search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆகாய நடைமேம்பாலம்"

    • பொதுமக்கள் வசதிக்காக பாலத்தில் எஸ்கலேட்டர் வசதி, லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
    • பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு வருபவர்கள் மட்டுமே இந்த பாதையை பயன்படுத்துகிறார்கள்.

    சென்னை:

    தியாகராய நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் பஸ் நிலையம் வரை ரூ.28.5 கோடி செலவில் பிரமாண்ட ஆகாய நடை மேம்பாலம் கட்டப்பட்டது. இதை கடந்த மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பொதுமக்கள் வசதிக்காக பாலத்தில் எஸ்கலேட்டர் வசதி, லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த பாலத்தில் உள்ள எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதையொட்டி நகரும் படிக்கட்டுகள் வருகிற 13-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் 14-ந்தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மூடப்பட்டிருக்கும்.

    14-ந்தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மார்க்கெட் சாலை ரெயில் நிலைய லிப்டும் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும்.

    பணி நடைபெறும் நேரத்தில் எஸ்கலேட்டர்கள் மூடப்பட்டிருப்பின் லிப்ட் மற்றும் படிக்கட்டுகளையும், லிப்ட் மூடப்பட்டிருப்பின் எஸ்கலேட்டர்களையும் பயன்படுத்தி கொள்ள மாநகராட்சி சார்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேம்பாலம் திறக்கப்பட்டு இரண்டு, மூன்று முறை எஸ்கலேட்டரில் பழுது ஏற்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. பின்பு கோளாறு சரி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

    திறக்கப்பட்ட சில வாரங்கள் ஆர்வமிகுதியால் அதிகளவு பொதுமக்கள் பாலத்தை பயன்படுத்தினார்கள்.

    தி.நகரை பொறுத்தவரை ரங்கநாதன் தெருவுக்குதான் பொருட்கள் வாங்க அதிக அளவில் மக்கள் வருகிறார்கள். அவர்கள் ரெயில் நிலையத்துக்கோ அல்லது பஸ் நிலையத்துக்கோ செல்ல ஆகாய நடை மேம்பாலம் தேவைப்படுவதில்லை.

    மேலும் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இறங்கி பஸ் நிலைய பகுதிக்கு செல்பவர்களும் குறைவு. ஏனெனில் அங்கு பெரிய அளவில் வணிக நிறுவனங்கள் இல்லை.

    பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு வருபவர்கள் மட்டுமே இந்த பாதையை பயன்படுத்துகிறார்கள்.

    அதே போல் தெற்கு உஸ்மான் ரோட்டில் உள்ள கடைகளுக்கு செல்பவர்களும், பொருட்கள் வாங்கி விட்டு திரும்புபவர்களும் பஸ் நிலையத்துக்கோ அல்லது ரெயில் நிலையத்துக்கோ செல்வதாக இருந்தாலும் ஆகாய நடை மேம்பாலத்தை விரும்புவதில்லை.

    இதனால்தான் கூட்டம் குறைகிறது. பயணிகள் நெரிசலில் சிக்கி திண்டாடுவதை தவிர்க்கவே இந்த நடை மேம்பாலம் கட்டப்பட்டது. எனவே பொதுமக்கள் ஆகாய நடை மேம்பாலத்தை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.

    • ஜி.எஸ்.டி. சாலையை கடக்கும் வகையில் ஆகாய நடைமேம்பால பணிகள் 2020-ம் ஆண்டு நிறைவடைந்தது.
    • ஆகாய நடைமேம்பாலத்தில் 6 எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை தாம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள ஜி.எஸ்.டி. சாலையை தினமும் 1.75 லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த பகுதியில் ஏற்கனவே மேம்பாலம் இல்லாததால் பயணிகள் தாம்பரம் மாநகர பஸ் நிலையம், அரசு விரைவு பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து ரெயில் நிலையத்துக்கு செல்ல ஜி.எஸ்.டி. சாலையையே கடந்து சென்றனர். தினமும் 85 ஆயிரம் பயணிகள் 45 மீட்டர் அகலமுள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடந்து சென்றனர். இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டன. இதையடுத்து பயணிகள் வசதிக்காக அந்த பகுதியில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கியது. ஜி.எஸ்.டி. சாலையை கடக்கும் வகையில் ஆகாய நடைமேம்பால பணிகள் 2020-ம் ஆண்டு நிறைவடைந்தது.

    அதன்பிறகு பொதுமக்கள் வசதிக்காக நடை மேம்பாலம் திறக்கப்பட்டது. பின்னர் ஆகாய நடை மேம்பாலத்தை ரெயில் நிலையத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரெயில்வேயிடம் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டத்துக்காக மாநில நெடுஞ்சாலைத்துறை ரூ.20 கோடி செலவிட்டது. இதையடுத்து பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்நிலையில் ஆகாய நடைபாதையை தாம்பரம் ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணிகள் முடிந்து பயணிகள் வசதிக்காக திறக்கப்பட்டது. இதையடுத்து தாம்பரம் மாநகர பஸ் நிலையம், அரசு விரைவு பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ஆகாய நடைமேம் பாலம் மூலம் பயணிகள் நேரடியாக தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு சென்று வருகிறார்கள். இந்த ஆகாய நடைமேம்பாலத்தில் 6 எஸ்கலேட்டர்கள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் ரெயில் நிலைய நுழைவு வாயிலில் ஒரு டிக்கெட் கவுண்டரும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆகாய நடை மேம்பாலம் 11 மீட்டர் அகலம் கொண்டது.

    இந்த ஆகாய நடை மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதால் தற்போது ஜி.எஸ்.டி. சாலையில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

    ×