search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மதுரை"

    ஏசி, வை-பை, சிசிடிவி, தானியங்கி கதவு, சொகுசு இருக்கை வசதிகளை கொண்ட தேஜஸ் ரெயில் சென்னை-மதுரை இடையான 497 கி.மீ. பயண தூரத்தை 7 மணி நேரத்தில் சென்றடையும். #Tejastrain #Chennai #Madurai
    சென்னை:

    சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் சாதாரண ரெயில் பெட்டிகள் தவிர அதிவேகத்தில் செல்லக்கூடிய மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசான ரெயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது.

    இதற்கு ‘தேஜஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. முதலாவது தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு மும்பையை தலையிடமாக கொண்டு செயல்படும் மேற்கு ரெயில்வேக்கு வழங்கப்பட்டது.

    இந்த தேஜஸ் ரெயில் மும்பை-கோவா இடையே கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. அங்கு தேஜஸ் ரெயில் பயணத்துக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து 2-வது தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணியில் ஐ.சி.எப். ஈடுபட்டது. இந்தப் பணி முடிந்ததைத் தொடர்ந்து நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஐ.சி.எப். பொது மேலாளர் சுதான்சி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    2-வது ‘தேஜஸ்’ ரெயில் பெட்டிகள் டெல்லியை தலைமையிடமாக கொண்ட வடக்கு ரெயில்வேக்கு கொடுக்க ஆலோசிக்கப்பட்டு வந்தது. ஆனால் தெற்கு ரெயில்வேயில் சென்னை-மதுரை இடையே கூடுதல் ரெயில்கள் தேவைப்படுவதாலும், இந்த வழித்தடம் இரட்டை ரெயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளதாலும் தேவையை கருத்தில் கொண்டு தற்போது தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இந்த தேஜஸ் ரெயில் சென்னை-மதுரை இடையே பகல் நேர ரெயிலாக இயக்கப்படும். இன்னும் ஒரு வாரத்தில் ரெயில் ஓடத் தொடங்கும். முதலில் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயக்கப்படும், விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.



    இந்த ரெயிலில் ஜி.பி.எஸ். கருவி, வை-பை வசதி, சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா, தானியங்கி கதவுகள், கம்ப்யூட்டர்களுக்கு தேவையான சார்ஜிங் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளது.

    சதாப்தி ரெயில் போன்று முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது. 23 சேர்கார்களுடன் உயர் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளது. கண்களுக்கு குளிர்ச்சியூட் டும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பெட்டிகளின் உள்புறம் பைபர் பிளாஸ்டிக் வடிவமைப்புடன் எழிலான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது.

    இருக்கைகள் அனைத்தும் ஆடம்பரமாக சொகுசான முறையிலும் கழிவறைகள் நவீன வசதியுடனும் அமைக்கப்பட்டுள்ளது.

    ஜன்னல் கதவுகள் மோட்டார் உதவியுடன் எளிதில் இயக்கக்கூடிய வகையிலும், வெளிப்புற கதவுகள் தானியங்கி முறையில் இயங்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

    வழக்கமான ரெயில் பெட்டிகளில் 78 இருக்கைகள் இடம் பெற்று இருக்கும். இந்த தேஜஸ் ரெயிலில் 56 இருக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளதால் விசாலமான முறையில் நெருக்கடி இல்லாமல் அமர்ந்து பயணம் செய்யலாம்.

    இந்த தேஜஸ் ரெயில் சென்னை-மதுரை இடையான 497 கி.மீ. பயண தூரத்தை 7 மணி நேரத்தில் சென்றடையும். இப்போது வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை செல்ல 8 மணி நேரமும், பாண்டியன் எக்ஸ்பிரஸ் 9 மணி நேரமும் எடுத்துக் கொள்கிறது.

    தேஜஸ் ரெயில் காலை 6 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு மதுரை போய்ச்சேரும்.

    தேஜஸ் ரெயில் கட்டணம் சதாப்தி ரெயில் கட்டணத்தை விட 20 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் இன்னும் கட்டணம் முடிவு செய்யப்படவில்லை.

    தற்போது தேஜஸ் ரெயில் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இருந்து புறப்பட்டு வில்லிவாக்கம் ‘யார்டு’ ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து போக்குவரத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது சென்னை-மதுரை இடையே ரெயில்களில் கடும் இட நெரிசல் நிலவுகிறது. பகலில் குருவாயூர், வைகை ஆகிய 2 ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. கூடுதலாக சொகுசு ரெயில் இயக்கப்படுவதால் பயணிகளிடையே வரவேற்பை பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #Tejastrain #Chennai #Madurai


    ×