search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கு சேவை வரி"

    நிதி மந்திரி பியுஷ் கோயல் தலைமையில் நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. #GST #GSTCouncil
    புதுடெல்லி:

    நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த வருடம் ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது. 

    இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் 28-வது கூட்டம் டெல்லியில் மத்திய (இடைக்கால) நிதி மந்திரி பியுஷ் கோயல் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநிலங்களை சேர்ந்த நிதி மந்திரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் 46 திருத்தங்களுடன் பல்வேறு பொருட்களுக்கு  வரிவிதிப்பில் சலுகை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விபரங்களை கீழே பார்க்கலாம்:-

    முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்:

    பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் (12 சதவிகித வரி தற்போது உள்ளது),  முதியோர் இல்லங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், பளிங்கு, மரம் மற்றும் கற்களால் செய்த சாமி சிலைகள், தங்கத்திலான மற்றும் நவரத்தின கற்கள் பதிக்கப்படாத ராக்கி கயிறுகள்

    28 சதவிகித வரியில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்ட பொருட்கள்:

    ஏ.சி., பிரிட்ஜ், வாட்டர் ஹீட்டர்கள், வாஷிங் மெஷின், டிவி (68 செ.மீ வரை), வாக்யூம் கிளீனர்ஸ், பெயிண்டுகள், முடி திருத்தும் கருவி, முடி உலர்த்தும் கருவி, பாடி செண்ட் மற்றும் ஸ்பிரேக்கள், லித்தியம் இயான் பேட்டரிகள், குளியலறை ஸ்பிரே, டிரைலர்கள் மற்றும் வீடியோ கேம்ஸ் சாதனங்கள்.

    18 சதவிகித வரியில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்ட பொருட்கள்:

    பர்சுகள், நகைப்பெட்டிகள், ஹேண்ட் பேக்குகள், கண்ணாடி மற்றும் புகைப்பட பிரேம்கள், அலங்கார பிரேம்கள், மண்ணெணை அடுப்பு, இரும்பு அலங்கார பொருட்கள்.

    5 சதவிகித வரிக்கு கொண்டு வரப்பட்ட பொருட்கள்:

    யூரியா உரம், எத்தனால், திட உயிரி எரிபொருள் குண்டுகள், கையால் நெய்யப்பட்ட தரை விரிப்புகள், கையால் தயாரிக்கப்பட்ட சவுரி முடிகள், கோரைப்புற்களை கொண்டு கையால் தயாரிக்கப்பட்ட பொருட்கள்.

    இந்த அம்சங்கள் யாவும் வரும் 27-ம் தேதி முதல்அமலுக்கு வரும் என நிதி மந்திரி பியுஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். 
    ×