சினிமா

தீபாவளிக்குள் திரையரங்குகளில் கண்காணிப்பு கேமராக்கள் - பட அதிபர்கள் கூட்டத்தில் தீர்மானம்

Published On 2018-10-25 03:24 GMT   |   Update On 2018-10-25 03:24 GMT
திருட்டு வி.சி.டியை ஒழிக்க அனைத்து திரையரங்குகளிலும் தீபாவளிக்குள் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க பட அதிபர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #Piracy #CCTV
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. அதில் திருட்டு வீடியோ பைரசியை ஒழிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் உள் - வெளி அரங்குகள் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வருகிற நவம்பர் 6-ஆம் தேதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். பொருத்தப்பட்ட கேமராக்கள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி பதிவு செய்யப்பட வேண்டும். வருகிற நவம்பர் 15-ந் தேதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தாத திரையரங்குகளுக்கு திரைப்படம் தரப்படமாட்டாது.

இனி அனைத்து காட்சிகளிலும் 2 நபர்கள் திரையரங்குக்குள் முழு நேர கண்காணிப்பு பணிக்கு அமர்த்தப்படுவர். ஒவ்வொரு முறை திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னர் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்படும்.



திரைப்படத்தினை காணவரும் பொதுமக்களிடம் கேமரா இருக்கிறதா என்று கட்டாயமாக பரிசோதனை செய்யப்படும்

தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்த குழு ஒன்று அமைக்கப்படும். மேற்படி வி‌ஷயம் குறித்து ஏதேனும் பிரச்சினை ஏற்படுமாயின் அதனை அந்த குழுவில் வைத்து ஆலோசித்து அதற்கு தீர்வு காண வேண்டும். திருட்டு வீடியோவை ஒழிக்க இந்த குழு கடுமையாக போராடும்

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #Piracy #CCTV #ProducersCouncil

Tags:    

Similar News