search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்திரப்பதிவு அலுவலகங்கள்"

    பத்திரப்பதிவு அலுவலகங்களில் போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை பதிவு செய்து மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த அலுவலகங்களில் போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை பதிவு செய்து மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில்தான் இந்த மோசடி அதிகளவு நடந்திருப்பது பத்திரப்பதிவு துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து மதுரை சப்- ரிஜிஸ்டர் ஆபீஸ் மற்றும் திருநெல்வேலி மண்டலத்திலும் இந்த மோசடி அதிகளவு நடந்துள்ளது.

    இந்த ஆய்வின் புள்ளி விவரங்களின்படி போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழகம் முழுவதும் 2700 புகார்கள் பதிவாகி இருந்தன.

    இந்த மோசடிகள் அனைத்தும் 2011-ம் ஆண்டு முதல் 2017 வரை நடந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

    இதில் சென்னை மண்டலத்தில் மட்டும் 1000 புகார்கள் வந்துள்ளன. சென்னை மண்டலத்தில் 64 சப்-ரிஜிஸ்டர் அலுவலகங்கள் நகரப் பகுதியிலும் மற்றவை காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் இயங்கி வருகின்றன. இந்த பதிவு அலுவலகங்களில்தான் அதிகளவு மோசடிகள் நடந்துள்ளன.

    சென்னையை தொடர்ந்து மதுரை மண்டலத்தில் 390 புகார்களும், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 125 புகார்களும், கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டலத்தில் 250 முறைகேடான சொத்து பதிவு செய்யப்பட்ட புகார்கள் பதிவாகி உள்ளன.

    சேலம் மண்டலத்தில் 240-ம், திருச்சியில்-225, வேலூரில் 170, கோவையில் 135, கடலூரில் 120 புகார்களும் பதிவாகி இருந்தன.

    சொத்துக்களை விற்க ‘பவர்’ கொடுத்து பின்னர் அதனை நீக்கியது போன்று இந்த மோசடி பதிவு நடைபெற்று இருப்பதாக மாவட்ட பதிவாளர்களுக்கு புகார்கள் வந்ததையடுத்து பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பெறப்பட்ட 2700 புகா ரில் 1100 புகார்கள் மீது விசாரணை நடத்தி ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது கண்டறியப்பட்டவுடன் அதனை தடை செய்து உண்மையான சொத்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் பத்திரங்களை பதிவு செய்யும் டோக்கன் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. #RegistrationOffice
    சென்னை:

    பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் தற்போது பல்வேறு நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    அதன்படி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று பத்திரப்பதிவுக்கு இனிமேல் காத்திருக்க தேவையில்லை. முன்கூட்டியே 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து டோக்கன் பெற்று கொள்ளலாம்.

    அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தினசரி 50 டோக்கன் கொடுக்கப்படும்.

    காலை 10 மணி முதல் 1 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தலா 10 டோக்கன் வீதம் 30 டோக்கன் அளிக்கப்படும்.

    பிற்பகல் 1 முதல் 1.30 மணி வரை 5 டோக்கனும், மதியம் 2 மணி முதல் 3 மணி வரை 10 டோக்கனும், மதியம் 3.30 மணி வரை 5 டோக்கன் என பிரித்து வழங்கப்படும்.

    இதில் உள்ள நேரத்தில் சென்று பத்திரங்களை பதிவு செய்யலாம்.

    முன்பதிவு செய்தவர்கள் குறித்த நேரத்தில் வரவில்லை என்றால் அந்த விவரம் அங்குள்ள கம்ப்யூட்டரில் காண்பிக்கப்படும். அதன் பிறகுதான் அடுத்த ஆவண பதிவை தொடர முடியும். இதற்கேற்ப கம்ப்யூட்டரில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட நாட்களில் அனைத்து முன்பதிவு டோக்கன்களுக்கும் உரிய பதிவு நடைமுறை விரைவாக முடிந்துவிட்டால் அடுத்த நாளில் முன்பதிவுக்கு கொடுக்கப்பட்ட டோக்கன்களை வரவழைத்து பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #RegistrationOffice
    ×