search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wet grinder"

    • வெட்கிரைண்டர், பம்ப்செட்டுக்கு ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் சிறு, குறு தொழில் முனைவோர்கள் கவலை அடைந்துள்ளனர்.
    • கொங்கு மண்டலத்தில் தயாரிக்கப்படும் வெட்கிரைண்டர் இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட வெட் கிரைண்டர் உற்பத்தியாளர்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.

    குறிப்பாக வெட்கிரைண்டர் தொழில் முக்கியமானதாக உள்ளது. கோவையில் அடையாளமாக உள்ள இந்த வெட் கிரைண்டர்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    கொங்கு மண்டலத்தில் மட்டுமே கிடைக்க கூடிய தரம் வாய்ந்த கற்களால் இவை உருவாக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் வெட்கிரைண்டர் இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஜி.எஸ்.டிக்கு முன்பு வெட் கிரைண்டர்களுக்கு 5 சதவீதமாக இருந்த வரி, ஜி.எஸ்.டி அறிமுகமானபோது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தொழில் முனைவோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, 18 சதவீதமாகவும், பின்னர் 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

    இதேபோல் 300க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் மூலம் பம்புசெட் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கு ஜி.எஸ்.டிக்கு முன்பு 5 சதவீத வாட் வரியே இருந்தது. ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பிறகு பம்ப்செட் மூல பொருட்களுக்கு 18 முதல் 28 சதவீத வரியும், அந்த பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பம்ப்செட்டுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்பட்டது. இந்த குழப்பமான நடைமுறையை மாற்ற வேண்டும் என தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வெட்கிரைண்டர் மீதான 5 சதவீத வரியை 18 சதவீதமாகவும், பம்ப்செட்டுகள் மீதான 12 சதவீத வரியை 18 சதவீதமாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு கோவையை சேர்ந்த வெட்கிரைண்டர், பம்ப்செட் தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கோவை வெட் கிரைண்டர் மற்றும் உதிரிபாக தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-கடந்த 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது 50 சதவீதம் மட்டுமே கிரைண்டர் உற்பத்தி செய்து வருகிறோம். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டியில் தொடங்கிய பிரச்சினை, கொரோனா, குவாரிகள் மூடல், மூலப்பொருட்கள் விலை உயர்வு என தொடர்ந்து வருகிறது.

    ஜி.எஸ்.டி வரியை 18 சதவீதமாக உயர்த்தியதால் கிரைண்டர்கள் விலை மேலும் உயரும். தற்போது 2 லிட்டர் டேபிள் டாப் கிரைண்டர் ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அதன் விலை மேலும் ரூ.500 முதல் ரூ.600 உயரும். டில்டிங் கிரைண்டர் ரூ.90 ஆயிரத்திற்கும், கன்வென்சனல் கிரைண்டர் ரூ.60 ஆயிரத்திற்கும் விற்கப்பட்டது.

    இனி இவற்றின் விலை கடுமையாக உயரும். விலை உயர்ந்தால் விற்பனை சரிவை சந்திக்கும். விற்பனை மந்தமானால் உற்பத்தியாளர்கள் தான் ஆர்டர்கள் கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள். தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழப்பார்கள். இவற்றை எல்லாம் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    டேக்ட் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:-

    மத்திய அரசு சிறு, குறு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கிறதா என்பது எங்களுக்கு புரியவில்லை. ஏனென்றால் கொரோனாவின் தாக்கம், மூலப்பொருட்கள் விலை உயர்வு என வெட்கிரைண்டர் தொழில் ஏற்கனவே பாதிப்பில் உள்ளது. இந்த நிலையில் வெட் கிரைண்டர்களுக்கான வரியை உயர்த்தியுள்ளது தொழில் முனைவோர்களுக்கு வேதனை அளிக்கிறது.

    மேலும் பம்ப்செட் வரி, மூலப்பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற கூறி டெல்லியில் அமைச்சர்களை சந்தித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மாறாக, வெட்கிரைண்டருக்கான வரியை உயர்த்தியுள்ளது. இதனால் தொழில் கடுமையான பாதிப்படையும்.

    புதிதாக வேலையையும் உருவாக்க முடியாத சூழல் ஏற்படும். எனவே சிறு, குறு தொழிலை பாதுகாக்க மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும். விரைவில் தொழில் முனைவோர்கள் ஒன்று கூடி ஆலோசிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×