search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்பல்லோ மருத்துவர்"

    சிகிச்சையின் போது ஜெயலலிதா இனிப்பு மற்றும் பழங்கள் சாப்பிட்ட விவகாரம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர், செவிலியர் வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பதால் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவர் ஷில்பா, செவிலியர் ஹெலனா ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

    மருத்துவர் ஷில்பா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான், 2016-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி பணியில் சேர்ந்தேன். அப்போது, ஜெயலலிதா உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அபாயகரமான கட்டத்தில் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நோயாளியாகவே ஜெயலலிதா இருந்தார். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட டிசம்பர் 4-ந் தேதி அன்று நான், இரவு பணிக்கு வந்தேன்.

    நான் பணிக்கு வந்தபோது, ஜெயலலிதாவுக்கு இருதயம் செயல் இழந்து போய் அதை செயலுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு இறுதியாக ‘எக்மோ’ பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. ஜெயலலிதாவுக்கு ‘எக்மோ’ பொருத்தப்படுவதற்கு முன்பாக அவரது இருதயத்தை கையால் மசாஜ் செய்து செயலுக்கு கொண்டுவர முயற்சித்து அது பயன் அளிக்காமல் போனதும் ‘கரண்ட் ஷாக்’ கொடுத்து செயலுக்கு கொண்டுவர முயற்சித்துள்ளனர்.

    அதுவும் பயன் அளிக்காமல் போகவே, இருதயத்தை பிளந்து நேரடியாக இருதய பகுதியில் மசாஜ் செய்து உயிரூட்ட முயற்சித்துள்ளனர். அதுவும் பயன் அளிக்காததால் மார்பு எலும்புகள் துண்டிக்கப்பட்டு இருதய பகுதியில் ‘எக்மோ’ பொருத்தப்பட்டதாக தெரிந்துகொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.

    செவிலியர் ஹெலனா அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான், 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணியில் சேர்ந்தேன். நான் பணியில் இருந்த நாட்களில் சசிகலா, மருத்துவர் சிவக்குமாரை தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை அவர் சிகிச்சை பெற்று வந்த வார்டில் பார்க்கவில்லை. கண்ணாடி வழியாகவும் யாரும் பார்க்கவில்லை. டிசம்பர் 2-ந் தேதி மூச்சுத்திணறல் காரணமாக ஜெயலலிதாவுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது.

    3-ந் தேதி காலை 11 மணிக்கு வெண்டிலேட்டர் எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு மீண்டும் சீரியஸ் ஆனதால் உடனடியாக வெண்டிலேட்டர் இணைக்கப்பட்டது. இதன்பின்பு, இருதயம் செயல் இழக்கும் வரை ஜெயலலிதாவுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு இனிப்பு கொடுத்ததாக கூறுவது தவறு. எனக்கு தெரிந்தவரை ஜெயலலிதா இனிப்பு, பழங்கள் எதுவும் சாப்பிடவில்லை.

    இவ்வாறு வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

    ‘டிசம்பர் 4-ந் தேதி அதிகாலை ஜெயலலிதா 50 மில்லி காபி குடித்தார். அதன்பின்பு, ஜெயலலிதா எந்த உணவும் எடுத்துக்கொள்ளவில்லை’ என்று ஹெலனா தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாட்சியம் அளித்த அப்பல்லோ மருத்துவர் ரமா, டிசம்பர் 4-ந் தேதி மதியம் ஜெயலலிதா சாப்பாடு சாப்பிட்டதாக கூறி உள்ளார்.

    டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதி ஜெயலலிதாவுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டதாக செவிலியர்களின் குறிப்பில் உள்ளது. இதுதொடர்பாக செவிலியர் ஹெலனாவும் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், மருத்துவர்களின் குறிப்பில் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது சம்பந்தமாக எந்த குறிப்பும் இல்லை. மாறாக டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதிகளில் ஜெயலலிதாவின் உடல்நிலை நார்மலாக இருந்ததாக மருத்துவர்களின் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ‘நவம்பர் 22-ந் தேதி தேர்தல் வெற்றியை கொண்டாட ஜெயலலிதா இனிப்பு எடுத்துக்கொண்டார்’ என்று அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீகோபால் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்பல்லோ மருத்துவ அறிக்கையில், ‘ஜிலேபி, ரசகுல்லா, பாதுஷா மற்றும் திராட்சை, மாம்பழம், மலைவாழைப்பழம் போன்றவற்றை ஜெயலலிதா எடுத்துக்கொண்டார்’ என்று கூறப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா இனிப்பு, பழங்கள் சாப்பிடவில்லை என்று செவிலியர் ஹெலனா வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதுபோன்று அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்களின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. அதேபோன்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களும், மருத்துவர்கள், செவிலியர்களின் வாக்குமூலமும் முரண்பாடாக உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.
    ஜெயலலிதாவுக்கு போயஸ்கார்டனில் முதலுதவி சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை என்றும், மயக்கநிலையிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அப்பல்லோ மருத்துவர் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். #JayaDeathProbe #ApolloDoctor
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் சினேகாஸ்ரீ நேற்று ஆஜரானார்.

    2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி ஜெயலலிதா போயஸ்கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, ஆம்புலன்சில் சினேகாஸ்ரீ மருத்துவராக இருந்துள்ளார். அந்த அடிப்படையில் ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

    ஆணையத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    ஜெயலலிதாவுக்கு ‘திடீர்’ உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த தகவல் அடிப்படையில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து சென்ற ஆம்புலன்சில் நானும் சென்றேன்.

    போயஸ் கார்டனில் ஒரு நாற்காலியில் மயக்கநிலையில் ஜெயலலிதா அமர வைக்கப்பட்டிருந்தார். அங்கு முதலுதவி சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை.

    இதன்பின்பு, போயஸ்கார்டன் பணியாளர்கள் மூலம் ஜெயலலிதாவை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அப்போது ஆம்புலன்சில் சசிகலா, மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் உடன் வந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை ஜெயலலிதா மயக்கநிலையிலேயே இருந்தார்.

    இருதயத்துடிப்பு சீராக அவருக்கு மருத்துவமனையில் ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது. காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட தகவல் தவறானது.

    மேற்கண்டவாறு மருத்துவர் சினேகாஸ்ரீ தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக ஆணைய வட்டாரம் தெரிவித்தது.

    அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டபோது, ‘நான் எங்கு இருக்கிறேன்’ என்று ஜெயலலிதா தன்னிடம் கேட்டதாக சசிகலா ஆணையத்தில் ஏற்கனவே வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளார். ஆம்புலன்சில் உடன் சென்ற மருத்துவரான சினேகாஸ்ரீ, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை மயக்கநிலையிலேயே இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த முரண்பாடு குறித்து விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. #JayaDeathProbe #ApolloDoctor

    ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த வாக்குமூலம் முரண்படுவதால் ‘ரமணா’ பட பாணியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது. #Jayalalithaa #JayaProbe #Apollo
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு காலகட்டங்களில் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த 20 மருத்துவர்களின் பட்டியலை சசிகலா ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மருத்துவர்களிடம் தற்போது ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த பட்டியலில் இடம்பெற்ற அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீகோபால் மற்றும் மருத்துவர் ராமச்சந்திரன்(இருவரும் சர்க்கரை நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர்கள் ஆவர்) ஆகியோரிடம் நேற்று முன்தினம் ஆணையம் விசாரணை நடத்தியது.

    கோப்பு படம்

    சசிகலா அளித்த பட்டியலில் இடம்பெற்றிருந்த அப்பல்லோ மருத்துவமனையில் சர்க்கரை நோய் தடுப்பு சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் சாந்தாராமிற்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு அவர் ஆணையத்தில் ஆஜரானார்.

    ஜெயலலிதாவுக்கு எந்த ஆண்டு முதல் சிகிச்சை அளித்து வருகிறீர்கள்?, ஜெயலலிதாவுக்கு என்னென்ன உடல்நிலை பாதிப்பு இருந்தது?, உங்களது சிகிச்சையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்ததா? என்பது போன்று பல்வேறு கேள்விகளை நீதிபதி கேட்டார்.



    அதற்கு மருத்துவர் சாந்தாராம், ‘2000-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளித்தேன். அப்போது சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. 2015-ம் ஆண்டுக்கு பின்னர் ஜெயலலிதாவுக்கு நான் சிகிச்சை அளிக்கவில்லை. என்னை ஏன் அழைக்கவில்லை என்பது எனக்கு தெரியாது. எனக்கு பின்னர், ஜெயஸ்ரீகோபால் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக கேள்விப்பட்டேன். 2015-ம் ஆண்டுக்கு பின்னர் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றும் கேள்விப்பட்டேன். நான் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றியபோதும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவருக்கு சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

    ‘தொடர்ந்து 14 ஆண்டுகள் நீங்கள் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளித்து இருந்ததால் அவரது உடல்நிலை குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படி இருக்கும்போதும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் ஏன் உங்களை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவில் சேர்க்கவில்லை’ என்று சாந்தாராமிடம் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு, அதுபற்றி தனக்கு தெரியாது என்று மருத்துவர் சாந்தாராம் பதில் அளித்துள்ளார்.

    தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து கேள்வி எழுப்பிய ஆணையம், அதுபோன்று திடீர் மாரடைப்பு ஏற்படும்போது என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று கேள்வி எழுப்பியது.

    அதற்கு மருத்துவர் சாந்தாராம், ‘அதிக ரத்த அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டால் ரத்த ஓட்டம் நின்று விடும். சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், மூளை செயல் இழந்து விடும். மீண்டும் இருதயம் செயல்பட்டால் எல்லா உறுப்புகளும் செயல்படும். ஆனால், ஜெயலலிதாவுக்கு இருதயம் மீண்டும் செயல்படவில்லை’ என்று கூறி உள்ளார்.

    மேலும், ரத்த ஓட்டம் நின்றபின்பு கொடுக்கப்படும் மருந்துகள் செயல்படுமா? என்று கேட்டதற்கு, அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி உள்ளார். மருத்துவர் சாந்தாராமிடம் ஆணையத்தின் வக்கீல் எஸ்.பார்த்தசாரதி குறுக்கு விசாரணை செய்தார். அதேபோன்று சாந்தாராமிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக சசிகலா தரப்பு வக்கீல் ராஜ்குமார் பாண்டியன் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டார்.

    அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்த ஜெயலலிதா சிகிச்சை குறித்த மருத்துவ ஆவணங்களில், 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்போது ஜெயலலிதாவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால், ஜெயலலிதாவுக்கு அன்றைய தினம் மாலை 4.20 மணிக்கு இருதய அடைப்பு ஏற்பட்டதும், மீண்டும் இருதயத்தை செயல்பட வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது என்பதும் அப்பல்லோ மருத்துவர்களின் வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

    இருதய அடைப்பு ஏற்பட்டதும் ரத்த ஓட்டம் நின்று விடும் என்ற சூழ்நிலையில் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டதாக அப்பல்லோ மருத்துவ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருப்பது ஆணையத்துக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும், ஜெயலலிதாவுக்கு இருதய அடைப்பு ஏற்பட்ட பின்பு ‘ரமணா’ பட(நடிகர் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் இறந்தவருக்கு பரபரப்பாக சிகிச்சை அளிப்பது போன்ற காட்சி இடம்பெறும்) பாணியில் சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது. இதை அடுத்தடுத்து ஆஜராகும் மருத்துவர்கள் மூலம் உறுதி செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளது.  #Jayalalithaa #JayaProbe #Apollo
    ×