search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் சேவை"

    சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்வதற்காக 2 ரோபோக்கள் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. #ChennaiAirport #Robot
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்வதற்காக 2 ரோபோக்கள் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த உள்ளது. 3 மாத சோதனைக்கு பிறகு அதை நிரந்தரமாக செயல்படுத்தப்படும் என சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரி தெரிவித்தார்.



    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் பயணிகள் பாதுகாப்பு சோதனை, விமான டிக்கெட் பரிசோதனை, உடைமைகள் சோதனை செய்யும் இடங்கள், விமான நிலையம் உள்ளே சென்றதும் விமானங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள விமான சேவை மையம் செயல்பட்டது.



    அதற்கு பதிலாக சென்னை விமான நிலையத்தில் ரோபோவை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பெங்களூருவில் இருந்து 2 ரோபோக்கள் பரிசோதனைக்காக 3 மாதங்களுக்கு வாடகை அடிப்படையில் பெறப்பட்டு உள்ளன.

    அந்த ரோபோக்கள் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் 3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட உள்ளது.

    இந்தநிலையில் நேற்று சுதந்திர தினவிழா என்பதால் அந்த ரோபோக்கள் மூலம் விமான நிலையம் வரும் பயணிகளுக்கு சுதந்திர தினவிழா வாழ்த்து தெரிவித்து, இனிப்புகள் வழங்க அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

    சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி தலைமையிலான அதிகாரிகள் இதை தொடங்கி வைத்தனர். அந்த ரோபோக்கள் விமான நிலையம் வந்த மாணவ-மாணவிகள், குழந்தைகள், பயணிகளை வரவேற்று அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தது.

    இதை கண்டு மகிழ்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் குழந்தைகள் பதிலுக்கு ரோபோக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இது குறித்து சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி கூறியதாவது:-

    தற்போது அந்த ரோபோக்களில் பயணிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் விமானத்தில் செல்ல எந்த கவுண்ட்டருக்கு செல்லவேண்டும். விமான நேரங்கள், பாதுகாப்பு சோதனை, விமான டிக்கெட் பரிசோதனை நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும் பணி நடைபெறுகிறது. இன்னும் 3 நாட்களில் அந்த பணிகள் முடிவடைந்து விடும். அதன்பிறகு ரோபோக்கள் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படும்.

    இந்த ரோபோக்களுக்கு பயணிகள் மத்தியில் உள்ள வரவேற்பு மற்றும் அதன் செயல்பாடுகளை பொறுத்து சென்னை உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளுக்கு சேவை செய்ய இவை நிரந்தரமாக பயன்படுத்தப்படும்.

    இந்திய விமான நிலைய ஆணையகத்தின் கீழ் செயல்படும் விமான நிலையங்களில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்ய ரோபோக்கள் பயன்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பயணிகள் சேவையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சுதந்திர தினத்தன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறது. 1977-ம் ஆண்டிலேயே 105 கி.மீ. வேகத்தில் சென்ற அதிவிரைவு ரெயில் இதுவாகும். #VaigaiExpress
    சென்னை:

    தமிழகத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்றைக்கு அதிகம் இயக்கப்பட்டு வந்தாலும், வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தனி சிறப்புகள் உண்டு. மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் இந்த ரெயில் 1977-ம் ஆண்டு சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது.

    ரெயில் பெட்டிகள் அப்போது மஞ்சள் மற்றும் பச்சை வர்ணம் பூசப்பட்டிருந்தன. கனடா நாட்டில் தயாரிக்கப்பட்ட 1,850 குதிரைதிறன் கொண்ட ‘ஒய்.டி. எம்.4.ஏ’ என்ற டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது. அந்த காலத்திலேயே மீட்டர்கேஜ் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்றது.

    இந்த ரெயிலை இயக்குவதற்காகவே வேம்படையான், வெங்கடாசலம் என்ற 2 டிரைவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது இந்தியாவில் அதிவேகமாக (மணிக்கு 100 கி.மீ.) சென்ற ராஜஸ்தான்-டெல்லி ‘பிங்க் சிட்டி’ எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சி முடிந்ததும் மதுரை திரும்பிய அவர்கள் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை நீராவி என்ஜினில் சோதனை செய்தபோது வேகம் கிடைக்காததால் டீசல் என்ஜினை பொருத்தி மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் இயக்கினர். எனவே வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் தனது முதல் பயணத்தை டீசல் என்ஜினுடனேயே தொடங்கியது. இதற்கான அனுமதியை ‘லோகோ’ இன்ஸ்பெக்டர் சேவியர் வழங்கினார்.

    முதல் டிரைவர் குழுவை சேர்ந்த பால்டேவிட் சாம்

    ரெயிலில் தலா 8 முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளும் இணைக்கப்பட்டிருந்தன. ரெயிலை வேம்படையான், வெங்கடாசலம் ஆகிய இருவரும் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் இயக்கி புதிய சாதனை படைத்தனர். அவர்களைப்போல பால்டேவிட் சாம் உள்பட 6 பேர் கொண்ட டிரைவர் குழுவினர் ஷிப்டு முறையில் அந்த ரெயிலை இயக்கினர். இன்றைக்கும் அதே 105 கி.மீ. வேகத்திலேயே இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட ஏ.சி. பெட்டி முதல் முறையாக 1984-ம் ஆண்டு இந்த ரெயிலில் தான் இணைக்கப்பட்டது. தெற்கு ரெயில்வேயில் நவீன ஜன்னல், கண்ணாடி ஜன்னல், டியூப்-லைட் போன்ற வசதிகளும் இந்த ரெயிலில் தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன.

    அதிக திறன்கொண்ட முதல் என்ஜின் இந்த ரெயிலில் தான் பொருத்தப்பட்டது. 1980-ம் ஆண்டில் 2 குழல் கொண்டு ஒலியை எழுப்பும் ‘ஹாரன்’கள் இந்த ரெயிலில் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது.

    வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை அப்போது இயக்கிய டிரைவர்களில் பால்டேவிட் சாம், ‘லோகோ’ இன்ஸ்பெக்டர் சேவியர் ஆகியோர் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்தநாள் ஞாபகங்கள் குறித்து 85 வயதை கடந்த பால்டேவிட் சாம் நிருபரிடம் கூறியதாவது:-

    1970-ம் ஆண்டுகளில் தமிழக ரெயில்களின் சராசரி வேகம் மணிக்கு 70 முதல் 75 கி.மீ. தான் இருந்தது. இதுபோன்ற சூழ்நிலையில் தான் வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த காலத்தில் ‘டோக்கன் சிக்னல்’ முறைதான் இருந்தது. டென்னிஸ் பேட் வடிவில் இருக்கும் டோக்கனை ஒரு ரெயில் நிலையத்தை ரெயில் கடக்கும்போது டிரைவர் தூக்கி எறிந்துவிட்டு, அந்த ரெயில் நிலையத்தில் வேறொரு டோக்கனை ஓடும் ரெயிலில் நின்றபடியே வாங்கிச்செல்ல வேண்டும்.

    ஆனால் வேகமாக செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அது முடியாது என்பதால், இதற்காகவே என்ஜினில் நவீனகருவி பொருத்தப்பட்டிருக்கும். இன்னும் குறைந்த நேரத்திற்குள்ளாகவே மதுரை-சென்னை இடையே இந்த ரெயிலை இயக்க முடியும். அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் ரசிகர் சென்னையை சேர்ந்த அருண் பாண்டியன் கூறும்போது, “சேத்துப்பட்டு பாலத்தில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் அசுரவேகத்தில் புழுதியை கிளப்பிக்கொண்டு செல்வதை பார்க்கவே சந்தோஷமாக இருக்கும். இந்த ரெயிலின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் எனது நண்பரும், இந்த ரெயிலின் முதல் டிரைவர் குழுவில் உள்ளவருமான பால்டேவிட் சாமின் மகன் கிறிஸ்டோபருடன் இணைந்து மதுரை ரெயில் நிலையத்தில் ‘கேக்’ வெட்டி கொண்டாடுவது வழக்கம். அன்றைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் இருந்த மஞ்சள் - பச்சை நிறத்திலேயே மீண்டும் வர்ணம் பூச வேண்டும் என்பது எங்கள் ஆசை” என்றார். #VaigaiExpress

    ×