search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பன் சுவாமிகள்"

    • குருபூஜை விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது.
    • பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது.

    பாம்பன் சுவாமிகளின் 94-வது குருபூஜை விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது. இதையடுத்து திருவான்மி யூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இன்று அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை ஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து பாம்பன் சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், 108 சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    காலை 10.30 மணிக்கு பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் பாராயனம், மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலை 5 மணி முதல் 6 மணிவரை விசேஷ பூஜை மற்றும் மேளக் கச்சேரி நடைபெற்றது.

    இதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 8 மணிக்கு பாம்பன் சுவாமிகள் மற்றும் 6666 பாடல்கள் அடங்கிய புத்தகம் மேளம், நாதஸ்வர இசையுடன் கோவில் வளாகத்தில் உட்புறப்பாடு நடைபெற்றது. பின்னர் இரவு 11 மணி முதல் அதிகாலை வரை 6 கால பூஜை சண்முக சகச்சிரநாம அர்ச்சனையுடன் ஓதுதல் நடக்கிறது.

    நாளை (9-ந் தேதி) காலை சிறப்பு சோடச உபசார மற்றும் குமாரஸ்தல பூஜையும், மகேஸ்வர பூஜையும் நடைபெற உள்ளது.

    பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு ஆகும்.

    முருகனின் வழிபாடாக இவர் மொத்தம் 6666 பாடல்கள் இயற்றினார். இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

    பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. சிறுவயதில் இவருக்கு கந்தர் சஷ்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் உபய அருணகிரிநாதர் என்ற பெயரும் பெற்றார். பாம்பன் சுவாமிகள் 1929-ம் ஆண்டு மே 30-ந்தேதி முக்தி அடைந்தார்.

    மாதந்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அவரது அருளை பெற்று வருகிறார்கள்.

    • தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.
    • தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார்.

    கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். அவ்வாறு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும், நோய் நொடிகளிலிருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.

    இந்த கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். தேவராய சுவாமிகள் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா?

    தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை. வாழ்க்கையே வெறுத்துப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார்.

    அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார்.

    நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார்.

    அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும்.

    தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.

    அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்த,

    'சஷ்டியை நோக்க சரவண பவனார்

    சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்'

    என்று தொடங்கும் கவசம்.

    இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது. என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத்தரும்.

    முருகனுக்கு உகந்தநாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு. முருகனுக்கு முகங்கள் ஆறு. முருகனின் படை வீடுகள் ஆறு. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு, 'சரவணபவ' என்ற முருகனின் மந்திரம் ஆறெழுத்து, ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு பேன்றவற்றை குறிக்கும்.

    இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே. கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்குமே. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா?

    இத்தனை சிறப்பு வாய்ந்தது இந்த கந்த சஷ்டி கவசம். இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும்.

    பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் பாடியதுதான் 'சண்முக கவசம்'. இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×