search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலகிரி வனப்பகுதி"

    • கோழிக்கோட்டில் உள்ள 8 போலீஸ் நிலையங்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது.
    • எல்லையோர கிராமங்கள், வனங்களில் நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தையொட்டி கேரள மாநிலத்தின் வயநாடு அருகே கம்பமலை எஸ்டேட் பகுதி உள்ளது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பகுதியில் நுழைந்த மாவோயிஸ்டுகள், அங்கிருந்த அரசு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி பொருட்களை சூறையாடியதுடன், அங்கு சுவரொட்டிகளையும் ஓட்டி சென்றனர்.

    இதையடுத்து கேரள போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கம்பமலையில் இருந்து 1 அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்கி மலைக்கு மாவோயிஸ்டுகள் இடம் பெயர்ந்தனர். அவர்கள், அங்குள்ள தனியார் தங்கும் விடுதிக்குள் சென்று தாங்கள் வந்து சென்றது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க கூடாது என மிரட்டல் விடுத்து சென்றனர்.

    இந்த நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள 8 போலீஸ் நிலையங்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது.

    இதையடுத்து உளவுத்துறை கேரள அரசை தொடர்பு கொண்டு கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு எச்சரிக்கை செய்துள்ளது. இதனை தொடர்ந்து கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

    மேலும் மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளிலும் கேரள அதிரடிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிகின்றனரா என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.

    மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த இருப்பதாக வந்த தகவலை அடுத்து, கேரள எல்லையையொட்டி உள்ள நீலகிரி மாவட்ட த்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கேரள அதிரடிப்படை போலீசார் தமிழக எல்லையில் உள்ள வனப்பகுதிகளில், தமிழக போலீசார் உதவியுடன் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    எல்லையோர கிராமங்கள், வனங்களில் நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். புதிதாக யாரேனும், கிராமப்பகுதிகளில் நடமாடினால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள 11 சோதனைச்சாவடிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வனப்பகுதி மற்றும் வனத்தையொட்டி இருக்க கூடிய கிராமங்களிலும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வனக்கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 10 புலிகள் இறந்துள்ளது.
    • புலிக்குட்டிகள் இறந்து கிடந்த இடத்துக்கு சற்று தொலைவில் ஒரு கடமானின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி வனக்கோட்டத்தில் ஊட்டி வனசரகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள சின்னகுன்னூரில் தாய்புலி ஒன்று 4 குட்டிகளுடன் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

    வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 குட்டிபுலிகள் சடலமாகவும், ஒரு குட்டிப்புலி உயிருக்கு போராடிய நிலையிலும் மீட்கப்பட்டது. ஆனால் அந்த புலியும் சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.

    மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வனக்கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 10 புலிகள் இறந்துள்ளது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே இறந்த குட்டி புலிகளின் தாய் புலியின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அதனை தொடர்ந்து தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 நாளில் 4 வயதான புலிகள், 6 குட்டிப்புலிகள் என 10 புலிகள் இறந்துள்ளன. ஆகஸ்டு 16-ந் தேதி சீகூர் வனப்பகுதியில் நீரோடை அருகே 2 புலிகள் இறந்து கிடந்தன. அதனை ஆய்வு செய்தபோது அவை தாய்புலியால் கைவிடப்பட்டது தெரியவந்தது.

    ஆகஸ்டு 17-ந் தேதி நடுவட்டத்தில் ஒரு புலி இறந்து கிடந்தது. அந்த புலியின் உடலில் உள்ள காயங்களை ஆய்வு செய்த போது வேறு ஒரு புலியுடன் ஏற்பட்ட சண்டையில் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது..

    இதேபோல் புலிகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஆகஸ்டு 31-ல் ஒரு புலி இறந்தது.

    தொடர்ந்து கடந்த 9-ந் தேதி அவலாஞ்சி உபரி நீர் ஓடை அருகே 2 புலிகள் இறந்து கிடந்தன.

    மாட்டு மாமிசத்தில் விஷம் வைத்து இந்த புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் உடல் உறுப்புகள் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தி சேகர் என்பவரை கைது செய்துள்ளோம்.

    கடந்த 14-ந் தேதி சின்னக்குன்னூரில் புலிக்குட்டிகள் சுற்றுவதாக வந்த தகவலின் பேரில் புலிகளை கண்டுபிடிக்கும் வல்லுநர்களை அனுப்பி தேடும் பணி நடந்தது.

    அடர்ந்த வனப்பகுதியில் 3 புலிக்குட்டிகள் இறந்த நிலையிலும், ஒரு புலிக்குட்டி உயிருக்கு போராடிய நிலையிலும் மீட்கப்பட்டது.

    அதனை மீட்டு சிகிச்சை அளித்த போது அந்த குட்டிபுலியும் இறந்துவிட்டது.

    இறந்த குட்டிகளை ஆய்வு செய்த போது, 4 குட்டிகளும் உணவின்றி இறந்தது தெரியவந்தது. இவற்றின் உடல் உறுப்பின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    புலிக்குட்டிகள் இறந்து கிடந்த இடத்துக்கு சற்று தொலைவில் ஒரு கடமானின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. அதன் மாதிரியும் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். மேலும் குட்டிகளின் தாய்புலியை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    பொதுவாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடைபெறும்.

    மேலும் கோரகுந்தா, குந்தா, நடுவட்டம் உள்ளிட்ட 6 சரகங்களில் முகாம்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படும். அத்துடன் அங்கு தொடர் கண்காணிப்புக்காக வேட்டை தடுப்பு காவலர்களும் நியமிக்கப்படுவர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×