சினிமா

மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே

Published On 2018-09-06 16:31 GMT   |   Update On 2018-09-06 16:31 GMT
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார். #DeepikaPadukone #Deepika
ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமே‌ஷன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

பத்மாவத் படத்தில் ராணி பத்மினியாக வந்து மேலும் பிரபலமானார். இந்த படத்தில் சர்ச்சைகளையும் சந்தித்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் சில நாட்கள் போலீஸ் பாதுகாப்பும் அளித்தனர். 

இப்போது ஒரு படத்துக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார். பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் அவருக்கு காதலும் வந்துள்ளது. இருவருக்கும் இத்தாலியில் வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடக்க உள்ளதாகவும் திருமண ஏற்பாடுகளில் இருவரும் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிரிப்பிள் எக்ஸ் ஹாலிவுட் படத்தில் நடித்து இருந்த தீபிகா படுகோனே அதன் அடுத்த பாகத்திலும் இப்போது நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த தகவலை படத்தின் இயக்குனர் டி.ஜே.கருசோ வெளியிட்டு உள்ளார். சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கேள்விக்கு பதில் அளித்தபோது இதனை அவர் தெரிவித்தார்.

வின்டீசல், சாமுவேல் ஜாக்சன், டோனி யென் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறது. பிரியங்கா சோப்ராவும் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹாலிவுட் படத்துக்காக இந்தியில் சல்மான்கான் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News