search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Unity Yatra"

    • பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாட்டை பிளவுபடுத்துகிறார்கள்.
    • இந்தியா, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் மரியாதைக்காக நிற்கிறது.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த செப்டம்பர் 7ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை கடந்தது.

    கடந்த 5ம் தேதி மீண்டும் அரியானாவுக்குள் நுழைந்த பாதயாத்திரை நேற்று அம்பாலா மாவட்டத்தில் நிறைவடைந்தது.

    இதையடுத்து இன்று பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ராகுல்காந்தி தனது பாதயாத்திரையை தொடங்குகிறார். இதற்காக பஞ்சாப் சென்ற ராகுல் காந்தி நேற்று அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் வழிபாடு நடத்தினார்.

    பின்னர் நேற்று மாலை சிர்ஹிந்த்துக்கு சென்று அங்கு இரவு தங்கினார். இன்று காலை சிர்ஹிந்தில் உள்ள குருத்வாரா பதேகர் சாகிப்புக்கு ராகுல்காந்தி சென்று வழிபட்டார். அப்போது அவர் தலைப்பாகை அணிந்திருந்தார். அவருடன் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமிர்ந்தர்சிங் ராஜா உள்ளிட்ட தலைவர்கள் உடன் சென்றனர்.

    அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-

    இந்திய ஒற்றுமை யாத்திரையில் நான் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், வேலையில்லா இளைஞர்கள் என பலரிடம் பேசினேன். இதன் மூலம் இந்த யாத்திரையில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

    பா.ஜ.க, நாட்டில் பயத்தையும், வெறுப்பையும் பரப்புகிறது. ஆனால் இந்தியா, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் மரியாதைக்காக நிற்கிறது. இதனால்தான் இந்தியா ஒற்றுமை யாத்திரை வெற்றி பெற்றது.

    பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாட்டை பிளவுபடுத்துகிறார்கள். ஒரு மதத்தை இன்னொருவருக்கு எதிராகவும், ஒரு சாதியை இன்னொருவருக்கு எதிராகவும், ஒரு மொழியை இன்னொருவருக்கு எதிராகவும் வைத்து நாட்டின் சூழலை கெடுத்துவிட்டார்கள்.

    எனவே அன்பு, ஒற்றுமை, சகோதரத்துவம் கொண்ட மற்றொரு பாதையை நாட்டுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்தோம். அதற்காகவே இந்த யாத்திரையை தொடங்கியுள்ளோம்.

    இந்த யாத்திரை பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும்போது அது சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பஞ்சாப்பில் இன்று ராகுல்காந்தி தனது யாத்திரையை சிர்ஹிந்தில் இருந்து தொடங்கினார். பஞ்சாப்பில் தினமும் 25 கி.மீ. தூரத்தை கடக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 19ம் தேதி பதன்கோட்டில் யாத்திரை முடிவடைகிறது. பின்னர் ஜம்மு- காஷ்மீருக்குள் நுழைகிறது.

    ×