search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதம்"

    • பாரத யுத்தம் முடிந்த பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்க வந்தார்.
    • கிருஷ்ணர் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாத யோக சக்திகளை கொண்டு அருள்கிறார்.

    பாண்டவர்களைக் காக்க கிருஷ்ணர் லீலைகளைக் நிகழ்த்திவிட்டு, பாண்டவ தூதப் பெருமாள் என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் கோவில் கொண்டார். அதன் பின்னணியில் உள்ள வரலாறு வருமாறு:-

    பாண்டவர்களுக்காக ஐந்து வீடாவது கேட்டு வாங்கி வர, துரியோதனிடம் பகவான் கிருஷ்ணன் தூது சென்றார். அவரை அவமானப்படுத்த நினைத்தார் துரியோதனன். அவர் அமர்வதற்காக போடப்பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு நிலவறையை உண்டாக்கி அதன் மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான். கண்ணனும் வந்து அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்து உள்ளே விழுந்தது. கண்ணன் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்க சில மல்யுத்த வீரர்கள் தயாராக நின்றனர். அவர்களை அழித்து விஸ்வரூபம் எடுத்தார் கிருஷ்ணர்.

    பாரத யுத்தம் முடிந்த பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்க வந்தார். அப்போது ராஜா, கிருஷ்ணர் தூது சென்ற போது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விஸ்வரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும் என வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி இத்தலத்தில் தவம் செய்து, கிருஷ்ணரின் விசுவரூப தரிசனத்தை அவர் கண்டார். இந்த கிருஷ்ணரின் பெயர் தூதஹரி எனப்படும். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது விஸ்வருப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.

    25 அடி உயரம் உடைய அவரது சிலை அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறது. இந்த பிரமாண்ட சிலை சுதையால் செய்யப்பட்டது. எனவே இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆண்டுக்கு ஒரு தடவை தைலகாப்பு மட்டும் செய்யப்படுகிறது. இந்த பாண்டவ பெருமாளை வாசலில் நின்று சற்று குனிந்து பார்த்தால்தான் முழு உருவத்தையும் தரிசிக்க முடியும். வித்தியாசமான இவரை அவசியம் ஒவ்வொரு வரும் கிருஷ்ண ஜெயந்தியன்று தரிசிக்க வேண்டும்.

    ரோகிணி தேவி கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த கிருஷ்ணனை இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்த பிரச்சினைகள், துயரங்கள் இருந்தாலும் விலகி விடும் என்பது நம்பிக்கை.

    கிருஷ்ணர் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாத யோக சக்திகளை கொண்டு அருள்கிறார். எனவே இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72 ஆயிரம் அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்படும். சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    • மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும்.

    தமிழ்நாட்டில் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராஜகோபாலர் இக்கோவிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேட்டி அணிந்து அதையே தலைப்பாகையாகச் சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய குழந்தை அணிகலன்கள் அணிந்திருக்கிறார். உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன.

    தாயார் சன்னதி அருகே பெருமாள் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார். மதுரை கள்ளழகர் கோவில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்யம் படைக்கப்படுகிறது. ஒருசமயம் கிருஷ்ணன், யமுனையில் நீராடிக்கொண்டிருந்த கோபியருக்கு இடையே ஒரு போட்டி வைத்தார். கோபியர் நீராடிவிட்டு தங்களது ஆடை, ஆபரணங்களை சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டி அந்த போட்டி தொடங்கியதும், கிருஷ்ணர், ஒரு கோபியின் கம்மலை எடுத்து அணிந்து கொண்டார்.

    கோபியர்களோ அதைக் கவனிக்காமல் தேடிக் கொண்டே இருந்தனர். இறுதியில் கண்ணனின் காதில் அது இருக்கும் அழகைப் பார்த்து நகைத்து, ஆனந்தம் கொண்டனர். இதன் அடிப்படையில் இங்கு ராஜகோபாலர் வலது காதில் குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அணிந்திருக்கிறார். இவருக்கு பால் பிரதான நைவேத்யமாக படைக்கப்படுகிறது. இதையே பிரசாதமாகவும் தருகின்றனர். இத்தலத்தில் உள்ள பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும். இங்குள்ள துர்க்கைக்கு ராகு காலத்தில் விசேஷ பூஜை, வழிபாடு நடக்கிறது. புத்திர பாக்கியத்திற்காக இவளிடம் தொட்டில் வளையம் கட்டும் வழக்கமும் உள்ளது.

    • மாமன் சகுனியின் துர்போதனையின்படி, திருதராஷ்டிரன் மூலமாக பாண்டவர்களுக்கு பொழுது போக்காக சதுரங்கம் ஆட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
    • துரியோதனன், நீங்கள் எல்லாம் இனி என் அடிமைகள். திரவுபதியும் எங்களுக்கு ஏவல் செய்ய வேண்டியவள் என்று சொல்லி கைகொட்டிச் சிரித்தான்.

    துரியோதனன் பாண்டவர்களுக்கு எப்படியாவது தீங்கு இழைக்க வேண்டும் என்று துடித்தான். மாமன் சகுனியின் துர்போதனையின்படி, திருதராஷ்டிரன் மூலமாக பாண்டவர்களுக்கு பொழுது போக்காக சதுரங்கம் ஆட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் விருப்பமில்லாவிடினும், பெரியய்யாவின் அழைப்பை தட்ட முடியாமல் அவர்கள் வந்தனர். சகுனி தன் தீய எண்ணத்தை மறைத்து உதட்டில் தோனொழுகப் பேசி தர்மரை தன்னுடன் சூதாடுவதற்கு இணங்க வைத்துவிட்டான்.

    சகுனி பகடைக் காய்கள் உருட்டுவதில் மகா நிபுணன். தருமர் ஆடுகள், மாடுகள், குதிரைகள், யானைகள், அணிகள், மணிகள், அளவில்லாத பொற்குவியல்கள் என்று வரிசையாகப் பணயம் வைத்து ஆடித் தோற்றுக் கொண்டே போனார். முடிவில் தம்பிமார்களை வைத்து ஆடினார். அதிலும் சகுனி ஜெயித்தான். ஆட்டத்தில் தோற்றதை எல்லாம் மீட்க வேண்டும் என்ற வேகத்தில் திரவுபதியை பணயம் வைத்து ஆடி அதிலும் தோற்றார். முடிவாக சகுனி, உன் நாட்டை வைத்து ஆடு. நீ இழந்ததையெல்லாம் மீண்டும் பெறலாம் என்று தூண்டினான். அவரும் மதிமயங்கி நாட்டையே பணயம் வைத்து ஆடித் தோல்வி அடைந்தார்.

    துரியோதனன், நீங்கள் எல்லாம் இனி என் அடிமைகள். திரவுபதியும் எங்களுக்கு ஏவல் செய்ய வேண்டியவள் என்று சொல்லி கைகொட்டிச் சிரித்தான். திரவுபதியின் மீது அவன் மனதில் முன்பே முண்டியிருந்த கோபத்தீயை அணைத்துக் கொள்ள இதுவே நேரம் என்று எண்ணி அவளை சபைக்கு கொண்டு வருமாறு தம்பி துச்சாதனிடம் கட்டளையிட்டான். அவனும் மிக மகிழ்ச்சியோடு புறப்பட்டு போய் திரவுபதியை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து துரியோதனன் முன் நிறுத்தினான்.

    துரியோதனன், அவளை துகிலுறிக்குமாறு துச்சாதனிடம் சொன்னான். அந்த துஷ்டனும் சிறிதும் இரக்கமில்லாமல் திரவுபதியின் புடவை தலைப்பை இழுத்து இழுக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் எல்லாம் செயலற்று, வாய்மூடி ஊமைகளாயினர்.

    திரவுபதி இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி, ஹரி ஹரி கிருஷ்ணா, அபயம்! அபயம்! நீதான் எனக்கு துணை என ஓலமிட்டாள். அந்த அனாதரட்சகன் உடனே கருணை புரிய, திரவுபதியின் புடவை வளர்ந்து கொண்டே போனது. துச்சாதனன் அதைப்பற்றி இழுத்து இழுத்து போட்ட புடவை மலைபோல் கிடக்க அவன் கை ஓய்ந்து, கீழே சாய்ந்தான்.

    பீஷ்மப் பிதாமகன் போன்றவர்கள் குறுக்கிட்டு திருதராஷ்டிரனிடம் பாண்டவர், சூதாட்டத்தில் இழந்த நாட்டை அவர்களிடம் ஒப்படைப்பமே முறை என நல்லுரை கூறினார்கள். ஆனால் பிடிவாதமாக மறுத்த துரியோதனன், முடிவாக பாண்டவர்கள் பதினான்கு ஆண்டுகள் ஆரண்யவாசமும், 21 வருடம் அக்ஞாத வாசமும் (அதாவது யாரும் அறியாமல் மறைந்து வாழ்வது) போய்விட்டு திரும்பினால் அவர்களுக்குரிய பங்கை திருப்பித் தருவதாக ஒப்புக் கொண்டான்.

    • பெண்கள் பகுதியில் கடைசியாக கரையை அடைந்த திரவுபதி, கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக் கொண்டிருக்கிறான்! என நின்று யோசித்தாள்.
    • பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது.

    ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த குளத்தில் நீராடினர். அனைவரும் கரையேறிய பின்பும் கிருஷ்ணர் நீரிலேயே இருந்தார். கண்ணா, சீக்கிரம் வா! என்று குரல் கொடுத்துவிட்டு அர்ஜுனன் உலர் ஆடையை அணிந்து கொள்ளப் போய்விட்டான்.

    பெண்கள் பகுதியில் கடைசியாக கரையை அடைந்த திரவுபதி, கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக் கொண்டிருக்கிறான்! என நின்று யோசித்தாள். அவன் கட்டியிருந்த உடை நீச்சலடிக்கும்போது நழுவி விழுந்திருக்கும். அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான் என யூகம் செய்து புரிந்து கொண்டாள்.

    உடனே தன் புடவையில் ஒரு பகுதியை கிழித்து கண்ணனை நோக்கி வீசிவிட்டு நகர்ந்தாள். திரவுபதி கொடுத்த துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான். இப்படி கண்ணன் அணிந்து கொள்ள திரவுபதி செய்த உதவியே, துரியோதனன் அவையில் அவளை துச்சாதனன் துகிலுரிய முற்பட்டபோது, அவளது மானம் காக்கப்பட பிரதியுபகாரமாக அமைந்தது என சான்றோர்கள் கூறுகின்றனர். பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது.

    • ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.
    • ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ண பரமாத்வை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

    ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை வரையவும்.

    ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.

    கிருஷ்ணகமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

    மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.

    அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.

    பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும்.

    சந்தனம், தாழம்பூ, மல்லிகை, சம்பா, சாய்வாலா, ஆம்பர் மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.

    வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும்.

    ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ண பகவான் அஷ்டமி திதியில், ஸ்ராவண மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் நடுஇரவில், ரோகிணி நட்சத்திரத்தில் வ்ருஷப ராசியில் பிறந்தார்.

    கோகுலாஷ்டமி திதியில், கிருஷ்ண தத்துவம் இப்பூவுலகில் 1000 மடங்கு அதிகம் ஆகியுள்ளது. மீதி நாட்களைக்காட்டிலும் அன்றைக்கு கிருஷ்ண தத்துவம் அதிக செயலாற்றலைக் கொண்டிருப்பதால் ஓம் நமோ பகவதே வாசுதேவாய என நாமஜபம் செய்தால் கிருஷ்ணரின் அருள் நமக்கு அதிக பலனைக் கொடுக்கும்.

    • நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில் விரதம் இருக்க வேண்டும்.
    • பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன.

    நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில், விரதம் இருக்க வேண்டும். நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம் அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம்.

    தஹிகலா என்றால் என்ன தெரியுமா? பல திண்பண்டங்களுடன் தயிர் சேர்த்தல், பாலையும் வெண்ணையையும் கலா என்பர். வரஜபூமியில் கோபர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டுசாதத்தோடு தன்னுடையதையும் சேர்த்து உண்பான். இந்த பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன.

    மக்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு வெண்ணை மிகவும் பிடித்தமானது என நினைத்து அதை கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்கின்றனர். ஆனால் உண்மையில் கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் வெண்ணையை விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள். தவறான முறையில் வரி விதித்து மக்களைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணையைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான். அவ்வாறு எதிர்த்துப் போராடும் குணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் கற்பித்தான்.

    மக்கள் அன்று முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து நடு இரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தையோ அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணை பால் போன்ற பலவிதமான பண்டங்களை உண்ணுவார்கள். பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கும் வ்ரஜபூமியில் ஸ்ரீகிருஷ்ணன் தனது உணவுடன் தன் சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் ஒன்றாகக் கலந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இதைத்தான் நம் ஊரில் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.

    ×