search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thaipoosa Festival"

    • கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் கந்தபெருமானை வழிபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்றுமாலை அனைத்து கோவில்களிலும் தேரோட்டம் நடக்கிறது.

    ஊத்துக்குளி : திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த 28-ந்தேதி கதித்தமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை கீழ் தேரோட்டம் நடைபெறுகிறது.

    இதையொட்டி கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை நேரத்தில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று காலை சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு மேல் சாமி திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும் அதனைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் சாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 6:30 மணிக்கு சுவாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4 மணிக்கு திருத்தேர் நிலை தேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை பரிவேட்டை நடைபெறும். 7-ந்தேதி இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சாமி உலா காட்சி நடைபெறும்.

    வருகிற 8-ந் தேதி காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம் அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணம் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்று இரவு மகா தரிசனம் சுப்பிரமணியசாமி வள்ளி-தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். வருகிற 9-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.

    அலகுமலை

    பொங்கலூர் அருகே அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தினசரி உபயதாரர்கள் சார்பாக சாமிதிருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு சாமி திருத்தேர் ஏற்றம் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தொடங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, கலெக்டர் வினீத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், எம்.எஸ்.எம். ஆனந்தன்,ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார், அலகுமலை ஊராட்சித் தலைவர் தூயமணி உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க உள்ளனர். நாளை 6-ந் தேதி மாலை பரிவேட்டையும், 7-ந் தேதி சாமி திருவீதி உலாவும், 8-ந் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    சிவன்மலை

    காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 30-ந்தேதி காலை 6 மணிக்கு வீரகாளியம்மன் மலைக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு பூஜையும், மயில் வாகன அபிஷேகமும் நடைபெற்றது. 11 மணியளவில் விநாயகர் வழிபாடும் தொடர்ந்து முருகன் கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் மதியம் 12 மணியளவில் கொடி ஏற்றப்பட்டது. இதனை கட்டளைதாரர் 24 நாட்டு கொங்கு நாவிதர்கள் செய்திருந்தனர்.பின்னர் சாமி சப்பரத்தில் மலையை வலம் வந்தார். 1 மணிக்கு சாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடைபெற்றது.தொடர்ந்து தினசரி காலை 9 மணிக்கு காலசாந்தி கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டபக்கட்டளை நடைபெற்றது.நேற்று காலை 10 மணிக்கு மைசூர் பல்லக்கில் சாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது.இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 6 மணிக்கு சாமி ரதத்திற்கு எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில் தேர் வடம் பிடித்து பக்தர்களால் பிடிக்கப்பட்டு இழுத்து செல்லப்படும்.

    நாளை 6-ந் தேதி (திங்கட்கிழமை) 2-வது நாளாக மீண்டும் பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டு மலையை சுற்றி வலம் வரும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்செல்வார்கள்.வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலைதிருத்தேர் நிலையை அடைகிறது.

    வருகிற 10-ந்தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடக்கிறது. 11-ந் தேதி பகல் 12 மணிக்கு மகா தரிசனம் நடக்கிறது. 12-ந்தேதி மதியம் 12 மணிக்கு தீர்த்த வாரியும், 14-ந் தேதி மாலை 3 மணியளவில் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழாவும், திருமலைக்கு சாமி எழுந்தருளலும், மலைமீது அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. இரவு கொடி இறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது. மலைக்கோவி ல்ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச விழா 28-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை சுவாமி கிரிவலம் நடைபெற்றது. நேற்று ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், யானை வாகன பவனியும் நடைபெற்றது.

    இன்று காலை 6 மணிக்கு, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 3மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து 6ந் தேதி பரிவேட்டை, தெப்போற்சவம், குதிரை வாகன பவனியும், 7-ந் தேதி மகா தரிசனம், அன்னதான நிழ்ச்சியும், 8ந் தேதி மஞ்சள் நீர்விழாவும் நடக்கிறது.

    கொங்கணகிரி

    திருப்பூர் கொங்கணகிரியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கந்த கந்த சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் கந்தபெருமானை வழிபட்டனர்.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருப்பூர் வாலிபாளையம் கல்யாணசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறுவதால் இந்த வருடம் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. தேரோட்டம் நடைபெறாததால் பக்தர்கள் கவலை அடைந்தனர்.

    ×