search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் சமூகம்"

    • நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல இளைஞர்களின் சக்தி முக்கியம்.
    • இளைஞர்களின் மீது தான் நாடே நம்பிக்கை கொண்டுள்ளது.

    தங்கங்களே நாளை தலைவர்களே

    நம் தாயும் மொழியும் கண்கள்

    சிங்கங்களே வாழும் தெய்வங்களே

    நம் தேசம் காப்பவர் நீங்கள்

    -என்று மாணவர்கள் சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் தான் இவை. இது போன்ற எண்ணற்ற கவிஞர்கள், அறிஞர்கள் மட்டுமின்றி தேசத்தின் தலைவர்களும் நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் தான் என்பதில் உறுதியான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு மாணவர்களின் அறிவும், செயல்திறனும் உள்ளது.

    நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல இளைஞர்களின் சக்தி முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் இன்றும் உலக அரங்கில் இளைஞர்கள் அதிகம் உள்ள தேசமாக இந்தியா இருக்கிறது. அவர்களால் எந்த சவால்களையும் எளிதாக வென்று விட முடியும். எனவே மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மீது தான் நாடே நம்பிக்கை கொண்டு உள்ளது. ஆனால் சமீபகாலமாக மாணவர்கள் இடையே எழுந்து உள்ள மோதல் போக்கு பல்வேறு தரப்பினருக்கும் கவலை அளிக்க கூடியதாக மாறி இருக்கிறது.

    இன்றைய சூழலில் குடும்பங்களில் ஒன்று அல்லது 2 குழந்தைகள் தான் இருக்கிறார்கள். அவர்களை கையாளுவதில் மென்மையான போக்கே பெற்றோரிடம் இருக்கிறது. மேலும் அவர்களை முழு நேரமும் கண்காணித்து, கண்டிக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனாலும் பிள்ளைகள் விரும்புவதை செய்து கொடுக்கவும், அவர்களின் எதிர்காலத்துக்காகவும் வேலை, வாழ்வாதாரம் என்று ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் பிள்ளைகள் தன்வசதி ஒன்றையே பெரிதாக கருதிக் கொள்கிறார்கள். இதனால் சமூக ஓட்டத்தில் மற்றவர்களோடு இணக்கமாக இருப்பதற்கு கற்றுக் கொள்ள தவறி விடுகிறார்கள்.

    ஆனால் மாணவ- மாணவிகளின் பெரும் பகுதி நேரம் பள்ளிக் கூடத்திலேயே கழிகிறது. எனவே அவர்களை கண்காணிப்பது, கையாளுவது என்பது ஆசிரியர்களுக்கு இயல்பான ஒன்றாக அமைந்து இருக்கிறது. ஆனால் அதை அவர்களால் வெற்றிகரமாக செயல்படுத்த முடிகிறதா என்றால் சந்தேகம் தான். மேலும் மாணவ- மாணவிகளை கையாளுவது தொடர்பாக ஆசிரியர்களுக்கு அவ்வப்போது வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.

    அதோடு இன்றைய மாணவ- மாணவிகளிடம் இருக்கிற தைரியம், மூர்க்கமான போக்கு போன்றவை ஆசிரியர்களையே அச்சம் கொள்ள வைப்பதாக இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. இதனால் வகுப்பறைகளில் பாடங்களை நடத்தி முடித்து வெளியேறுவது என்பதே சவால் நிறைந்ததாக மாறி இருக்கிறது.

    மேலும் வகுப்பறையில், மாணவ-மாணவிகளிடம் காணும் மாறுபாடுகளை சரி செய்வது குறைந்து வருகிறது. மேலும் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு இருந்த பயம், மரியாதை இன்றைக்கு அர்த்தமற்றதாக மாறி வருவதை காணமுடிகிறது. அந்த வகையில் வீட்டிலும், பள்ளியிலும் பரவலாக மாணவர்களுக்கு ஒரு கண்டிப்பற்ற சூழல் நிலவுகிறது. அதில் சில மாணவர்கள் குழு மனப்பான்மையில் ஒன்று சேரும் போது வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

    அதுமிகமோசமாகி வீடு புகுந்து தாக்குவது போன்ற குற்றங்களை செய்யும் அளவிற்கு தற்போது வளர்ந்து நிற்கிறது. அது மாணவ சமுதாயத்தின் மீதே தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மேலும் வன்முறையால் அழிவு தான் நிகழும். ஆக்கப்பூர்வமாக எதுவும் நடக்காது. மேலும் யார் மீதும் வன்முறை எண்ணம் இருக்க கூடாது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் அதிக எண்ணிக்கை யில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதற்காக நடைபெற்ற கவுன்சிலிங்கில் 40 ஆசிரியை கள் உள்பட 122 பேர், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வேண்டாம் என்று புறக்கணித்து விட்டனர். ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பள்ளியில் நிர்வாக சிக்கல்கள் எழுகிறது. இது ஆசிரியர்களின் கற்பித்தல் பணியில் தொய்வை ஏற்படுத்துகிறது. பள்ளிச் சூழலிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகள், கடிவாளம் இல்லாத குதிரை போல் ஆகி விடுகிறது. அது ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை வெகுவாக பாதிக்கப் படுகிறது. எனவே தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.

    இது மட்டுமின்றி மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் பெற்றோர்- ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது. அப்போது தான் மாணவ- மாணவிகளின் படிப்பு மட்டுமின்றி சமூக நலப் பண்புகளை மேம்படுத்தி நல்லிணக்கத்தை கொண்டு வருவதில் வெற்றி காண முடியும். அதற்கான தொழில்நுட்ப தொடர்பு வசதிகள் தற்போது துணையாக இருக்கிறது. அதன் வழியாக கலந்துரையாடல் நிகழ்கிற போது மாணவர்கள் மத்தியில் இயல்பான மாற்றங்கள் ஏற்பட வழி ஏற்படும்.

    தற்போது டி.வி., செல்போன், சமூக வலைத்தளங்கள், சினிமா, அரவணைப்பு அற்ற நிலை என்று ஏராளமான புறச்சூழல்கள் உள்ளன. அவை மாணவர்களிடம் ஆக்ரோஷத்தையும், வன்முறை உணர்ச்சியையும் தூண்டுவதாக அமைந்து இருக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழகத்தில் சிறுவர்கள் குற்றங்களில் ஈடுபட்டதாக 2019-ம் ஆண்டு - 2,686 வழக்கு, 2020-ம் ஆண்டு - 3,394 வழக்கு, 2021-ம் ஆண்டு - 2,212 வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அதோடு பள்ளி மாணவர்களிடம் வேகமாக பரவும் தவறான பழக்கம் அவர்களின் மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அது போன்ற நிலையில் மாணவர்களுக்கு வழிகாட்டவும், நெறிப்படுத்தி கண்டிக்க கூடிய தோழமைகள் குறைந்து விட்டனர். இதனால் சில மாணவர்கள் மனம் போன போக்கில் எதிர்காலம் குறித்த அச்சமின்றி குற்றம் செய்ய துணிகின்றனர்.

    இதனால் மாணவர் சமூகம் எங்கே செல்கிறது என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. மாணவர்களின் அடையாளம் என்பது கல்வி கற்பது மட்டும் தான். எனவே வகுப்பறை சூழலை கொண்டாடுவதன் மூலம் தான் மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை உணர்த்த வேண்டும். அதை விடுத்து வன்முறை எண்ணத்தில் வேறுவிதமான செயல்களில் ஈடுபட்டால் எதிர்காலம் பாதிக்கும்.

    எனவே மாணவர்களை சரிப்படுத்த அன்பான வார்த்தைகள் எந்த அளவிற்கு அவசியமோ, அதே அளவிற்கு கண்டிப்பான பார்வையும் மிகமிக அவசியம். வேறுபாடுகளை மறந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றத் தான் சீருடை வழங்கப்படுகிறது. அதற்கு எப்போதும் உயர்ந்த மரியாதை உண்டு. அத்தகைய சீருடை அணிந்த மாணவ- மாணவிகள் அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உயர்கல்வி கற்று புகழ் பெற வேண்டும். அது தான் வீட்டுக்கும், நாட்டுக்கும் மட்டுமல்ல மனித சமூகத்துக்கும் நலம் அளிக்கும் என்பதை மாணவ- மாணவிகள் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

    ×