search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tuticorin Shootout"

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மக்களின் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி கேட்பது நமது உரிமை. கேள்வி கேட்காவிட்டால் நம் கையை எடுத்து நம் கண்ணிலேயே குத்துவார்கள் என்றார். #Prakashraj
    சி.ஐ.டி நகரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் ’மறக்க முடியுமா தூத்துக்குடியை’ என்ற தலைப்பில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மக்களின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்று பேசியதாவது:-

    ‘‘ரியல் எஸ்டேட் போல தமிழகம் மாறி வருகிறது. அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகின்றன. மக்கள் அவர்களை வேண்டாம் என்று முடிவு எடுத்து பல காலங்கள் ஆகிவிட்டது. காது இல்லாதவர்களிடம் பேசுவது வீண். என்னை யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதைப்பற்றி நான் கவலைபட மாட்டேன்.

    தூத்துக்குடியில் நடந்தவற்றையும், நடப்பவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாட்டு மக்களை அச்சத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அப்படி பயமுறுத்தி ஆள்பவர்களின் முடிவு மோசமானதாக இருக்கும்.



    நான் ஏன் நேரடி அரசியலுக்கு வர மறுக்கிறேன் என்றால் தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. நான் அரசியலில் தான் இருக்கிறேன். ஆனால் அரசியல்வாதியாக இல்லை. சுயநலமில்லாமல் மக்களுக்கான உரிமையை பேச நினைக்கிறேன். என்னை போன்றோரின் குரல் மக்களுக்கு தேவை. கேள்வி கேட்பது நமது உரிமை. கேள்வி கேட்காவிட்டால் நம் கையை எடுத்து நம் கண்ணிலேயே குத்துவார்கள்’’.

    இவ்வாறு அவர் பேசினார். #Prakashraj #TuticorinShootOut #BanSterlite

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. #BanSterlite #SaveThoothukudi
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    பொதுமக்கள் கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் செல்போன் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலவரத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,



    ‘‘தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் 13 அப்பாவி மக்கள் உயிர்களை இழந்ததற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு துப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல்துறையின் அராஜக செயலை வன்மையாக கண்டிக்கிறோம். தூத்துக்குடி நகர மக்கள் 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிடுங்கள் என்று போராடுகிறார்கள். இதுவரை அதற்கு சரியான தீர்வு இல்லை.

    பேரிடர்களும், உயிரிழப்புகளும் நடக்க கூடாது என்றுதான் ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது ஆலையை மூடுவதற்கும், அந்த ஆலைக்கு வழங்கப்படும் மின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிட்டார். ஆனால் ஆலை நிர்வாகம் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றது. ஆலையை நடத்த நிரந்தரமாக தடை போட்டு இருந்தால் இன்று 13 உயிர்களை இழந்து இருக்க மாட்டோம்.

    இந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு காண ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட வேண்டும். அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை இயக்குனர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.’’

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது. #BanSterlite #SaveThoothukudi

    ×