என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேருந்தில் தவறவிட்ட 15 பவுன் நகைகளை ஒப்படைத்த ஒட்டுநர், நடத்துனருக்கு பாராட்டு
- பேருந்தில் தவறவிட்ட 15 பவுன் நகைகளை ஒப்படைத்த ஒட்டுநர், நடத்துனரை பொதுமக்கள் பாராட்டினர்.
- நாகர்கோவில் வங்கி அதிகாரி
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் அந்தோணி ராஜ்(வயது 42), இவர் நாகர்கோவிலில் தனியார் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 7-ந் தேதியன்று அறந்தாங்கியிலிருந்து மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்தில் காரைக்குடிக்கு பயணம் செய்துள்ளார். காரைக்குடியிலிருந்து தேவகோட்டை செல்ல வேண்டிய டேவிட்அந்தோணிராஜ், காரைக்குடி நிறுத்தம் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கி வேறொரு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது தாம் கொண்டு வந்த பை மற்றும் உடமைகளை அந்த பேருந்திலேயே தவறவிட்டுவிட்டோம் என உணர்ந்து அதிர்ச்சியடைத்துள்ளார்.
உடனடியாக சம்பவம் குறித்து காவல்த்துறையினருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், மதுரைக்கு சென்ற பேருந்து இரவு அறந்தாங்கி திரும்பியதும், பயணிகள் இருக்கைக்கு மேல் லக்கேஜ் வைக்கும் இடத்தில் பை ஒன்று உள்ளதை நடத்துனர் முத்துக்குமார், ஓட்டுனர் ரவி ஆகியோர் பார்த்துள்ளனர். அதனை எடுத்து பார்த்ததில் அதில் நகைகள் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளதைக் கண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக போக்குவரத்து மண்டல மேலாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு அறந்தாங்கி காவல் நிலையத்தில் நகை உள்ளிட்ட பொருட்களை ஒப்படைத்துள்ளனர். பொருட்களை வாங்கி விசாரணை மேற்கொண்ட காவல்த்துறையினர் சம்மந்தப்பட்ட வங்கி மேலாளர் டேவிட் அந்தோணிராஜை அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர் தவறவிட்ட சுமார் 15 சவரன் நகை லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை அவரிடமே ஒப்படைத்தனர். ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை உரியவரிடம் சேர உதவிய அரசுப் பேருந்து நடத்துனர், ஓட்னருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.






