search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the municipal area"

    • 3-வது நாளாக இன்று தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது.
    • பெரும்பாலான இடங்களில் குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்ப பெறவேண்டும்.

    இதற்காக நடைபெறவுள்ள டெண்டர் குறித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.

    குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ.725-யை ஏப்ரல் முதல் வழங்க வேண்டும்.

    மாதந்தோறும் முதல் தேதி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று முன்தினம் முதல் தூய்மை பணியாளர்கள், குடிநீர் வினியோக பணியாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து 2-வது நாளாக நேற்று ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலகங்கள் முன்பாகவும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, மாநகராட்சி மைய அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் 3-வது நாளாக இன்று தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. பணியாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.

    இது குறித்து ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி கூறியதாவது:

    3-வது நாளாக இன்று தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் நாளை காலை மாநகராட்சி அலுவலகத்தில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.அதன் முடிவை பொறுத்து பணியாளர்களின் போராட்டமும் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் 3 நாட்களாக குப்பைகள் அள்ளும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×