடைகிறேன். எனது ரசிகர்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இனிமேல் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடாதீர்கள். உங்களது அன்பை வெளிப்படுத்த உங்களது வாழ்க்கையை பணயம் வைக்கும் இது போன்ற செயல்கள் தேவையில்லை. உங்களுக்காக ஒரு குடும்பம் இருக்கிறது. இதுபோன்று செய்வதற்கு முன்பாக அவர்களை பற்றி சிந்தியுங்கள்.
ஒருவேளை என் ரசிகராக உங்களது அன்பை வெளிப்படுத்த விரும்பினால், கல்வி கற்க கஷ்டப்படும் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள், தேவையான குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். மூத்தோர் பலர் இங்கு உணவின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு உணவளியுங்கள். அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும்.
எனவே இதுபோன்ற ஆபத்தான செயல்களை மறுபடி செய்ய வேண்டாம் என்பதே எனது கோரிக்கை. உங்கள் வாழ்க்கையே முக்கியம். இவ்வாறு கூறியிருக்கிறார். #Kanchana3 #RaghavaLawrence