search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் வெளியுறவுத்துறை"

    விமானப்படை வீரர் அபினந்தனை உடனே இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறையிடம் இந்திய தூதர் வலியுறுத்தி உள்ளார். #Abhinandan #BringBackAbhinandan #GenevaConvention
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையில் இந்திய விமானப் படை நேற்று முன்தினம் பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியது.

    பலாகோட், முசாபராபாத், சகோதி ஆகிய இடங்களில் இருந்த 3 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்தியாவின் தாக்குதலால் கடும் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று காலை 10 மணி அளவில் இந்தியா மீது திடீர் வான் தாக்குதலில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் போர் விமானங்கள் காஷ்மீரில் உள்ள ரஜோரி, பூஞ்ச் பகுதிகளில் ஊடுருவியது. மொத்தம் 3 பாகிஸ்தான் போர் விமானங்கள் எல்லை தாண்டி வந்தன.

    இந்திய ராணுவ நிலைகள் மீது குறிப்பாக ரஜோரியில் உள்ள ராணுவ தளத்தை தகர்க்க பாகிஸ்தான் போர் விமானங்கள் திட்டமிட்டன. ஆனால் இந்திய விமானப்படை பாகிஸ்தான் விமானங்களை வானில் வழிமறித்து தாக்குதல் நடத்தியது. இதனால் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த முடியாமல் பாகிஸ்தான் போர் விமானங்கள் திரும்பி சென்றன.

    போகும்போது வெட்ட வெளியில் 4 இடங்களில் குண்டுகளை போட்டுவிட்டு தப்பி சென்றன.

    அந்த விமானங்களை இந்திய போர் விமானங்கள் துரத்தி சென்று தாக்குதல் நடத்தின. அதில் பாகிஸ்தான் விமானப்படையின் எப்.16 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானும் பதிலடி தாக்குதல் நடத்தியதில் இந்தியாவின் மிக்-21 ரக விமானம் பாகிஸ்தானுக்குள் தரையில் விழுந்தது.

    அந்த விமானத்தில் இருந்த விமானியின் கதி என்ன ஆயிற்று என்பது முதலில் தெரியாமல் இருந்தது. பிறகு அந்த விமானியை கைது செய்து இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்தது. இதனால் பரபரப்பு நிலவியது.

    நேற்று மதியம் அந்த விமானியின் வீடியோ காட்சிகளை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது. அப்போது அந்த விமானி அபினந்தன் என்று தெரிய வந்தது. இவர் இந்திய விமானப் படையில் விங் கமாண்டராக பணியாற்றி வருகிறார்.

    அபினந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் உள்ள வெம்பாக்கத்தை அடுத்த திருப்பனமூர் அவரது பூர்வீகம் ஆகும்.

    சென்னையில் பிறந்து வளர்ந்த அபினந்தன் தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சி பெற்று இந்திய விமானப்படையில் சேர்ந்தார். இவரது பெற்றோர் மாடம்பாக்கத்தில் உள்ள விமானப்படை குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.

    அபினந்தன் தனது மனைவியுடன் டெல்லி விமானப்படை குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல பணிக்கு சென்ற அவர் பாகிஸ்தான் விமானங்கள் ஊடுருவியதும் எதிர் தாக்குதலுக்கு தயாரானார்.

    பாகிஸ்தான் போர் விமானங்களை அந்த நாட்டுக்குள் திருப்பி அனுப்புவதற்கு துரத்தி சென்றது இவர்தான். ஆனால் துரதிருஷ்டவசமாக இவரது விமானம் பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் விழுந்ததால் அவர் அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கி உள்ளார்.



    முதலில் அபினந்தன் தாக்கப்பட்டு முகத்தில் ரத்தக் கறையுடன் அழைத்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியானது. இதற்கு இந்திய அரசு தரப்பில் இருந்து கடும் எச்சரிக்கை விடப்பட்டது. போர் கைதியாக பிடிக்கப்படுபவர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று வெளியுறவுத்துறை மற்றும் தூதரகங்கள் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இதையடுத்து நேற்று பிற்பகல் அபினந்தன் டீ குடித்தபடி பாகிஸ்தான் ராணுவ அதிகாரியுடன் பேசும் வீடியோ ஒன்றை பாகிஸ்தான் அரசு வெளியிட்டது. இதன்மூலம் அபினந்தனை பாகிஸ்தான் கவுரவமாக நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    என்றாலும் அபினந்தனை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு நேற்று மதியமே தொடங்கி விட்டது. தூதரக அளவில் முதல் கட்டமாக பேசப்பட்டது. புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் மத்திய அரசு சார்பில் பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டன.

    மேலும் பயங்கரவாதிகளை ஒழிக்கவே தாக்குதல் நடத்தப்பட்டது என்ற விவரமும் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றை ஏற்றுக்கொண்டு அபினந்தனை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

    அபினந்தனை உடனே விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் எத்தகைய முடிவு எடுக்கும் என்பதில் கேள்விக்குறிகள் எழுந்துள்ளன. அபினந்தன் வி‌ஷயத்தில் ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகள் மீறப்பட்டு இருப்பதாக இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்து இருப்பதால் இனி பாகிஸ்தான் நிதானமாக நடந்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து அபினந்தனை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா வலியுறுத்தி உள்ளது. மேலும் அபினந்தனுக்கு எந்த விதத்திலும் சிறு துன்புறுத்தல் கூட கொடுக்கக் கூடாது என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.

    இந்திய ராணுவ வீரர் நச்சிகேட்டா கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது பாகிஸ்தானிடம் சிக்கினார். அவர் 8 நாட்களுக்கு பிறகு பத்திரமாக இந்தியாவுக்கு மீட்கப்பட்டார். அவரை போல அபினந்தனையும் மீட்க மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்துள்ளது.

    தற்போதைய நிலவரப்படி அபினந்தன் வி‌ஷயத்தில் இந்தியா 2 விதமான நிலைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

    1. ஜெனீவா ஒப்பந்தம் மற்றும் சர்வதேவ மனிதாபிமான சட்ட விதிகளை சுட்டிக்காட்டி அபினந்தனை விடுவிக்க சொல்வது. இந்த அடிப்படையில்தான் பாகிஸ்தானிடம் இந்தியா சில தகவல்களை அளித்துள்ளது.

    அந்த தகவல்கள் அடிப்படையில் பாகிஸ்தான் என்ன செய்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்த்து அதன் பிறகு நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்யலாம்.

    2. பேச்சுவார்த்தை மற்றும் சட்ட விதிகளை கடைபிடிக்காமல் மீண்டும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா கடுமையாக தாக்கி அதன் மூலம் அச்சுறுத்தி பாகிஸ்தானை பணிய வைக்கலாம்.

    இந்த 2 விதமான நிலைப்பாடுகளில் இந்தியா முதல் நிலையை கடைபிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

    அபினந்தனை எவ்வளவு விரைவில் மீட்க முடியுமோ அவ்வளவு விரைவில் மீட்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இதை கருத்தில் கொண்டு இன்று காலை பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நேரில் சென்று மனு கொடுத்தார்.

    அதோடு வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் போர் விமானி அபினந்தனை உடனே விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். ஆனால் பாகிஸ்தான் உடனடியாக அபினந்தனை விடுவிக்குமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

    அபினந்தனை பிணை கைதி போல வைத்துக் கொண்டு இந்தியாவை சமரசம் செய்யவோ அல்லது பேச்சுவார்த்தைக்கு அழைக்கவோ பாகிஸ்தான் முயற்சி செய்யும் என்று கூறப்படுகிறது. எனவே தங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் வரை அபினந்தனை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பாகிஸ்தான் விரும்பும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

    இத்தகைய சூழ்நிலை உருவாகும்பட்சத்தில் பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனீவா ஒப்பந்தத்தில் போர் கைதிகளாக பிடிக்கப்படும் ராணுவ வீரர்களை எத்தனை நாட்களுக்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற உட்பிரிவுகள் எதுவும் இல்லை.

    என்றாலும் இந்தியா- பாகிஸ்தான் இடையே இதுவரை போர் கைதிகள் அனைவரும் அதிக நாட்கள் இல்லாமல் மிக குறுகிய காலத்துக்குள் திருப்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். அந்த அடிப்படையில் அபினந்தனும் விடுதலையாக வாய்ப்பு உள்ளது.

    மத்திய அரசு அபினந்தன் வி‌ஷயத்தில் அனைத்து வழிகளிலும் தீவிர அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் 10 நாட்களுக்குள் அபினந்தனை மீட்டு விட முடியும் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் தற்போதைய போர் பதட்டம் காரணமாக அபினந்தனை விடுவிப்பதில் பாகிஸ்தான் சற்று காலதாமதம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “அபினந்தன் பாகிஸ்தானில் பிடிபட்ட பிறகு நடந்து வரும் நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேச்சு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதற்கேற்ப அபினந்தனை மீட்க முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்” என்றார்.

    எனவே அபினந்தன் விரைவில் விடுதலையாக வாய்ப்பு உள்ளது. #Abhinandan #BringBackAbhinandan #GenevaConvention
    பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. #Pakforeignministrywebsite #websitehacked
    இஸ்லாமாபாத்:

    புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு இடையிலான பூசல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்பில் இவ்விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பதை அறிந்துகொள்ள உலக நாடுகள் ஆவலுடன் உள்ளன.



    இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து இந்த இணையதளத்தை பிறர் தொடர்புகொள்ள முடியாத நிலை நேற்று ஏற்பட்டது.

    இந்த முடக்கத்துக்கு இந்தியாவை பாகிஸ்தான் பத்திரிகைகள் குற்றம்சாட்டும் நிலையில், ‘உள்நாட்டில் இருப்பவர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை தொடர்பு கொள்வதில் எந்த பாதிப்பும் இல்லை.

    எனினும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், சவுதி அரேபியா, நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரியவந்துள்ளது. இந்த குறைபாட்டை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் குறிப்பிட்டுள்ளார். #Pakistanforeignministry #Pakforeignministrywebsite #websitehacked
    ×