search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yogendra Sao"

    ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் மந்திரியிடம் ‘வாட்ஸ் அப்’ மூலம் குற்ற வழக்கில் ஒரு கோர்ட்டு விசாரணை நடத்தி உள்ளது. இதைக் கண்டு சுப்ரீம் கோர்ட்டு அதிர்ச்சி அடைந்து உள்ளது. #SupremeCourt #MinisterYogendraSao
    புதுடெல்லி:

    ஜார்கண்ட் மாநில முன்னாள் மந்திரி யோகேந்திர சாவ். அவரது மனைவி நிர்மலா தேவி. இவர் எம்.எல்.ஏ. ஆவார். இவர்கள் 2 பேரும் அங்கு 2016-ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான குற்ற வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் தங்கி இருக்க வேண்டும், வழக்கு விசாரணை தவிர்த்து வேறு எந்த காரணத்தை கொண்டும் ஜார்கண்ட் செல்லக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு நிபந்தனை ஜாமீன் அளித்தது.



    இவர்கள் மீதான வழக்கில் ஹசாரிபாக்கில் உள்ள விசாரணை நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி ‘வாட்ஸ் அப்’ மூலம் விசாரணை நடத்தி குற்றச்சாட்டு பதிவு செய்து உள்ளது. அதுவும், இவர்கள் 2 பேரும் எதிர்ப்பு தெரிவித்தும், அந்த நீதிமன்றம் ‘வாட்ஸ் அப்’ மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ‘வாட்ஸ் அப்’ மூலம் தங்கள் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மந்திரி யோகேந்திர சாவ், அவரது மனைவி நிர்மலா தேவி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த வழக்கின் விசாரணையை ஹசாரிபாக் நீதிமன்றத்தில் இருந்து டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எல்.என்.ராவ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வாட்ஸ் அப் மூலம் வழக்கு விசாரணையா?” என கேட்டு நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அப்போது நீதிபதிகள், ஜார்கண்ட் மாநில அரசின் சார்பில் ஆஜரான வக்கீலிடம், “ஜார்கண்டில் என்ன நடக்கிறது? இந்த நடைமுறையை அனுமதிக்க முடியாது. நீதி நிர்வாகம் செய்வதை மிகத்தாழ்ந்த நிலைக்கு கொண்டு செல்வதை நாங்கள் அனுமதிக்க முடியாது” என காட்டமாக கூறினர்.

    மேலும், “வாட்ஸ் அப் வழியான விசாரணையின் வழியில் நாங்கள் இருக்கிறோம். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது என்ன மாதிரியான விசாரணை? இது என்ன தமாஷா?” என கேட்டனர்.

    இந்த வழக்கில் 2 வாரத்தில் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அப்போது ஜார்கண்ட் அரசு சார்பில் ஆஜரான வக்கீல், “யோகேந்திர சாவ் ஜாமீன் நிபந்தனையை மீறி, பல முறை போபாலை விட்டு வெளியேறி உள்ளார். எனவே இந்த வழக்கு விசாரணை தாமதம் ஆகிறது” என கூறினார்.

    ஆனால் அதை நிராகரித்த நீதிபதிகள், “அது வேறு பிரச்சினை. ஜாமீன் நிபந்தனையை அவர் மீறுகிறார் என்றால் ஜாமீனை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்யுங்கள். ஜாமீன் நிபந்தனையை மீறுகிறவர்கள் மீது எங்களுக்கு இரக்கம் வராது” என கூறினர்.  #SupremeCourt #MinisterYogendraSao
    ×