search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்"

    ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை தராமல் சிம்பு படங்களில் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். #STR #MichaelRayappan
    சிம்பு நடிப்பில் கடைசியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் தோல்வியடைந்தது. சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்தார். 

    ‘‘சிம்பு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு 27 நாட்கள் மட்டுமே நடித்து கொடுத்தார். டூப் நடிகரை வைத்து பல காட்சிகளை படமாக்கினோம். படம் முடிந்த நிலையில் அதை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்றார். இரண்டாம் பாகத்தில் அவர் நடித்துக்கொடுக்கவில்லை. படப்பிடிப்பில் அவர் ஒத்துழைப்பு அளிக்காததால் படம் திரைக்கு வந்து நன்றாக ஓடவில்லை. இதனால் ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதை சிம்பு ஈடு செய்ய வேண்டும்’’ என்று புகார் மனுவில் கூறியிருந்தார். 

    இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரணை நடத்தியது. ஆனாலும் இரு தரப்புக்கும் இடையே இன்னும் சமரசம் ஏற்படவில்லை. 



    இந்த நிலையில் சிம்பு செக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மைக்கேல் ராயப்பன் எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘‘சிம்புவால் நஷ்டமடைந்ததற்கு எனக்கு நியாயம் வேண்டும். இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தை நம்பி இருக்கிறேன். எனது பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் சிம்பு வேறு படங்களில் நடிக்கக்கூடாது. இப்போது அவர் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும், ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் வெளியான தகவல் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்புகொண்டு மீண்டும் புகார் செய்து இருக்கிறேன். படப்பிடிப்பு நடத்த அனுமதிக்ககூடாது. தயாரிப்பாளர் சங்கம் எனக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும்’’

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AAA #STR #Simbu #MichaelRayappan #AnbanavanAsaradhavanAdangadhavan

    ×