என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "toll gate employee"

    செங்கல்பட்டு அருகே தனியார் பஸ் டிரைவருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    செங்கல்பட்டு:

    மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட தனியார் சொகுசு பஸ் ஒன்று, இன்று அதிகாலை 5 மணி அளவில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடிக்கு வந்தது.

    இந்த பஸ்சை செஞ்சியை சேர்ந்த பிரபு ஆனந்த் (35) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சை நிறுத்திய சுங்கச் சாவடி ஊழியர்கள் கட்டணம் செலுத்தும்படி கூறினார்கள். அப்போது, பஸ் டிரைவர் ‘‘இந்த சுங்கச் சாவடிக்கு லைசென்சு முடிந்துவிட்டது. எனவே கட்டணம் செலுத்த முடியாது’’ என்று சொன்னதாக கூறப்படுகிறது.

    இதனால், பஸ்டிரைவருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னால் வந்த பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் நீண்டதூரத்துக்கு நின்று கொண்டிருந்தன.

    இந்த நிலையல் டிரைவர் பஸ்சை அங்கிருந்து சிறிது தூரம் நகர்த்தினர். அப்போது 10-க்கும் அதிகமான சுங்கச் சாவடி ஊழியர்கள் சூழ்ந்து கொண்டு பஸ் மீது தாக்குதல் நடத்தி, நிறுத்த முயன்றனர்.

    இதனால் டிரைவருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மற்ற தனியார் பஸ் டிரைவர்கள் அதை கண்டித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து அடியோடு நின்றதால் தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    பஸ் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பிறகு 6 மணி அளவில் பஸ்களும் வாகனங்களும் அங்கிருந்து புறப்பட்டன. இந்த பிரச்சினை காரணமாக செங்கல்பட்டு-சென்னை இடையே 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×