search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டிவனம் போலி சாமியார்"

    திண்டிவனம் அருகே தோஷத்தை போக்குவதாக கூறி 50 பெண்களின் கற்பை சூறையாடிய போலி சாமியாரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
    திண்டிவனம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் மணி என்கிற செல்வமணி (வயது 40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    மணியின் நடத்தை பிடிக்காததால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மணி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூருக்கு வந்தார்.

    அங்கு ஒரு வீட்டில் வசித்து வந்தார். பின்னர் அங்கேயே ஒரு கோவில் கட்டி பில்லி, சூனியம், மாந்திரீகம் செய்யும் தொழில் நடத்தி வந்தார்.

    அவரை தேடி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்று தங்களது குறைகளை கூறினர். அப்போது மணி தன்னிடம் உள்ள மந்திர சக்தியால் குறைகளை தீர்த்து வைப்பதாக கூறினார்.

    மேலும் பலருக்கு பில்லி, சூனியம் உங்களுக்கு வைத்துள்ளனர். அதை எடுத்தால் உங்களது வாழ்க்கை வெற்றியடையும் என்று தெரிவித்தார். இதை நம்பிய பலர் அவரிடம் பணத்தை கொடுத்தனர்.

    விழுப்புரம், புதுவை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், தருமபுரி, கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல பெண்கள் அவரை சந்தித்து தங்களது குறைகளை கூறி வந்தனர்.

    தன்னை நாடிவந்த பெண்களை அடைய மணி திட்டம் தீட்டினார். உங்களுக்கு பில்லி, சூனியம் வைத்துள்ளனர். அதனை எடுத்தால்தான் உங்களது பிரச்சனைகள் தீரும் என்று கூறுவார். அதை பெண்கள் நம்பினர்.

    இதன்மூலம் பல பெண்களை கவர்ந்து அவர்களை கணவரிடம் இருந்து பிரித்து தன்வசமாக்கி குடும்பம் நடத்தி வந்தார். பின்னர் அவர் தன்னை நம்பி வந்த பெண்களை ஏமாற்றி விட்டு வேறு வேறு பெண்களை தேடி தன் வசமாக்குவதை வழக்கமாக கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஹேமா (40) என்பவரது வீட்டுக்கும் மணி சென்றார். அவரை மயக்கி தன்வசமாக்கினார். பின்னர் கணவர் பவுன்ராஜிடம் இருந்து ஹேமாவை பிரித்து தன்னுடன் அழைத்து வந்து ஓங்கூரில் குடும்பம் நடத்தி வந்தார். அவருக்கு ஹேமா சிஷ்யை போல் செயல்பட்டு வந்தார்.

    கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் வடமணிப்பாக்கம் கிராமத்தில் உள்ள கருணாகரன் என்பவர் வீட்டுக்கு மணி சென்றார். அப்போது கருணாகரன் தனது மகனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்க்குமாறு மணியிடம் கேட்டார்.

    அப்போது, கருணாகரனுக்கு 18 வயதில் ஒரு மகள் இருப்பதை மணி அறிந்தார். உடனே அந்த இளம்பெண்ணை அடைய வேண்டும் என்ற எண்ணம் மணிக்கு ஏற்பட்டது.

    கைதான போலி சாமியார் மணி-  சிஷ்யை ஹேமா.

    உடனே கருணாகரனிடம், உங்களது பிரச்சனையை தீர்த்து வைக்க இந்த ஊரில் ஒரு கோவில் கட்ட வேண்டும். அப்போது உங்கள் மகள் வீட்டில் இருக்கக்கூடாது. இங்கு அவள் இருந்தால் அவள் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே அவளை எனது வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். அவளை எனது மகள்போல் பாதுகாத்து கொள்கிறேன் என்றார்.

    சாமியாரின் இந்த கோரிக்கையை கேட்ட கருணாகரன் முதலில் திடுக்கிட்டார். பின்னர் சாமியாரின் வசிய பேச்சை கேட்டு கருணாகரன் தனது மகளை அவருடன் அனுப்பி வைக்க சம்மதித்தார்.

    அதனை தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்து கொண்டு ஓங்கூரில் உள்ள தனது வீட்டில் மணி தங்க வைத்தார்.

    இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த மாதம் 19-வது வயது ஆகியது. இதனால் சாமியார் அந்த பெண்ணை அடைய திட்டமிட்டார். கன்னி பெண்ணை திருமணம் செய்தால் அதிக சக்தி கிடைக்கும் என்று நினைத்தார். எனவே உங்களது மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று கருணாகரனிடம் கேட்டார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

    மேலும் அந்த இளம்பெண்ணும் சாமியாரை திருமணம் செய்து கொள்ள மறுத்தார். பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி போலி சாமியார் அந்த பெண்ணிடம் கேட்டார். நீ என்னுடன் சேர்ந்தால்தான் உனது அண்ணனின் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று கூறினார்.

    பின்னர் அந்த இளம்பெண்ணை சாமியார் பலவந்தமாக கற்பழித்தார். இதற்கு அவரது சிஷ்யை ஹேமா உதவி செய்துள்ளார். தன்னை சாமியார் கற்பழித்ததை அறிந்து அந்த பெண் கதறி அழுது துடித்தார்.

    பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தந்தையிடம் கூறி அழுதார். இதை கேட்டதும் கருணாகரன் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் ஓங்கூருக்கு வந்தார். தனது மகளின் வாழ்க்கையை நாசமாக்கிய போலி சாமியார் குறித்து அவர் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் ஓங்கூருக்கு சென்றனர். அங்கிருந்த போலி சாமியார் மணியை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த சிஷ்யை ஹேமாவையும் கைது செய்தனர்.

    வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கிருந்த பூஜை அறையில் நிறைய சாமி படங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

    கைது செய்யப்பட்ட மணியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    போலி சாமியார் பகல் வேளையில் டிப்-டாப் உடை அணிந்து வெளியில் சென்றுள்ளார். இரவில் நீண்ட மீசை, தாடியுடனும் வலம் வந்துள்ளார். இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

    சாமியாரானால் பணம் நிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. இதனை தொடர்ந்து ஜோதிடம், மாந்திரீகம் பார்க்க தொடங்கினார். அப்போது வசதி படைத்த மற்றும் அழகான பெண்கள் அவரை நாடி வந்துள்ளனர். பெண்களிடம் அவர் கனிவாக பேசி அவர்களை தனது வசமாக்கி அனுபவித்துள்ளார்.

    திருமண தடை, குழந்தையின்மை, கணவன்- மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு பரிகாரம் தேடி ஏராளமான பெண்கள் இவரை நாடி வந்துள்ளனர்.

    அவர்களிடம் உங்களின் தோ‌ஷத்தை நிவர்த்தி செய்ய சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்று கூறுவார். அப்போது பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களை வசியம் செய்து மயக்க நிலைக்கு சென்றதும் அந்த பெண்களின் கற்பை சூறையாடி உள்ளார்.

    போலி சாமியார் மணி 50-க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை சூறையாடி இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சொகுசாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட போலி சாமியார் மணி மற்றும் அவரது சிஷ்யை ஹேமா ஆகியோரை திண்டிவனம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து மணி, ஹேமா ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    போலி சாமியார் மணியால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் போலீசில் புகார் செய்ய இதுவரை முன்வரவில்லை. அப்படி புகார் செய்தால் போலி சாமியாரின் காமலீலைகள் வெளிச்சத்துக்கு வரும்.

    இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×