search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகிசாசுரன்"

    • ராமர் ராவணனோடு போரிட்ட ஒன்பது நாட்கள்தான் நவராத்திரி என்று கூறப்படுகிறது.
    • தச என்றால் பத்து. ஹரா என்றால் நீக்குதல் பத்துத் தலை கொண்ட ராவணை இவ்வுலகிலிருந்து நீக்குவதற்காக யுத்தம் நடந்த காலக் கட்டத்தைத்தான் தசரா என்று அழைக்கின்றோம்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் 12 நாட்கள் தசரா விழா நிகழ்த்தப்படுகிறது. இவ்விழாவில் கொடியேற்றல், காப்புக்கட்டுதல், நோன்பிருத்தல், வேடம் புனைதல், காணிக்கை பெறுதல், அம்மன் மகிசனை வதம் செய்தல், காப்பு வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான வழிபாடுகளைக் காண முடிகிறது.

    முன்னொரு காலத்தில் வரமுனி என்று ஒரு முனிவன் தவ வலிமைமிக்கவனாக வாழ்ந்து வந்தான். எனினும் ஆணவத்தால் கட்டுண்டு அறிவுக் கண்ணை இழந்தவனாயிருந்தான். ஒருநாள் அவனது இருப்பிடம் வழியாக அகத்திய முனிவர் வந்தார். தன்னுடைய ஆணவத்தால் வரமுனி அகத்திய முனிவரை மதிக்கத் தவறியதோட அவமரியாதையும் செய்தார். மனம் வெறுத்த அகத்தியர் வரமுனியை நோக்கி, எருமைத்தலையும் மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக எனச் சாபமிட்டார்.

    அகத்திய முனிவரின் சாபத்தால் வரமுனி எருமைத்தலையும் மனித உடலும் பெற்று மகிசாசுரனாக மாறினான். தனது விடா முயற்சியால் பற்பல வரங்களைப் பெற்றான். முனிவனாக வாழ்வைத் தொடங்கிய வரமுனி தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினான். மகிசாசுரனின் இடையூறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி, மகிசனின் கொடுமைகளை நீக்கித் தர வேண்டினர். அவர்கள் நடத்திய வேள்வியில் தோன்றிய பராசக்தி மகிசாசுரனை அழிக்கப் புறப்பட்டாள். மகிசனை அழித்த பத்தாம் நாள் தசரா விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    தேவர்கள், மகிசாசுரன் செய்த துன்பத்தைச் சிவனிடம் முறையிட்டனர். அவன் மேல் சிவனிடம் உண்டான சீற்றம் பெண்ணுருவாய்த் திரண்டது. அதுவே காளியுருவம்.

    கர்நாடகத்தில் நவராத்திரிப் பண்டிகையைச் சாமுண்டேசுவரிக்கு விழா எடுத்துத் தசரா என்று அழைக்கிறார்கள். இதை அவர்கள் தசராத்திரி, மகாநவமி என்றும் அழைப்பதுண்டு. சக்திப் பூசை இதில் சிறப்பாக இடம் பெறுகிறது. ஒன்பது வடிவங்களைக் கொண்டவளாகத் தேவி பூசிக்கப்படுகிறாள்.

    எருமை முகம் கொண்ட மகிசாசுரன் என்ற அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்த, தேவர்கள் மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் கோபம் அக்னி ஜுவாலையாகப் பிறந்து ஒன்றாக இணைய, அதிலிருந்து துர்க்கா தேவி தோன்றினாள். துர்க்கைக்குப் பத்துக்கரங்கள். ஒவ்வொரு கரத்திலும் வெவ்வேறு ஆயுதங்கள், பல்வேறு கடவுள் அளித்தவை. என்றாலும் சிவபெருமான் அளித்த திரிசூலத்துக்குத்தான் மகிசாசுரனை அழித்த பெருமை கிடைத்தது. மகிசனைத் துர்க்கை வதம் செய்த நாள்தான் வெற்றித் திருநாள் என்று பொருள் கொண்ட விஜயதசமி. மேற்கு வங்கத்தில் துர்க்கா பூஜா இதுவே நவராத்திரியாகும்.

    ராமர் ராவணனோடு போரிட்ட ஒன்பது நாட்கள்தான் நவராத்திரி என்று கூறப்படுகிறது. ராவணனை ராமபிரான் வென்ற பத்தாவது நாளைத்தான் விஜய தசமியாகக் கொண்டாடுகிறோம் என்ற நம்பிக்கையும் நம் நாட்டில் பரவலாக உள்ளது. நவராத்திரியைத் தசராப்பண்டிகை என்று அழைப்பதே இந்த நம்பிக்கைக்கு வலுவூட்டுவதாக இருக்கிறது. தச என்றால் பத்து. ஹரா என்றால் நீக்குதல் பத்துத் தலை கொண்ட ராவணை இவ்வுலகிலிருந்து நீக்குவதற்காக யுத்தம் நடந்த காலக் கட்டத்தைத்தான் தசரா என்று அழைக்கின்றோம்.

    மகிசாசுரன் என்ற அரக்கன் கடுந்தவம் புரிந்து பிரம்மாவிடமிருந்து தனக்குத் தேவர், மனிதர், அசுரர்களால் மரணம் ஏற்படக்கூடாது என்று வாக்கினைப் பெற்றான். ஆண்களால் மரணம் நேரிடக்கூடாது என்று அந்த அரக்கன் வரம் பெற்றமையால், சண்டிதேவியால் அவனுக்கு அழிவு நேரிடுகிறது. தேவி ஒன்பது நாட்கள் கொலுவிலிருந்து பத்தாவது நாள் மகிசாசுரனை வதம் செய்ததால், தேவி மகிசாசுரமர்த்தினி என அழைக்கப்படுகிறாள். இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி ஆகிய சக்திகளின் வடிவமாகத் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளையும் நவராத்திரியில் வழிபடுவது தமிழ்நாட்டவர் மரபு. நவராத்திரி முடிந்து, விஜயதசமியன்று அந்திவேளையில் தேவி மகிசாசுரனை அழித்தாள்.

    மகிசம் என்றால் எருமை என்று பொருள். மகிசாசுரன் என்றால் எருமைத் தலையுடைய அசுரன் என்று பொருள். இம்மகிசாசுரனின் இடையூறுகளைத் தாங்க இயலாத வானவர்களும் முனிவர்களும் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி, மகிசாசுரனின் கொடுமைகளை நீக்கித்தர வேண்டினர். மாமுனிவர்களின் கடுந்தவத்தைக் கண்டு உள்ளம் இரங்கினாள் அன்னை. மாமுனிவர்கள் நடத்திய வேள்விக்கு இடையூறு நேராது மாய அரண் ஒன்றை அன்னை உருவாக்கினாள். மாமுனிவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்து தங்கள் வேள்வினை முறைப்படி தொடர்ந்தனர். அவர்கள் நடத்திய வேள்வியில் ஒரு பெண் மகவு தோன்றியது. அது லலிதாம்பிகை என அழைக்கப்பட்டது. அந்தப் பெண் மகவு ஒன்பது நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து, பத்தாம் நாள் அன்னை பராசக்தி லலிதாம்பிகை என்ற பெயரில் மகிசாசுரனை அழிக்கப் புறப்பட்டாள். மகிசாசுரனை அழித்த பத்தாம் நாள் தசரா என்றழைக்கப்படுகிறது.

    மேலே கூறப்பட்ட கதைகளுள் ஒன்று மட்டும் தசரா விழாவை ராவண வதத்தோடு தொடர்புபடுத்துகிறது. ஏனையவை யாவும் தேவி மகிசாசுரனை வதம் செய்த நிகழ்ச்சியோடு தசராவைத் தொடர்பு படுத்துகின்றன. மேலும் நவராத்திரி நாட்களில் தேவியே வெவ்வேறு சக்திகளின் வடிவில் கொலுவிருத்தல் மரபாக உள்ளது. தவிர இந்தியாவின் பெரும்பான்மைப் பகுதிகளில் இவ்விழாவைச் சக்தி வழிபாடாகவே மக்கள் கொண்டாடுகின்றனர்.

    எனவே இவ்விழாவைச் சக்தி வழிபாட்டுடன் தொடர்புடையதாகக் கொள்வதே ஏற்புடையதாகத் தோன்றுகிறது. குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலிலும் மகிசனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியை மையமாகக் கொண்டே நவராத்திரி விழாக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டுத் தெய்வம் அவதாரம் எடுக்கும் என்ற இந்து சமயக் கொள்கை உட்பொருளாக வெளிப்படுகிறது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த பிரதமை நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கி, பன்னிரு நாட்கள் நவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவே தசரா விழாவாகும். இவ்விழாவின் பத்தாம் நாளன்று மகிசனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய அம்சமாகப் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து வழிபடுகின்றனர்.

    தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் தென்பகுதி எங்கும் விழாக்கோலம் பூணும் வகையில் இத்தசரா விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவைக் கிராமியத் தன்மையுடன் விளங்கும் கலை விழா என்று கூறலாம். திருச்செந்தூரில் கந்தசஷ்டியின் போது கடற்கரையில் மிகப் பெரியளவில் பக்தர்கள் கலந்து கொள்ளுதலைப் போன்று இவ்விழாவிலும் கலந்து கொள்கின்றனர்.

    காப்புக் கட்டுவது திருக்கோவிலின் மரபு. கொடியேற்றி அது இறக்கப்படும் வரை இவ்வூரார் பிறவூர்களுக்குச் செல்லுதல் கூடாதென்றும் செல்ல நேரின் காப்பவிழக்கும் முன் திரும்ப வேண்டுமென்றும் கூறப்படுகின்றது. காப்புத்தடை நாட்டுப்புற மக்களிடையே ஊறிப்போன வழக்காறு. ஏனைய தீய சக்திகளிலிருந்து காப்பாற்றும் நோக்குடன் இதனைக் கட்டுவதாகக் கருதப்படுகிறது.

    முத்தாராம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் அமாவாசையன்று இரவு எட்டு மணிக்குக் கருவறைத் தெய்வங்களான அம்மனுக்கும் சுவாமிக்கும் பூசை நடத்தப்பட்டுக் காப்புக் கட்டப்படுகிறது. பின்னர் அக்கோவிலில் உள்ள பிற தெய்வங்களுக்கும் காப்புக் கட்டப்படுகிறது. தெய்வங்களுக்குக் காப்புக் கட்டுதலைப் பூசாரியே செய்கிறார். கோவில் பூசாரிகளுக்கும் காப்புக் கட்டப்படுகிறது. இதனை அவர்கள் ஒருவருக்கு மற்றவர் எனக் கட்டிக் கொள்கின்றனர். தெய்வங்களுக்குக் காப்புக் கட்டப்பட்ட மறுநாள் கொடியேற்றத்திற்குப் பின் பக்தர்களுக்குக் கட்டப்படுகிறது. காப்புக் கட்டிய பிறகு பக்தர்கள் நோன்பு கடைப்பிடிக்கத் தொடங்குகின்றனர்.

    பூசாரிகள் காப்புக் கட்டிய பின் அவர்கள் குடும்பத்தில் ஏதேனும் தீட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்தாலும் காப்புக் கட்டியவரைத் தீட்டுக் கட்டுப்படுத்தாது. அவர்கள் விழாச் சடங்குகளில் கலந்து கொள்ளலாம். காப்பு அவிழ்க்கும் வரை அவர்களுக்கு எல்லாச் சலுகைகளும் உண்டு.

    காப்புக் கட்டிய நாளன்று முளைப்பாரி வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பூசாரி கோவில் சார்பாக ஒரு முளைப்பாரி மட்டும் வைக்கிறார். முளை வைக்க விரும்புவோருக்கு அந்நாளில் முளைப்பாரிகளை வைக்கின்றனர். பதினொரு நாட்கள் இம்முளைப்பாரிகள் சிதம்பரேஸ்வரர் கோவிலில் வளர்க்கப்படுகின்றன. சூரசம்ஹாரத்தன்று இவை முத்தாரம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, நண்பகல் பூசை முடிந்த பிறகு எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகின்றன.

    காப்புக் கட்டிய நாள் முதல் தசராப் பக்தர்கள் நோன்பு மேற்கொள்கின்றனர். சூரசம்ஹாரம் வரை இந்நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. ஒருவேளை உண்டு, தூய்மை மேற்கெண்டு, தனியிடத்தில் தங்கி, இந்நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

    தசரா விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி கொடியேற்றம் ஆகும்.

    கொடியேற்று விழா, மும்மலங்களிலே மூழ்கிக் கிடக்கும் உயிர் அவற்றிலிருந்து விடுவித்துக் கொள்ள அருளை நாடுவதைக் குறிக்கிறது. பஞ்சாட்சரத்தினால் வீடு பேற்றை அடைவிப்பதைக் காட்டுவது கொடியேற்றுவிழா.

    முத்தாரம்மன் கோவிலில் பெருந்தெய்வ வழிபாட்டு மரபிற்கேற்பக் கொடியேற்றமும் பன்னிருநாள் திருவிழாவும் தசராவின்போது நிகழ்கின்றன. திருவிழா நாட்கள் யாவற்றிலும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    கொடியேற்றத்திற்கு முன்னர் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலம் வருகிறது. ஊர் முழுவதும் வீதிஉலாச் செல்லும் கொடிப்பட்டம் மீண்டும் கோவிலுக்குள் திரும்பி வருகிற வேளையில் ஏராளமான பக்தர்கள் அருள் பெற்று ஆவேசக் கூச்சலிடுகின்றனர்.

    கொடிப்பட்டம் வெண்மையான கச்சைத் துணியால் செய்யப்பட்டதாகும். இத்துணி பதினெட்டு முழ அகலமும் ஐம்பெத்தொரு முழ நீளமும் கொண்டது. கொடியேற்றப் பயன்படும் நூல்கயிற்றின் அளவு இருபத்தேழு முழம் ஆகும்.

    வீதி உலாச் சென்று வந்த கொடிப் பட்டம் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டதும், அம்மனுக்குப் பூசை செய்யப்படுகிறது. அதன்பின் கொடிமரத்திற்கு வழிபாடு செய்யப்படுகிறது. கொடி மரத்திற்கு முன்னால் உள்ள பலிபீடத்தின் முன் கொடி வைக்கப்பட்டு, சிறிய யாகமும் பூசையும் நடத்தப்படுகின்றன. பின்னர்க் கொடிக்குச் சிறப்புப் பூசைகளும் தீபாராதனைகளும் செய்யப்பட்டு, கொடி ஏற்றப்படுகிறது. கயிற்றில் கட்டப்பட்ட கொடி மேளதாளத்தோடும் பெண்களின் குலவைச் சத்தத்தோடும் மேலே ஏற்றப்படுகிறது.

    கொடி மரத்தின் கீழ்ப்புறத்தில் நாற்புறங்களிலும் தர்ப்பைப் புல் சிறுசிறு பகுதிகளாக முடிச்சிடப்பட்டு கட்டப்படுகிறது. முடிச்சிகளுக்குள் என்ற வடிவில் மர அச்சுக்கள் செருகி வைக்கப்படுகின்றன.

    தர்ப்பைப் புல்லைச் சுற்றிக் கீழ்ப்புறமாகச் சிறப்பு நிறக் கதர்த்துணி ஆடைபோல் கட்டப்படுகிறது. அதன்பின் பீடப்பகுதியில் அபிஷேகம் நடைபெறுகிறது. பலிபீடத்திற்கும் சேர்த்தே பூசை நடைபெறுகிறது. மஞ்சள் நீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், திருநீறு, குங்குமம் ஆகியவற்றால் தனித் தனியாக அபிஷேகம் நடைபெற்று, ஒவ்வொருமுறையும் தீபாராதனையும் நடைபெறுகிறது.

    கொடிமரத்தைச் சுற்றிலும் சிறு குடங்கள் வைக்கப்பட்டு, அவற்றில் உள்ள புனித நீரால் கொடி மரப்பீடமும் பலி பீடமும் நீராட்டப்படுகின்றன. சந்தனமும் குங்குமமும் பூசப்படுகின்றன. பின்னர்க் கொடி மரப் பீடத்தைச் சுற்றிப் பட்டுத் துணி கட்டப்படுகிறது. தொடர்ந்து கொடி மரம், பலிபீடம் ஆகியவற்றிற்கு மாலைகள் சூட்டப்பட்டு, நாக வடிவ விளக்கு முதலான பல்வேறு விளக்குகளால் தீபராதனை செய்யப்படுகிறது.

    பூசாரிகள் இருவர் கொடி மரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமர்ந்து சந்தனத்தால் சிறு சிலை போன்ற உருவத்தைச் செய்கின்றனர். அதை அம்மனாகப் பாவித்துச் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பஞ்சாமிர்தம் முதலானவற்றைப் படைத்து, வைத்துப் பூசை செய்கின்றனர். பின்னர் வெண்பொங்கல் மட்டும் கொடி மரத்தைச் சுற்றிக் கீழே நான்குபுறமும் வைக்கப்படுகிறது. தொடர்ந்த மீண்டும் தீபாராதனை செய்யப்பட்டு, பூசைப் பொருட்கள் அம்மன் சந்நிதிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

    கொடி பதினோராம் நாளில் இறக்கப்படுகிறது. ஏற்றியவர்களே கொடியை இறக்க வேண்டும் என்பது மரபாகும். கொடியேற்றம் நேரத்தைப் பூசாரிகள் பஞ்சாங்கம் பார்த்துக் கணிக்கின்றனர். ஆனால் கொடி இறக்கும்போது நாள், நேரம் பார்ப்பதில்லை.

    கொடித்துணியைப் பூசாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். கொடியேற்றத்திற்காகக் கொடித்துணி, கொடிக்கயிறு இவற்றை வாங்கும் செலவைக் கட்டளைதாரர்களே ஏற்றுக் கொள்கின்றனர். இவை திருச்செந்தூரில் வாங்கப்படுகின்றன.

    கொடியேற்றத்தின் போது கட்டப்படும் தர்ப்பைப்புல் நாவிதன் இனத்தவரால் குளம், ஆறு போன்ற பகுதிகளிலிருந்து எடுத்து வரப்படுகிறது. தர்ப்பைப்புல் மீது துணி கட்டுவதைப் பரிவட்டம் கட்டல் என்று கூறுகின்றனர்.

    தர்ப்பைப்புல் கட்டுதல் செழிப்பின் அடையாளமாகவும் மர அச்சுத் தீட்டுக் கழித்தலுக்காகவும் பிற தீய சக்திகள் தீண்டாமலிருக்கவும் வைக்கப்படுகின்றன.

    கொடியேற்றத்தின் போது கட்டப்படும் தர்ப்பைப்புல் நாவிதன் இனத்தவரால் குளம், ஆறு போன்ற பகுதிகளிலிருந்து எடுத்து வரப்படுகிறது. தர்ப்பைப்புல் மீது துணி கட்டுவதைப் பரிவட்டம் கட்டல் என்று கூறுகின்றனர்.

    தர்ப்பைப் புல் கட்டுதல் செழிப்பின் அடையாளமாகவும் மர அச்சுத் தீட்டுக் கழித்தலுக்காகவும் பிற தீய சக்திகள் தீண்டாமலிருக்கவும் வைக்கப்படுகின்றன.

    கொடியேற்றத்திற்குத் தத்துவ விளக்கம் கூறப்படுகிறது. தர்ப்பைப்புல் பாசமாகிய சுத்தமாயையை உணர்த்துவது. கொடித்துணியில் வரையப் பெற்ற தெய்வம் உயிரை (ஆன்மாவை) உணர்த்துவது. கொடி மரத்தில் தெய்வத்தின் உருவம் வரையப்பட்ட கொடி ஏறுவது உயிர் சுத்தமாயை துணைக் கொண்டு ஏனைய ஆதாரங்கள் வழியே முறையே மேலே ஏறுவதைக் குறிப்பது. மேலே உச்சியைச் சென்றடைவது உயிர் பேரானந்த நிலையில் நிற்பதனை உணர்த்துவதாகும். இவ்வாறு கோயிற்களஞ்சியம் கொடி மரத் தத்துவத்தைக் கூறுகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்களுக்குக் காப்புக் கட்டுதல் நிகழ்கிறது. நோன்பு மேற்கொண்டவர்களும் நேர்ச்சை செய்வோரும் வேடம் புனைவோரும் பக்தர்களும் வரிசையாகக் கோவிலுக்குள் சென்று காப்புக் கட்டிக் கொள்கின்றனர். தசராக் குழுவினர் கூட்டமாக வந்து காப்புக் கட்டிக் கொள்வதும் உண்டு.

    தசரா விழா நாட்களில் முத்தாரம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் வீதி உலா வருதல் சிறப்பாகக் கருதப்படுகிறது. துர்க்கை, விஸ்வகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதக்கிருஷ்ணர், மகிசாசுரமர்த்தினி, ஆனந்த நடராசர், கஜலட்சுமி, கலைமகள் ஆகிய கோலங்களில் அம்மன் தேரில் வீதி உலா வருகிறாள். பத்தாம் நாள் மகிசாசுரமர்த்தினி கோலம் கொண்டு சூரனை வதம் செய்கிறாள்.

    தசராவிற்கு அணி சேர்த்து அதனைத் தனிப்பெரும் விழாவாக வெளிப்படுத்துகிற சிறப்பு நிகழ்ச்சியாக இரண்டை குறிப்பிடலாம். அவை:

    1. சூரசாம்ஹாரம்

    2. வேடம் புனைதல்

    சூரசம்ஹாரம் என்று மக்களால் வழங்கப்படுகிற மகிசாசுர வதம் குலசேகரன்பட்டினத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. மகிசனை வதம் செய்து கொல்லும் இந்நிகழ்ச்சியே தசரா விழாவில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

    மகிசாசுரமர்த்தினி கோலத்தின் சிறப்புக் காரணமாக அதனை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.

    கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால் (சிலம்பு. வேட்டுவரி, 7) என்கிறது சிலப்பதிகாரம்.

    இக்கோலம் தமிழகக் கோவில்களில் பரவலாகச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் மகிசாசுரன், அவனை மாதகனம் செய்யும் கார்த்தியாயினி, இருதரப்புப்படைகள், போரின் உக்கிரம் ஆகியவற்றைக் கல்லில் அற்புதமாக வடித்துள்ளனர். அன்னையின் உருவம் செப்புச் சிலையாக வேதாரணியம், பட்டீச்சுவரம் முதலிய கோவில்களில் உருப் பெற்றிருக்கிறது.

    மகிசம் என்றால் மந்தம், மடமை, அறியாமை என்று பொருள்படும். அன்னையின் ஆற்றல் முழுவதும் இந்த அறியாமையும், அஞ்ஞானமும் ஒழிந்து ஞானம் பெருகச் செயல்படுகிறது.

    மகிசனை அழிப்பதற்காகத் தோன்றியவளே மகிசாசுரமர்த்தினி. குலசேகரன்பட்டினம் கோவிலில் பத்தாம் நாளன்று முத்தாரம்மன் மகிசனை அழிக்க மகிசாசுரமர்த்தினி கோலத்தில் புறப்படுகிறாள்.

    விழாவின் பத்தாம் நாளான சூரசம்ஹாரத்தன்று நண்பகல் கோவிலில் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் ஆகியோருக்கும் துணைத் தெய்வங்களுக்கும் அபிஷேகமும் அலங்காரங்களும் செய்யப்படுகின்றன. மேலும் சூரசம்ஹாரத்திற்குக் கொண்டு செல்லப்படுகிற சூலத்திற்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    அன்றைய தினம் நள்ளிரவுப் பன்னிரண்டு மணிக்கு மீண்டும் சூலத்திற்குப் பூசைகள் செய்யப்படுகின்றன. பின்னர் சூலம் பூசாரியால் கோவிலிலிருந்து தேர்மண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. தேர் மண்டபத்தில் உற்சவ மூர்த்தியான அம்மன் மகிசாசுரமர்த்தினி கோலத்தில் வதம் செய்யத் தயாராக இருக்கிறாள்.

    தேர் மண்டபத்திலிருந்து முதலில் மகிசாசுரன் புறப்படுகிறான். பின்னர் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி கோலம் கொண்ட முத்தாரம்மன் புறப்படுகிறாள். இருவரின் சப்பரங்களும் சிதம்பரேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் கடற்கரைச் சாலையில் வந்து சேர்கின்றன. கடற்கரைச் சாலையில் நான்கு பந்தல்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் முதல் பந்தலின் கீழ் அம்மன் வந்ததும், மகிசாசுரன் அம்மனை மூன்று முறை வலம் வருகிறான். பின்னர் அம்மனின் சப்பரத்திற்கும் மகிசனின் சப்பரத்திற்கும் இடையில் கயிறு பிடிக்கப்பட்டு, அக்கயிற்றின் வழியாக ராக்கட் வாணம் பற்றவைக்கப்பட்டுச் செலுத்தப்படுகிறது. அது கயிற்றின் இருமுனைகளுக்கும் இருமுறை சென்று வருகிறது. இச்செயல் அம்மனுக்கும் மகிசனுக்கும் இடையில் நடப்பது போலச் சித்தரிக்கப்படுகிறது.

    அம்மன் சப்பரத்திலிருந்து சூலாயுதம் புறப்பட்டு, மகிசனின் அசுரத் தலையைக் கொய்கிறது. அப்போது காளிவேடம் அணிந்த பக்தர்களும் தம் கையில் ஏந்திய சூலாயுதங்களுடன் மகிசனைக் கொல்ல ஆவேசமாக வருகின்றனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மீண்டும் நூறு அடி தொலைவில் உள்ள இரண்டாவது பந்தலுக்கு அம்மன் சப்பரம் நகரத் தொடங்கும் வேளையில் மகிசாசுரன் சிம்மத்தலையுடன் முன்னால் செல்கிறான். அம்மனின் சூலாயுதத்தால் மகிசனது சிம்மத்தலை வெட்டப்படுகிறது.

    மூன்றாவது பந்தலில் மகிசனின் எருமைத் தலை வெட்டப்படுகிறது. இறுதியில் மகிசன் சேவல் தலையுடன் நான்காவது பந்தலுக்குச் செல்கிறான். அங்குச் சேவல் தலை வெட்டப்படுகிறது. உடனே பக்தர்களின் ஆரவாரத்துடன் வாணவேடிக்கை முழங்குகிறது. அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ள கடற்கரை மேடையில் எழுந்தருளுகிறாள். வெற்றி வாகை சூடிய அம்மனைச் சாந்தப்படுத்தும் நோக்கத்துடன் அபிஷேக ஆராதனைகள் அம்மனுக்குச் செய்யப்படுகின்றன. பின்னர் அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவிலுக்குள் செல்ல, அங்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தொடர்ந்து அம்மன் தேரில் புறப்பட்டு தேர் மண்டபத்துக்கு வந்து சேர்கிறாள்.

    மறுநாள் அதிகாலை கோவில் கலையரங்கத்திற்கு அம்மன் எழுந்தருளுகிறாள். அங்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. வீதிஉலாச் செல்லும் அம்மன் மாலையில் கோவிலுக்கு வந்து சேர்கிறாள்.

    பின்னர் கொடி மரத்திலிருந்து இறக்கப்படுகிறது. அம்மன், சுவாமி, பிற தெய்வங்களுக்குக் கட்டப்பட்டுள்ள காப்புக்கள் களையப்படுகின்றன. தொடர்ந்த பூசாரிகளும் பக்தர்களும் காப்புக்களைக் களைகின்றனர். நள்ளிரவுப் பன்னிரண்டு மணிக்குச் சேர்க்கை அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று நண்பகல் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    பன்னிரண்டாம் நாளன்று காலை எட்டு மணிக்கும் பத்து மணிக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    ×