search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teesta Chedalwat"

    • டீஸ்டா செதல்வாட்டுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
    • குஜராத் கலவரத்தில் டீஸ்டா செதல்வாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால பாதுகாப்பு வழங்கியது.

    புதுடெல்லி:

    கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக அப்போது மாநில முதல் மந்திரியாக இருந்த, பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டது.

    இதனிடையே, போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட்டை அகமதாபாத் காவல்துறையின் குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.

    டீஸ்டா செதல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த டீஸ்டா செதல்வாட் தனக்கு ஜாமீன் வழங்கும்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு செப்டம்பர் 2-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து டீஸ்டா செதல்வாட் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பின்னர், அவர் குஜராத் ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் கடந்த சில மாதங்களாக டீஸ்டா செதல்வாட்டின் ஜாமீனை ஐகோர்ட்டு நீடித்து வந்தது.

    இதற்கிடையே, டீஸ்டா செதல்வாட்டின் ஜாமீன் மனு இன்று குஜராத் ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டீஸ்டா செதல்வாட்டின் ஜாமீனை நீட்டிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது. மேலும், டீஸ்டா உடனடியாக சரணடைய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. குஜராத் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து டீஸ்டா செதல்வாட் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கும்படி அவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று மாலையே அவசர வழக்காக விசாரித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பிரசாந்த் குமார், ஏ.எஸ். ஒஹா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டீஸ்டா செதல்வாட் உடனடியாக சரணடைய வேண்டும் என குஜராத் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. மேலும், டீஸ்டா செதல்வாட்டுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கவும் சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. அதேவேளை, இந்த வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றக்கோரி தலைமை நீதிபதிக்கு இரு நீதிபதிகள் அமர்வு பரிந்துரை செய்தது.

    இந்நிலையில், டீஸ்டா செதல்வாட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் திபாங்கர் தத்தா ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய ஒரு குழு சிறப்பு விசாரணையின்போது இந்த உத்தரவை பிறப்பித்தது. இதனால், குஜராத் ஐகோர்ட்டு உத்தரவுக்கு 7 நாட்கள் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், செதல்வாட்டுக்கு 7 நாட்கள் இடைக்கால பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ×