சினிமா

நீட் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை - அநீதி விழாவில் ஜி.வி.பிரகாஷ் பேச்சு

Published On 2018-11-19 06:39 GMT   |   Update On 2018-11-19 06:39 GMT
அநீதி குறும்பட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் ஜி.வி.பிரகாஷ், நீட் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று பேசினார். #Aneedhi #GVPrakash
நீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவரின் துயரக்கதையை மையமாக வைத்து ‘அநீதி’ எனும் குறும்படம் உருவாகி இருக்கிறது. இதில் ’ராஜா ராணி’ பாண்டியன், பிரதீப் கே.விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.சி.பால சாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஸ்வா, ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். 

அநீதிக்கு தீர்வு மரணம் அல்ல என்பதை வலியுறுத்தும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்ற இளைஞர் இயக்கி இருக்கிறார். 

இந்த படத்தின் திரையிடல் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், கதிர், சமூகப்போராளி திருமுருகன் காந்தி, இயக்குநர் இளன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.



ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, 

அநீதி ரொம்ப முக்கியமான குறும்படம். இந்த படத்தைப் பாதிக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் முடிவு பாசிட்டிவாக அமைத்தது சந்தோஷமாக இருந்தது. நீட் என்பதை யார் கொண்டு வந்தார்களோ, அவர்களே அதை வைத்துக்கொள்ளட்டும் தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை. நான் அனிதாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். மரணிக்கும் சமயத்தில் அனிதாவின் மனதில் என்ன ஓடியிருக்கும் என்பதை அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்த போது என்னால் அறிய முடிந்தது. அதனால் அந்த வலி எனக்கு அதிகமாக இருக்கிறது. அந்த கலக்கம் இன்னும் என்னை விட்டு போகவில்லை. இந்த படத்தின் கதையோட்டம் எப்படி இருந்தாலும் படத்தின் முடிவு மிக முக்கியமானது’ என்றார்.

அநீதி குறும்படம் இதுவரை 7 விருதுகளை வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Aneedhi #GVPrakash

Tags:    

Similar News