search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uthiyur hills"

    • காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலைப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகளை வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.
    • ஆட்டுப்பட்டி அருகே இரும்பு சங்கிலியில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய்களையும் சிறுத்தை தூக்கிச்சென்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை அங்கு பதுங்கி மலையடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலைப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகளை பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். மேலும் கூண்டுகளை வைத்து சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பல்வேறு இடங்களில் சிறுத்தையை பார்த்ததாக பொதுமக்கள் தகவல் தெரிவித்து வந்தனர். அந்த இடங்களில் வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மலையடிவார பகுதியில் உள்ள ஆட்டுப்பட்டியில் ஆடுகள் மாயமாகி வந்தது. மேலும் ஆட்டுப்பட்டி அருகே இரும்பு சங்கிலியில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய்களையும் சிறுத்தை தூக்கிச்சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தை மனிதர்களை தாக்குவதற்குள் வனத்துறை விரைந்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என ஊதியூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.

    சிறுத்தை ஊதியூர் வனப்பகுதியில் தினசரி வந்து போகும் இடங்கள், தண்ணீர் குடிக்க வரும் இடங்கள், கூண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள், வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் சிறுத்தையின் கால்தடங்கள் ஏதும் கிடைக்கவில்லை. மேலும் 10 நாட்களுக்கு முன்பு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது அதிலும் சிறுத்தை குறித்த காட்சிகளும் கிடைக்கவில்லை.

    ஒருவேளை சிறுத்தை வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் அல்லது மலையின் உச்சிக்கு சென்றிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்எனினும் சிறுத்தை இன்னமும் ஊதியூர் மலைப்பகுதியில்தான் பதுங்கி உள்ளதா அல்லது வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து விட்டதா என கண்டுபிடிக்க வனத்துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தை குறித்த உறுதியான தகவலை அளிக்க வேண்டும் என ஊதியூர் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×