search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரையோர மக்கள் நிவாரண முகாமில் தஞ்சம்"

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் 108 பேர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #Metturdam #Cauvery
    பள்ளிப்பாளையம்:

    5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடி நிரம்பியதையடுத்து தற்போது விநாடிக்கு 76 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    5 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி ஆற்றில் வெள்ளம் வருவதை காண கரையோர பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து செல்கின்றனர். கரையோர பகுதியில் முன் எச்சரிக்கையாக போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றின் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் முன்கூட்டியே பள்ளிப்பாளையத்தில் காவிரி கரையோரம் காலி செய்யப்பட்ட 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த வீடுகளில் இருந்த பொதுமக்கள் ஏற்கனவே வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். ஆகவே பொதுமக்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.

    பள்ளிப்பாளையம் பாவடி தெரு அருகில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டு உள்ள முனியப்பசாமி சிலையின் 13 அடி உயர பீடத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுபோல் ஆதிகேசவ பெருமாள் கோவிலை தொட்டப்படி காவிரி வெள்ளம் செல்கிறது. ஆவரங்காடு பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தபடி சென்றது. காக்காத்திட்டுபாறை பகுதியில் உள்ள விநாயகர் கோவிலையும் வெள்ளம் சூழ்ந்தது.

    பொதுமக்கள் வழக்கமாக குளிக்கும் இடங்களான பள்ளிப்பாளையம் காவிரிப்படித்துறை, ஜனதா நகர், ஆவாரங்காடு, அக்ரஹாரம் பகுதியில் நேற்று இரவு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு பலகை நகராட்சி மற்றும் ஊராட்சி சார்பில் நடப்பட்டது. அதில், ‘‘கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள காரணத்தினால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவே, துணி துவைக்கவோ வேண்டாம்’’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குமாரபாளையம் மணிமேகலை இந்திரா நகரில் 5 வீடுகளும், கலைமகள் நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.

    இப்பகுதியில் உள்ள 31 குடும்பங்களை சேர்ந்த 30 ஆண்கள், 39 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் சேர்த்து மொத்தம் 75 பேர் குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா நகராட்சி திருமண மண்டபத்திற்கு வருவாய்த்துறையின் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் இந்திரா நகர், மணிமேகலை தெருவில் வசித்து வரும் 6 குடும்பங்களை சேர்ந்த 8 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் குழந்தைகள் என 33 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு புத்தர் வீதியில் செயல்பட்டு வரும் நகராட்சி தொடக்கப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசின் சார்பாக அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலெக்டர் ஆசியா மரியம் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.

    ஆற்றின் 2 கரைகளையும் தழுவியபடி தண்ணீர் செல்வதால் பரமத்திவேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட காவிரி கரையோர பகுதிகளில் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசம்பாளையம், ஜேடர்பாளையம், கண்டிப்பாளையம், அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளப்பெருக்கின் காரணமாக நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆற்றில் மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Metturdam #Cauvery

    ×