search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆறுகால பூஜைகள்
    X

    ஆறுகால பூஜைகள்

    • அர்த்த ஜாம தரிசனம் மனிதன் வாழ்வில் தெய்வீக பலன்களை தருவதாகும்.
    • இரண்டாம் கால பூஜையில் சிறப்பு ரத்தின சபாபதி தரிசனம்

    ஒரு காலம் என்பது, நடராஜருக்காக ஸ்படிகலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து, நைவேத்தியம் செய்து, பிறகு நடராஜர், சிவகாமசுந்தரிக்கு, தீபாராதனை செய்வது வரையிலும் ஆகும். இந்த முழு அமைப்பும் சேர்ந்துதான் ஒரு கால பூஜை எனப்படும். இவை எல்லாம் ஒரு கால பூஜையில் அடங்கும்.

    ஆறு காலங்கள்

    1. காலை சந்தி (முதல் கால பூஜை, காலை 7 மணி)

    2. இரண்டாங்காலம் (காலை 10 மணி)

    3. உச்சி காலம் (மூன்றாம் காலை பகல் 12 மணி)

    4. சாயங்காலம் (சாயரட்சை மாலை 6 மணி)

    5. 8 மணி காலம் (2-ம் காலம் இரவு 8மணி)

    6. அர்த்த ஜாமம் (6-ம் காலம் (இரவு 10 மணி)

    பரமானந்த கூபம்

    நடராஜர் அருள்பாலிக்கும் சிற்றம்பலத்துக்கும் கிழக்கு பாகத்தில் உள்ள பரமானந்த கூபம் என்னும் தீர்த்தமே (கிணறு) எப்போதும் அபிஷேகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஐப்பசி மாத வளர்பிறை நவமி திதியில் கங்கையே இத்தீர்த்தத்திற்க வருகின்றாள். இத்திருக்கோவிலினுள் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் அபிஷேகத்திற்கு இத்தீர்த்தம் பயன்படுத்தப்படுகிறது.

    முதற்காலம் (கால சந்தி)

    காலை 7 மணிக்கு பூஜாக்காரரால் கோபூஜை, கும்பம் வைத்து ஹோமம் செய்து, பஞ்சகவ்யம் முதலியவற்றால் அபிஷேகம் செய்து, நைவேத்தியம் செய்து 9 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

    இரண்டாங்காலம் (ரத்தின சபாபதி தரிசனம்)

    காலை 10 மணிக்கு ஸ்படிகலிங்கத்திற்கு அபிஷேகம் கனக சபையில் செய்து, இச்சமயத்தில் ரத்தின சபாபதிக்கும் பால், தேன், சந்தன அபிஷேகம் செய்து, கற்பூர தீபாராதனைநடைபெறும். மாணிக்க நடராஜர் பின்புறம் தீபாராதனை காண்பிக்கும்போது ஜோதியாயும் (தங்கம் போல் ஜொலிக்கும்) தெரியும். இது மிக முக்கியமான தரிசனமாகும்.

    வாழ்வில் நல்ல பல மாற்றங்களை தந்தருளும். இரண்டாம் கால பூஜையில் சிறப்பு ரத்தின சபாபதி தரிசனம்தான் என்பது எல்லோரும் நன்கு அறிந்ததே. வேறு எந்த கால புஜையிலும் இத்தரிசனம் காண முடியாது. இத்தரிசனம் காலை 10 மணி முதல் 10 மணிக்குள் காணப்பட வேண்டும்.

    உச்சிக்காலம் (மூன்றாம் காலம்)

    ரத்தினசபாபதி தரிசன தீபாராதனை முடிந்ததும், மீண்டும் அபிஷேகம் செய்து நைவேத்தியம் காட்டி, 1 மணிக்குத் தீபாராதனை உடனே நடைசாத்தப்பட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

    நான்காம் காலம் (சாயரட்சை)

    மாலை நடை திறந்தவுடன் அபிஷேகம் செய்து 6 மணிக்கு சோடசோபசார தீபாராதனை நடக்கும்.

    ஐந்தாம் காலம் (ரகசிய பூஜை காலம்)

    இரவு 7 மணிக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெறும். இந்த நேரத்தில்தான் அருவமான ரகசியத்திற்கு பூஜை நடைபெறும். கதவுகள் சாத்தப்பட்ட பூஜை செய்பவர். செய்விக்கின்றவர் ஆகிய இருவர் மட்டும் இருந்து பூஜை செய்து நைவேத்தியம் செய்து 8 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

    அர்த்த ஜாமம்

    இரவு 9 மணிக்கு அபிஷேகம் செய்து நைவேத்தியம் காட்டி, 10 மணிக்கு தீபாராதனை செய்து, நடராஜரின் பாதுகையை வெள்ளி, தங்கப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து பள்ளியறையில் கொண்டு போய் வைத்து அங்கும் நைவேத்தியம் செய்து தீபாராதனை நடைபெற்று, பின்னர் பிரம சண்டிகேஸ்வரர்க்கும், பைவரருக்கும், அர்த்த சாம அழகருக்கும் நைவேத்தியம் செய்து தீபாராதனை நடைபெறும். இவையனைத்தும் அர்த்த ஜாமபூஜைகள் ஆகும்.

    பிரபஞ்சங்களில் உள்ள சிவகலைகள் அனைத்தும் இங்கு இருந்துதான் காலை 6 மணிக்கு புறப்பட்டு அங்கு நிகழ்த்தப்படுகின்ற பூஜைகளை ஏற்று இரவு அர்த்த ஜாம பூஜையில் மீண்டும் தில்லை திருக்கோவிலினுள் ஒடுங்குகிறது. அதாவது எல்லா கோவில் தெய்வங்களும் தில்லையில் இருந்து புறப்பட்டு மீண்டும் அர்த்த ஜாம பூஜையின்போது தில்லையிலேயே மீண்டும் ஒன்று சேர்ந்து ஐக்கியமாகிறது.

    எனவே அர்த்த ஜாம பூஜை தரிசனம் என்பது அன்று முழுநாள் சிவபூஜை செய்த சிவபுண்ணிய பலனையும், எல்லா கோவில்களின் தெய்வங்களின் அருளாசியையும் பெற்றுத் தருகிறது.

    அர்த்த ஜாம தரிசனம் மனிதனின் வாழ்வில் உன்னத தெய்வீக பலன்களை தருவதில் நிகரற்ற ஒன்றாகும். மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் துதித்து வாழ்நாளில் ஒரே ஒருமுறை தில்லை திருக்கோவிலின் அர்த்தஜாம பூஜையை கண்டு தரிசிக்க வேண்டும். அர்த்தஜாம தரிசன பலன்கள் எண்ணிலடங்காதவை. வாழ்வில் எக்குறையும் நேராமல், இல்லாமல் வாழ விரும்புவோர் கண்டிப்பாக அர்த்தஜாம பூஜையை தரிசிக்க வேண்டும். இது சத்தியம் சத்தியம்.

    அர்த்தஜாம பூஜையில் வேண்டும் வரங்களை அள்ளித் தருகிறார் ஆடல்வல்லான். பக்தர்கள் வேண்டும் வரங்களை தருமாறு சிவகாமசுந்தரியே சாமி நடராஜரிடம் வேண்டிக் கொள்கிறாள். இங்கு பிரார்த்தனை செய்யுமிடம் பள்ளியறையில் தீபாராதனை நடக்கும் நேரம் ஆகும். அப்போது எல்லா கோவில் தெய்வங்களும் ஒருவித குளிர்ந்த காற்று ரூபத்தில் பள்ளியறைக்குள் செல்வதை பக்தர்கள் உணர முடியும் (பிராணாயாமம், வாசியோகம் செய்வோர் நன்கு உணர முடியும்)

    உதாரணமாக திருமணம் நடக்க வேண்டி திருமணஞ்சேரி கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இதையே தில்லையில் அர்த்தஜாம பூஜையில் பள்ளியறை தீபாராதனை வேளையில் அதே திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரனை தரிசித்த பலனால் திருமண பாக்கியம் கைகூடும்.

    Next Story
    ×