search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி உபரிநீர்"

    கடலில் வீணாக கலக்கும் காவிரி உபரிநீரை வறண்டு கிடக்கும் வசிஷ்ட நதியில் இணைக்கும் திட்டத்தை ஆய்வு செய்து செயல்வடிவத்திற்கு கொண்டுவரப்படுமா? என்று மூன்று மாவட்ட விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
    வாழப்பாடி:

    கர்நாடகா மாநிலம் கூர்க் மலைப்பகுதியில் தலைக்காவிரியில் உற்பத்தியாகும் காவிரி நதி தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக தமிழகத்தில் பாய்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை அடைகிறது. மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்படும் காவிரி நதிநீர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்களுக்கு வாய்க்கால் பாசனத்திற்கு பயன்பட்டு வருகிறது. மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் இந்த மாவட்டத்தில் அணை பாசன வசதி பெறும் விளை நிலங்களில் பரப்பளவு டெல்டா மாவட்டங்களை விட மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    அதே போல கர்நாடகா மாநிலத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக காவிரி நதி பாய்ந்து வந்தும் தர்மபுரி மாவட்டத்திற்கு காவிரிநதி நீர் பாசனத்திற்கு பயன்படுவதில்லை. இதனால் காவரி நதி கடந்து செல்லும் தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான விளை நிலங்கள் பருவ மழையை நம்பி பயிரிடும் மானாவாரி நிலங்களாகவே காணப்படுகின்றன.

    அதுமட்டுமின்றி, சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும், வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் வெள்ளாறு மற்றும் கொல்லி மலைப் பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் சுவேதா நதியும், எப்போதாவது ஒருமுறை மட்டுமே நீரோட்டத்தை பெறுகின்றன. ஆண்டு தோறும் பெரும்பாலான மாதங்களில் நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கின்றன. பருவ மழையும் குறைந்து போனதால் ஆறு, குளம்,குட்டை, நீரோடை உள்ளிட்ட நீர்நிலைகளும் காய்ந்து கிடக்கின்றன.

    சேலம் - தர்மபுரி மாவட்டங்களை இணைக்கும் எல்லையாக அமைந்துள்ள அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, விழுப்புரம் மாவட்டம் வழியாக சென்னைக்கு செல்லும் வீராணம் ஏரியை சென்றடைகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வசிஷ்ட நதி உற்பத்தியாகும் அருநூற்று மலை பெரியக்குட்டி மடுவு வனப்பகுதிக்கும், காவரி க்ஷ்யாறு தமிழகத்தை வந்தடையும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கும் இடைப்பட்ட தூரம் 100 கி.மீ., மட்டும்தான். அதுமட்டுமின்றி, ஒகேனக்கலில் இருந்து தாழ்வான பகுதியில் தான் பெரியகுட்டிமடுவு அமைந்துள்ளது.

    எனவே, ஒகேனக்கலில் இருந்து பெரியகுட்டிமடுவு வரை கால்வாய் அமைத்து, மேட்டூர் அணையில் இருந்து உபரிநீராக திறக்கப்படும் நேரத்தில், காவிரிநதி நீரை வறண்டு கிடக்கும் வசிஷ்டநதியில் திறந்து விட வேண்டுமென்பது, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வசிஷ்நதி கரையோர கிராம விவசாயிகளிடையே நீண்டநாளாக கோரிக்கையாக இருந்து வருகிறது.

    ஒகேனக்கலில் இருந்து பெரியகுட்டிமடுவு வரை கால்வாய் அமைத்து காவிரி நதிநீரை வசிஷ்டநதியில் திறப்பதின் வாயிலாக, தர்மபுரி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பருவ மழையை மட்டுமே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், காவிரி நதிநீரை பெற்று செழிப்படையும். இந்த திட்டம் குறித்து 15 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு நடத்திய சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் பேளூர் கரடிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கீலகராஜன், அந்த திட்டத்தின் வரைபடம், திட்ட மதிப்பீடு மற்றும் பயன் பெறும் பகுதிகள் குறித்து தமிழக அரசின் சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லையெனக் கூறி அப்போதைய தமிழக அரசு நிராகரித்துவிட்டது.

    இந்நிலையில், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணை நிரம்பி வழிந்து உபரிநீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கடலில் கலக்கும் காவிரி நதி உபரிநீரின் ஒருபகுதியை வறண்டு கிடக்கும் வசிஷ்டநதிக்கு கால்வாய் அமைத்து திருப்பிவிடும் திட்டத்தை ஆய்வு செய்து செயல்வடிவம் கொடுத்திட மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டுமென, மூன்று மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வாழப்பாடி ஜவஹர், ஏத்தாப்பூர் முன்னோடி விவசாயி கொட்டவாடி குப்புசாமி ஆகியோர் கூறியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை அமைந்திருந்தும் சேலம் கிழக்கு மாவட்டத்தில் ஆறு, குளம், குட்டை, ஏரிகள் உள்ளிட்ட பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. வறட்சியால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போவதால் பயிர்செய்ய வழியின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    எனவே, விவசாயிகளின் நலன் கருதி, ஒகேனக்கலில் இருந்து பெரியகுட்டிமடுவு வரை கால்வாய் அமைத்தோ அல்லது குழாய்கள் அமைத்தோ காவிரி நதிநீரை கொண்டு வந்து வசிஷ்டநதியில் விடும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தினால், சேலம் கிழக்கு மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களிலும் வேளாண்மைத் தொழில் செழிப்படைந்து விவசாயிகள் வாழ்வு பெறுவார்கள். எனவே இத்திட்டத்தை ஆய்வு செய்து செயல்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும் என்றனர்.
    ×