search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic Inspector Kanagaraj"

    வாகனம் மோதி பலியான போக்குவரத்து இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த கனகராஜ், கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகில் உள்ள வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழ் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில், அவ்வழியே வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

    படுகாயமடைந்த கனகராஜ் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

    மோட்டார் வாகன ஆய்வாளரிடமிருந்து தப்பிப்பதற்காகத் தான், வாகனம் மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வேண்டுமென்றே மோதி நிற்காமல் சென்றுள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட வேண்டும். விசாரணையின் முடிவில் ஒருவேளை விபத்தாக இல்லாமல் இருந்தால், மோட்டார் வாகன ஆய்வாளரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒருவேளை விபத்தாக இருக்கும்பட்சத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வாகனத்தை மோதிவிட்டு, மனிதாபிமான அடிப்படையில் வண்டியை நிறுத்தாமல் சென்ற குற்றத்திற்காக அவர்மீது நடவடிக்கை எடுத்து, வாகன ஓட்டுநரின் உரிமத்தை ஆயுட்காலம் முழுவதும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.

    காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொலையுண்ட காவல் சிறப்பு சார் ஆய்வாளர் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க உத்தரவிட்டுள்ள முதல்-அமைச்சர், பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கியிருப்பது பாரபட்சமாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.

    எனவே, முதல்-அமைச்சர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணியாக விளங்கும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென்றும், காவல்துறை சிறப்பு சார் ஆய்வாளரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தக்க தண்டனைப் பெற்றுத் தர வேண்டும் என்றும், மோட்டார் வாகன ஆய்வாளர் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை தீர விசாரித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்மென்றும், மோட்டார் வாகன ஆய்வாளரும் பணியில் இக்கும்போது உயிரிழந்ததால், காவல் துறை சிறப்பு சார் ஆய்வாளரின் குடும்பத்திற்கு வழங்கியதைப்போல முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மோட்டார் ஆய்வாளர் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் வட்டார போக்குவரத்து பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கரூர்:

    கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கனகராஜ் (வயது 55). இவர் பறக்கும் படை பிரிவிலும் செயல்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் சீருடை அணிந்து அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து அருகில் உள்ள கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள வெங்கக்கல்பட்டி பிரிவு மேம்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த வேனை ஆய்வாளர் கனகராஜ், சோதனை செய்வதற்காக கைகளை காட்டி நிறுத்த முயன்றார். ஆனால், மின்னல் வேகத்தில் வந்த அந்த வேன் நிற்காமல் கனகராஜ் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ் பலத்த காயமடைந்து நடுரோட்டில் உயிருக்கு போராடினார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கனகராஜ்


    இதுகுறித்து தாந்தோன்றி மலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான வேனை ஓட்டி வந்த டிரைவர் அந்த வேனில் என்ன எடுத்து சென்றார்? ஏன் நிறுத்தாமல் வாகனத்தை இயக்கினார்? இந்த சம்பவம் விபத்தா அல்லது கொலையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மோட்டார் ஆய்வாளர் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் வட்டார போக்குவரத்து பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற வேன் மோதி உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


    ×