சினிமா

விலங்குகள் நலவாரிய தூதராக நியமனம்: சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Published On 2016-09-21 08:27 IST   |   Update On 2016-09-21 08:27:00 IST
விலங்குகள் நலவாரிய விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு எதிராக தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா விலங்குகள் நலவாரியத்தின் விளம்பர தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக செயல்பட்ட விலங்குகள் நலவாரியத்தின் விளம்பர தூதராக சவுந்தர்யா நியமிக்கப்பட்டதை கண்டித்தும், அந்த அமைப்பில் இருந்து அவர் பதவி விலக வலியுறுத்தியும் தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள், சவுந்தர்யாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும், அவரது உருவப்படத்தை தீயிட்டும் எரித்தனர்.

இதுகுறித்து தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கூறுகையில், “நடிகர் ரஜினிகாந்த் முரட்டுகாளை திரைப்படத்தில் காளையை அடக்குவது போன்ற காட்சியில் நடித்து தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தார். ஆனால் அவரது இளைய மகள் சவுந்தர்யா விலங்குகள் நலவாரியத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டு இருப்பது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் தமிழக மக்கள் நெஞ்சங்களில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர் விளம்பர தூதர் பதவி மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்தும் விலக வேண்டும். இல்லையென்றால் அவருக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும். மேலும், இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்தை விரைவில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்” என்றார்.

Similar News