search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசுக்கு கோரிக்கை"

    • ஆசிரியர் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட கிளை சார்பில் ஓசூரில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    • ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினரை சந்தித்து பேசி கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு வருகிறார்.

    ஓசூர்,

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட கிளை சார்பில் ஓசூரில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆந்திர சமிதியில் நடந்த விழாவிற்கு மாவட்ட தலைவர் சீனி. சாரதி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாபதி தசரதராமிரெட்டி, ஓசூர் ஒன்றிய தலைவர் நாகபிரசாத் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். இதில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம் சண்முகநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் மாநில தலைவர் ரவி, மாநில பொருளாளர் முருக.செல்வராசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

    பின்னர், சண்முகநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பெற்று வந்த பல்வேறு சலுகைகள், உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், இன்று புதிய ஆட்சி உருவாகியுள்ளது. கடந்த ஆட்சியில், நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் பழிவாங்கப்பட்டனர்.

    தற்போதைய அரசு. ஆட்சிக்கு வந்ததும், கடந்த ஆட்சியில் போடப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை, ரத்து செய்துள்ளது. கடந்த ஆட்சியில் நியாயான கோரிக்கைகளுக்காக போராடியும், ஒரு முறை கூட எங்களை அழைத்து பேசவில்லை. இன்றைய முதல்-அமைச்சர் தொடர்ந்து ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினரை சந்தித்து பேசி கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு வருகிறார்.

    மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி தவிர, மற்ற பணிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும். எங்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் படிப்படியாக நிறைவேற்றி தரும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு,ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நலன் காத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திறமை இருந்தும் கூலி வேலைக்கு செல்லும் இறகுப்பந்து விளையாட்டு வீரர் அரசு தனக்கு பொருளுதவி அளித்து ஊக்குவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
    • பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்ற ஜனகன் போதிய பொருளாதார வசதியின்மையால், தனது 18-வது வயது முதல் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே முத்துக்குடா கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜனகன் (வயது 27). இறகு பந்து விளையாட்டு வீரரான இவர், தேசிய அளவில் 3 முறை தங்கப்பதக்கமும், சர்வதேச அளவில் 3 முறை தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.

    தந்தை இறந்துவிட்டதால் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். கூலித்தொழிலாளியான தாய் கற்பகம் தன்னால் முடிந்த கூலி வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

    இந்நிலையில் ஜனகன் தனது 13-வது வயதிலிருந்தே இறகுப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனை அறிந்த தாய் அவருக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வாங்கிக் கொடுத்தார்.

    அப்போதிலிருந்தே பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்ற ஜனகன் போதிய பொருளாதார வசதியின்மையால், தனது 18-வது வயது முதல் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    அப்போது ஜனகளின் விளையாட்டு ஆர்வத்தை அறிந்த அலுவலர்கள், சக நண்பர்கள் நாங்கள் உதவுகிறோம் விளையாட்டை தொடருமாறு அவரிடம் கூறியுள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து ஜனகன் மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து மாநில அளவில், தேசிய அளவில் என பல்வேறு சாதனைகள் படைத்ததோடு, சர்வதேச அளவில் பூட்டானில் நடைபெற்ற செளத் ஏசியன் போட்டியில் ஒரு முறை தங்கப்பதக்கமும், நேபாளத்தில் நடைபெற்ற ஓபன் இண்டர்நேஷனல் சாம்பியன்ஷிப்பில் 2 முறை தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில் வெளிநாட்டிற்கு சென்று விளையாட போதிய பொருளாதாரம் வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள ஜனகன் கூறுகையில், நான் இறகு பந்து விளையாட்டில் சர்வதேச அளவில் 3 முறை தங்கம் வென்று தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    இருந்த போதிலும் தேசிய அளவில் நடைபெறுகின்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கிலும், வெளிநாடுகளுக்கு சென்று சர்வதேச அளவில் விளையாட லட்சக்கணக்கிலும் செலவாகிறது.

    என்னால் முடிந்தவரை நானே வேலை பார்த்தோ, தாய் மற்றும் நண்பர்கள் உதவியோடு இதுவரை விளையாடி விட்டேன். இனிமேலும் நான் தொடர்ந்து விளையாட தமிழக அரசு எனக்கு பொருளுதவி மற்றும் ஏதேனும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    மேலும் இது தொடர்பாக இன்று மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தார். இதற்கிடையில் தந்தையின்றி தவித்து வரும் எனது மகன் விளையாட்டில் மென்மேலும் உயர தமிழக அரசு உதவிட வேண்டும் என தாய் கற்பகம் கேட்டுக்கொண்டார்.

    ×