என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்புக் கட்டுரைகள்"

    • பருவ வயதில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை உணர்வு என்பது பொதுவானது.
    • பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாது.

    பருவ வயதை தொடும் பெண் குழந்தைகள் உடல் ரீதியாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அந்த வயதில் சில பெண்கள் தடம்மாறி செல்வதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. எனவே அவர்களை நல்ல வழிக்கு கொண்டு வருவது பெற்றோர் களின் பொறுப்பாகும்.

    தவறு என்று தெரிந்தும் தவிர்க்க தெரியவில்லை:

    தங்கள் பெண் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது தொடர்பாக மருத்துவர்களிடம் கூட பெற்றோர்கள் கலந்தாலோசனை செய்யலாம். அதன் மூலம் அவர்களுக்கு நீங்கள் சிறந்த வழிமுறைகளை கூறலாம். இது தொடர்பாக கவுன்சிலிங் அளிப்பதற்காகவும் மருத்துவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் உங்களுக்கு அதற்கான வழிமுறைகளை சொல்வார்கள். இதன் மூலம் கல்வி பெறாத பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் பருவ வயதை பக்குவமாக கடந்து செல்வதற்கு உதவ முதல் படியை எடுத்து வையுங்கள்.

    பருவ வயதில் ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவது தொடர்பாக, அந்த வயதில் உள்ள சில பெண் குழந்தைகள் கூட என்னிடம் ஆலோசனை கேட்டு இருக்கிறார்கள். ஏனென்றால் பல நேரங்களில் அவர்களுக்கு இது தவறு என்று தெரியும். ஆனாலும் அவர்களுக்கு அதில் ஒருவித ஆர்வம் ஏற்படும். அதை எப்படி கட்டுப்படுத்துவது என்று என்னிடம் பல குழந்தைகள் கேட்டுள்ளனர்.

    அதாவது அது தவறு என்று தெரிகிறது, ஆனால் அதை எப்படி தவிர்ப்பது என்று தெரியவில்லை என்பார்கள். இந்த காலகட்டத்தில் இதை தவிர்ப்பதற்கு ஒவ்வொரு தாய்மார்கள், வீட்டில் இருக்கும் பெரியவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பருவ வயது குழந்தைகளுக்கு அறிவுரை சொன்னால் மட்டும் போதாது. அவர்களுக்கான வாழ்க்கை முறைகளில் சில விஷயங்களை, அவர்களின் நடைமுறையை பார்த்து அதற்கு ஏற்ப வரையறுக்க வேண்டும்.

    இதுபோன்ற சூழ்நிலையில் அவர்களுக்கு பெரிய அளவில் மனரீதியான குழப்பம் வந்துவிடும். இது தப்பு என்று அவர்களுக்கு தெரியும். அதாவது 15, 16 வயதில் ஆண்கள் மீது வரும் ஈர்ப்பு நல்லது இல்லை என்று தெரியும், ஆனால் அவர்களுக்கு அதைத்தான் செய்ய வேண்டும் என்று தோன்றும்.

    கல்வி கற்கும் குழந்தைகளுக்கு தெளிவான சிந்தனை:

    இதுபோன்ற குழந்தைகள் இதில் இருந்து கடந்து வருவதற்கு பல வழிமுறைகள் உண்டு. இவர்களை வழிமுறைப்படுத்துவதற்கு முக்கிய மான சில விஷயங்கள் உள்ளன. அவர்களின் வாழ்க்கையில் இந்த காலகட்டத்தில் எது முக்கியமான தேவை என்பதை பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் திரும்பத் திரும்ப அவர்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அதேபோல் குழந்தைகளும் தங்களின் எதிர்கால இலக்கு என்ன என்பதை கண்டிப்பாக தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாது. அந்த மாதிரியான பெண் குழந்தைகள் பருவம் அடைந்து வீட்டில் இருக்கும் போது தேவையில்லாத சிந்தனைகள், சமூக வலைதளங்கள் பார்த்து வருகிற எண்ணங்கள் ஆகியவை அவர்களை தவறான பாதைக்கு கொண்டு சென்று விடும். ஆனால் கல்வியை கொடுக்கும்போது இது போன்ற குழந்தை களுக்கு இதைப்பற்றி ஒரு தெளிவான சிந்தனை வரும்.

    எனவே அவர்களுக்கு படிப்பதற்காக நல்ல புத்தகங்களை கொடுக்கலாம். நல்ல நிலையில் அதிகாரத்தில் உள்ள நிறைய பெண்களின் வரலாற்று புத்தகங்களை கொடுக்கலாம். அதைப்பற்றி ஆர்வமூட்டும் கதைகளை அவர்களுக்கு சொல்லலாம். இவையெல்லாம் மிகவும் எளிமையான முறைகள் ஆகும். பருவ வயது காலகட்டத்தில் ஒரு பெண் வாழ்க்கையை எப்படி நல்ல முறையில் கடந்து வந்தார், எப்படி ஒரு பெண் இந்த காலகட்டத்தில் தவறான வழியில் சென்று சிக்கலை சந்தித்தார் என்பதை எடுத்து சொல்லலாம்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    உதாரணங்களுடன் கூடிய நிஜ வாழ்க்கை கதைகள்:

    உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் இணைய தளங்களில் பெண்களின் முன்னேற்றம் பற்றி நல்ல பதிவுகள் பல உள்ளன. அதை பதிவிறக்கம் செய்து பார்த்தால் அவர்களுக்கு பல விஷயங்கள் புரியும். பருவ வயது பெண் ஒருவர் இந்த மாதிரியான ஒரு ஈர்ப்பு, காதல் விவகாரம் என்று வரும்போது, எப்படி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை கடந்து சென்றார், கல்வியில் சிறந்து விளங்கி நல்லதொரு வாழ்க்கையை எப்படி தேர்ந்தெடுத்தார், வாழ்க்கையில் எப்படி முன்னேறினார் என்று சாதித்த பெண்களின் நிஜ கதைகள் இருக்கும்.

    அதேபோல் சாதித்த பெண்ணுடன் படித்த இன்னொரு பெண், பருவ வயதில் ஒரு தவறான உறவில் விழுந்து, காதல் விவகாரத்தில் சிக்கி, இளம் வயதில் திருமணம் செய்து, குழந்தை பெற்று, வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டு, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் பலவித இழப்புகளை சந்தித்து, வாழ்க்கையில் முக்கியமான எதிர்காலத்தை இழந்து, எப்படி மோசமான நிலைக்கு சென்றார் என்கிற உண்மையான சம்பவங்களும் கதைகளாக இருக்கும். இந்த கதைகள் பருவ வயது பெண்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலவிதமான உதாரணங்களுடன் கூறப்பட்டு இருக்கும்.இதை எடுத்து உங்கள் குழந்தைகளுக்கு படிக்க கொடுக்கலாம்.

    அவர்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்வதை விட இந்த மாதிரியான விளக்கங்களை கொடுக்கலாம். இதுபோன்ற கதைகளை பருவ வயது குழந்தைகளுக்கு ஆசிரியர்கள், நண்பர்கள், குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் எடுத்து படிக்க கொடுக்கலாம். பெற்றோர்களுக்கு இதுபற்றி தெரியவில்லை என்றால், தங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் மூலமாக இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கலாம். இது பெற்றோர்களின் முக்கியமான கடமை.

    இவற்றை கொடுக்கும்போது அந்த பெண் குழந்தைகளுக்கு இதில் இருந்து எப்படி மீண்டு வருவது என்பதற்கான மன மாற்றம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் படிப்பு என்பது, தனது வாழ்க்கையின் லட்சி யத்தை அடைவதற்கு மிகவும் முக்கியமானது என்பதை அவர்களுக்கு உணர வைக்கும்.

    இந்த காலகட்டத்தில் நாம் படிப்பில் கவனம் செலுத்தாமல் திசை மாறி சென்று, வாழ்க்கையில் தோல்வி அடைந்தால் எதிர்காலம் பாழாகிவிடும் என்கிற உணர்வுகளை இந்த மாதிரியான சம்பவங்களும், கதைகளும் அவர்களுக்கு புரிய வைக்கும். தவறான விஷயத்தை செய்யாதே என்று கூறி அதனால் வருகிற விளைவுகளை நீங்கள் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விளக்கங்களோடும், சில உதாரணங்களோடும் சொன்னால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள்.

    மனநிலை உணர்வுகள் மாறிக்கொண்டே இருக்கும்:

    இந்த காலகட்டத்தில் அவர்களுடைய உணர்வுகளுக்கு ஆதரவு என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். அவர்கள் தங்களின் பிரச்சினைகளை தோழிகளிடம் தான் முக்கிய மாக பகிர்ந்து கொள்வார்கள். அவர்களிடம் போய் சொல்லும் போது அவர்களுக்கு இவர்களை சரியாக கையாள தெரியாது. அவர்கள் இந்த குழந்தைகளை தவறாக வழிநடத்த வாய்ப்பு உள்ளது.

    எனக்கு ரொம்பவும் மன அழுத்தமாக இருந்தது. அதனால் புகைபிடித்தேன். இப்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என்பார் கள். இவர்களும் அதேபோல் செய்ய ஆரம்பித்தால் பிரச்சினைதான் ஏற்படும். ஒரு சினிமா பார்க்கும் போது பெரியவர்கள் அதில் வரும் ஒரு விஷயத்தை பார்ப்பது வேறு மாதிரி இருக்கும். இளம் பருவத்தினர் பார்ப்பது வேறு மாதிரி இருக்கும். குழந்தைகள் பார்ப்பது இன்னொரு மாதிரி இருக்கும்.

    இப்படி இவர்களின் பரிமாணங்களோ, ஏற்றுக்கொள்கிற தன்மையோ வித்தியாசமாக இருக்கும்போது, பருவ வயதில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அவர்கள் என்ன சிந்திப்பார்கள் என்று யாராலும் கணிக்கவே முடியாது. ஆனால் ஒரு பொதுவான விஷயம், இது தவறான ஒன்று என்பது அவர்களுக்கு தெரிய வேண்டும். இந்த விஷயம் தவறு என்று புரிந்தால் இதை தவிர்க்க முயல்வார்கள். அதற்கு மேல் ஆர்வம் இருந்தால் கூட அந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.

    பருவ வயதில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை உணர்வு என்பது பொதுவானது. ஆனால் அது ரொம்பவும் முக்கியமானது. இந்த நேரத்தில் நாம் சொல்லும் போது சரி என்பார்கள். அதன்பிறகு அவர்கள் அதை வேறு மாதிரி யோசிப்பார்கள். இது சரியா, தவறா என்பது போல அவர்களின் மனநிலை உணர்வுகள் இருக்கும். அவர்களின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். இதனால் தேவையில்லாத மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள்.

    இதில் சிலர் என்ன செய்வது என்று தெரி யாமல் கவலையுடன் இருப்பார்கள். சிலருக்கு இது சோகமான விஷயங்களாக இருக்கும். சிலர் அதில் இருந்து மீண்டு வருவதற்கு என்ன வழிமுறை இருக்கிறது என்று யோசிப் பார்கள். எனவே அவர்களுக்கு இந்த பருவ வயது காலகட்டத்தை கடந்து வரு வதற்கான வழிமுறைகளை நாம் கண்டிப்பாக கற்றுக் கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பருவ வயது பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் என்ன...? அதுபற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

    • மகான்களை தியானிப்பதன் மூலம் நம் சித்தம் சுத்தமாகிறது.
    • ஜீவ சமாதி என்பது உயிரை உடலுக்குள்ளேயே நிலைபெறச் செய்து அதன் இயக்கத்தை நிறுத்தி விடுவது.

    சித்த புருஷர்களாகிய மகான்கள் சித்தி அடையும் விதங்கள் பலவகைப்பட்டவை. அவர்கள் உடலை விட்டு மறைந்தாலும் உலகை விட்டு மறைவதில்லை. தங்களை வழிபடும் அடியவர்களுக்கு அருளை வாரி வழங்குகிறார்கள் அவர்கள்.

    மகான்களை தியானிப்பதன் மூலம் நம் சித்தம் சுத்தமாகிறது. மனத்துக்கண் மாசில்லாத நிலை தோன்றுகிறது. அதனால் மனத்தில் சாந்தியும் வாழ்வில் நிம்மதியும் ஏற்படுகின்றன.

    கடவுளை வழிபடுவதை விட கடவுளின் அடியவர்களை வழிபடுவதன் மூலம் கூடுதலாகவும் விரைவாகவும் அருளைப் பெறமுடியும் என்கிறார் கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

    நேரடியாக சூரிய ஒளி தலையைத் தாக்குகிறது. ஆனால் தலைக்கு அதிகப் பாதுகாப்பு தேவைப்படுவதில்லை. நாம் பொறுத்துக் கொண்டு வெயிலில் நடக்கிறோம்.

    ஆனால் சாலையில் சூரிய ஒளி பட்டுச் சாலை சூடாகி அந்த வெயிலைப் பிரதிபலிக்கிறது. தலையில் தொப்பி இல்லாமலே நடக்க முடிந்த நாம் காலில் செருப்பில்லாமல் நடக்க முடியாது தடுமாறுகிறோம்.

    நேரடி சூரிய ஒளி கடவுளைப் போல. சாலையில் பட்டு வெளிப்படும் சூரிய ஒளி அடியவர்களைப் போல. எனவே அடியவர்களால் வெளிப்படும் அருளுக்கு வலிமை அதிகம் என்பது வாரியார் சுவாமிகளின் விளக்கம்.

    அருளை வாரி வழங்கும் மகான்கள் பல விதங்களில் உடலை உகுத்துப் பரிபூரணம் அடைகிறார்கள். அவர்களின் சமாதிகள் பாரத தேசமெங்கும் பல இடங்களில் இருக்கின்றன.

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், தில்லைக்குச் சென்றார். தில்லை மூவாயிரவரான அந்தணர் கனவிலும் நந்தனார் கனவிலும் சிவபெருமான் தோன்றினார். நந்தனார் அக்கினிப் பிரவேசம் செய்துவிட்டுத் தன்னை தரிசிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டார் சிவபெருமான்.

    அவ்விதமே தில்லை மூவாயிரவரைத் தீ மூட்டச் சொல்லி நந்தனார் அந்தத் தீயில் மூழ்கி எழுந்தார். பின் கடவுள் இட்ட கட்டளைப்படி நடராஜர் சன்னதிக்குச் சென்று அவரைத் தரிசித்துப் பரவச நிலையில் மூழ்கி நடராஜருடனேயே ஐக்கியமாகி விட்டார் என்ற செய்தியைச் சொல்கிறது சேக்கிழார் எழுதிய பெரிய புராணம்.

    திருப்பாவை என்ற உன்னதமான பக்திப் பாசுரத்தை எழுதிய ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ரங்கநாதரையே மணப்பேன் என உறுதி பூண்டிருந்தாள். அவள் திருவரங்கத்திற்கு அழைத்துவரப்பட்டாள். பக்தியின் உச்ச நிலையில் இருந்த அவள், ரங்கநாத விக்கிரகத்துடன் கலந்து மறைந்தாள் என்கிறது புனிதமே வடிவான ஆண்டாளின் தூய திருச்சரிதம்.

    இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட மகான் கபீர்தாசர் சித்தி அடைந்தபோது, அவரின் இந்து அடியவர்களும் முகம்மதிய அடியவர்களும் அவர் உடலை வைத்துக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டார்கள். அவர் உடலை இந்து முறைப்படி எரிப்பதா, முகமதிய முறைப்படி மண்ணில் புதைப்பதா என்பதே சண்டைக்கான காரணம்.

    இதைச் சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சடலம் திடீரென எழுந்து நின்றதாம். உங்கள் ஒற்றுமைக்காகத் தானே பாடுபட்டேன்? என் உடலை வைத்துக்கொண்டு சண்டை போடுகிறீர்களே? வெட்கமாக இல்லையா? எனக் கேட்டுவிட்டு அந்தச் சடலம் மீண்டும் போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டதாம்.

    சற்றுநேரம் காத்திருந்த அடியவர்கள் பின்னர் போர்வையைத் திறந்து பார்த்தார்கள். அங்கே சடலமெதுவும் இல்லை. பதிலாக ரோஜாக் குவியல்தான் இருந்ததாம்.

    அந்த ரோஜாக் குவியலில் பாதி எரிக்கப்பட்டதாகவும் பாதி புதைக்கப்பட்டதாகவும் சொல்கிறது கபீர்தாசரின் கதை!

    ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டுப் பின்னர் சித்தி அடைந்தார். அவர் சித்தி அடைந்த நேரத்தில் அவர் மனைவியான தூய அன்னை சாரதா தேவி அவர் அருகில் இல்லை.

    பரமஹம்சர் சித்தி அடைந்த விவரம், சாரதா தேவியிடம் உடனே தெரிவிக்கப்பட்டது. ஓடோடி வந்தார் சாரதா தேவி. பரமஹம்சரின் உடலைப் பார்த்து காளீ இனி நீ எங்கு போவாய் எனக் கதறினார் என்கிறது பரமஹம்சரின் திருச்சரிதம்.

    பரமஹம்சரின் உடலையே கோவிலாகக் கொண்டு காளியின் அருட்சக்தி அதில் குடியிருந்தது என்ற உண்மையை சாரதாதேவி உணர்ந்திருந்தார் என்பதே இதன் விளக்கம்.

    ஜீவ சமாதி என்பது உயிரை உடலுக்குள்ளேயே நிலைபெறச் செய்து அதன் இயக்கத்தை நிறுத்தி விடுவது. ஜீவ சமாதி அடையும் சித்தர்கள் தாமே விரும்பித் தம் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வார்கள்.

    மகான் ராகவேந்திரர் குழிக்குள் இறங்கி தியானத்தில் அமர்ந்து தம்மை சமாதி செய்விக்கச் சொல்லி விட்டார். இன்றும் மந்திராலயத்தில் உள்ள சமாதியில் அவர் உயிரோடும் உணர்வோடும் இருப்பதாக ராகவேந்திரர் அடியவர்கள் நம்புகிறார்கள்.

    சுதந்திரப் போராட்ட காலத்தில் வரிவசூல் செய்யும் அதிகாரியாக இயங்கிய தாமஸ் மன்றோவுக்கு ராகவேந்திரர் நேரில் தோன்றிக் காட்சி தந்தார் என்ற செய்தியை மன்றோ பதிவு செய்திருக்கிறார்.

    திருச்சி கரூர் அருகே நெரூரில் காவிரிக் கரையில் அமைந்துள்ள சதாசிவப் பிரம்மேந்திரர் சமாதி ஜீவ சமாதிதான். தமிழகத்திலும் பாரதத்தின் பல இடங்களிலும் இப்படிப்பட்ட ஜீவசமாதிகள் பல உள்ளன.

    ஒரு யோகியின் சுயசரிதை என்ற புகழ்பெற்ற தன்வரலாற்றுப் புத்தகத்தை எழுதிய பரமஹம்ச யோகானந்தர், தான் உடலை உகுப்பதாகச் சொல்லிவிட்டே ஏராளமான அடியவர்கள் முன்னிலையில் அமர்ந்த நிலையில் அமரராகி விட்டார்.

    அவர் தன் உடலை விட்டு விலகும்போது அவர் முன்னிலையில் சுமார் எழுநூறு பேர் அமர்ந்திருந்தார்கள். அமெரிக்காவில் போஸ்டன் நகரில்தான் அவர் மகாசமாதி அடைந்தார்.

    தான் உடலை விட்டுவிடப் போவதாக அவர் அறிவித்திருந்ததால் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் அந்த அதிசயத்தைக் காண அங்கே வந்து கூடியிருந்தார்கள். வந்தவர்களிடம் சிறிதுநேரம் உரையாடினார் யோகானந்தர். பின்னர் இப்போது என் உடலை விடப் போகிறேன் என அறிவித்தார். பத்மாசனத்தில் அமர்ந்து தியானம் செய்தவாறே உடலை நீத்தார். இந்த நிகழ்வைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள்.

    பரமஹம்ச யோகானந்தரின் குருவான மகான் யுக்தேஸ்வர கிரியும் தான் உடலைத் துறக்கப் போவதை முன்கூட்டியே அறிவித்து அதன் பின்னரே உடலைத் துறந்தார். அதுமட்டுமல்ல, தாம் உடலைத் துறந்த மறுநாளே தன் சீடரான பரமஹம்ச யோகானந்தருக்கு தன் உடலோடு காட்சி கொடுத்தார். 

    பாண்டிச்சேரியில் மகான் ஸ்ரீஅரவிந்தர் சித்தி அடைந்தபோது அவர் உடலைச் சுற்றி ஒரு பொன்னொளி பரவியிருந்தது. ஏராளமான அடியவர்கள் அந்தப் பொன்னொளியை தரிசிக்கும் பேறு பெற்றார்கள். நூற்றுப் பதினோரு மணிநேரம் அந்தப் பொன்னொளி அவர் உடலைச் சூழ்ந்திருந்தது.

    அவர் இதயத்துடிப்பு நின்று அவர் சித்தி அடைந்து விட்டாலும் அவர் உடலில் காலமானதற்கான வேறு எந்தப்புற அறிகுறியும் தென்படவில்லை. இந்த அதிசயத்தை வியந்து மருத்துவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

    பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னை ஸ்ரீஅரவிந்தர் உடலின் அருகே அமர்ந்து அரவிந்தரின் உடலை சமாதி செய்விப்பதற்கான உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

    அந்தப் பொன்னொளி மெல்ல மெல்ல விலகி, அரவிந்தர் ஸ்ரீஅன்னையின் மனத்தில் தோன்றி தன் உடலை சமாதி செய்விக்கலாம் என உத்தரவளித்த பின்னரே அவர் உடல் சமாதி செய்விக்கப்பட்டது.

    ரமண மகரிஷியும் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போலவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத்தான் சித்தி அடைந்தார். அவர் உயிரை உகுத்த அதே கணத்தில் ஒரு வால் நட்சத்திரம் விண்ணில் தோன்றி மேலே சென்று மறைந்தது.

    இந்த சம்பவத்தை கல்கி கிருஷ்ணமூர்த்தி ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார். பிரபல நடனமணி பத்மா சுப்பிரமணியம் தான் சிறுமியாக இருந்தபோது அந்த வால் நட்சத்திரம் தோன்றி விண்ணில் சென்றதைப் பார்த்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

    சென்னை அருகே திருவொற்றியூரில் பட்டினத்தார் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். சிறுவர்கள் அவரைக் கூடையால் மூடுவார்கள். அவர் சிரித்துக்கொண்டே வேறோர் இடத்தில் இருந்து வெளிப்படுவார்.

    வியப்படைந்த சிறுவர்கள் மறுபடி அவரைக் கூடையால் மூடுவார்கள். மீண்டும் அவர் வேறோர் இடத்தில் இருந்து தோன்றுவார். இந்த விந்தையான விளையாட்டு கொஞ்ச நேரம் நடந்தது. இறுதியில் ஒருமுறை சிறுவர்கள் அவரைக் கூடையால் மூடியபோது அவர் எங்கிருந்தும் வெளிப்படவில்லை. காத்திருந்த சிறுவர்கள் பிறகு மெல்லக் கூடையைத் திறந்து பார்த்தார்கள்.

    அங்கும் அவர் இல்லை. ஆனால் உள்ளே புதிதாய் ஒரு சிவலிங்கம் முளைத்திருந்தது. அவர் சித்தி அடைந்து சிவலிங்கமாக மாறியிருந்தார். திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் சமாதிக் கோயில் அப்படி அமைந்ததுதான்.

    மகான் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் சித்தி அடைந்த விதம் ஆச்சரியகரமானது. பூட்டிய அறையின் உள்ளே தியானத்தில் அமர்ந்து, பஞ்ச பூதங்களால் ஆன தன் உடலைப் பஞ்ச பூதங்களிலேயே பிரித்துக் கரைத்து ஜோதியில் கலந்துவிட்டார் அவர். பின்னர் அறையைத் திறந்து பார்த்தபோது அவர் இருந்ததற்கான எந்தச் சுவடுமே அந்த அறையில் காணப்படவில்லை.

     

    மகான்கள் பல விதங்களில் சித்தி அடைகிறார்கள். அவர்களின் பொன்னுடல் மறைந்தாலும் அருளுடல் மறைவதில்லை. அடியவர்கள் வேண்டும் போதெல்லாம் அருளை வாரி வாரி வழங்குகிறார்கள் அவர்கள்.

    மகான்களைப் பிரார்த்திப்பதன் மூலமும் மகான்கள் காட்டிய வழியில் நடப்பதன் மூலமும் நாம் நம் வாழ்வில் மேலான நிலையை அடைய முடியும். சாந்தியும் நிம்மதியும் கொண்ட மனநிலையை அடைவதற்கு மகான்களைப் பிரார்த்திப்பதே சிறந்த வழி.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    மன பயம் போக்கும் யோக முத்திரைகள் தொடர்பாக யோகக் கலைமாமணி பி.கிருஷ்ணன் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
    இன்று உலகில் நிறைய மனிதர்களுக்கு பயம் உள்ளது. மனதில் பல வகையான பய உணர்வுகள் உள்ளது.  இந்த பய உணர்வு, பய எண்ணங்களினால் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக சுரக்காது. அதனால் உடலில் பல வகையான பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதற்கு மேல் மன அழுத்தத்தினால் நுரையீரல், இதயம் பாதிப்பு ஏற்படுகின்றது. எல்லா மனிதர்கள் போல் அவர்களால் எல்லோரிடமும் பழக,பேசக்கூட முடிவதில்லை. தனிமையில் பய உணர்வினால் பல நபர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.  
    வாழ்வில் ஏற்கனவே நடந்த ஏதாவது ஒரு சோகமான சம்பவம் மீண்டும், மீண்டும் நினைவில் வந்து கொண்டே இருக்கும்.  அல்லது, நாளை வாழ்வில் ஏதாவது விபரீதமாக நடந்துவிடுமோ என்று பயம் இருக்கும். இந்த பயத்தினால்தான் இதயத்துடிப்பு சரியாக துடிப்பதில் மாற்றம் ஏற்படுகின்றது.  இதய வாழ்வில் ரத்தம் சரியாக செல்லாமல் தடை ஏற்படுகின்றது.  இதய வலி ஏற்படுகின்றது.  நுரையீரலின் செயல் திறனும் பாதிக்கப்படுகின்றது.  நல்ல காற்றை உள் வாங்குவதில் பாதிப்பு ஏற்படுகின்றது.  அதனால் சிறுகுடல் பாதிப்பு ஏற்படுகின்றது.  ஜீரண மண்டலம் பாதிப்படைகின்றது.  அதனால் பசி சரியாக எடுப்பதில்லை.  பத்து விதமான வாயுக்களும் பய உணர்வினால் ஒழுங்கான விகிதத்தில் இருப்பதில்லை.
    இதிலிருந்து நாம் உணர வேண்டியது உடலில் ஏற்படும் நிறைய பிரச்சினைகளுக்கு மூல காரணமாய் இருப்பது மனதில் ஏற்படும் பயம்.  இதற்காக பல மருந்துகள் மாத்திரைகள் சாப்பிடுகின்றனர்.  ஆனால் இது மனம் சம்பந்தமானது.  மனதை செம்மைப்படுத்த மருந்து முழுப்பலன் தராது.  இதற்கு தீர்வு நம்மிடமே உள்ளது.  அதுவே யோக முத்ரா சிகிச்சையாகும்.
    நமது ஆழ்மனதில் உள்ள எதிர்மறை எண் ணங்களை அழிக்கவும், மீண்டும் வராமல், எழாமல் தடுக்கவும் முத்திரைகள் பயிலுங்கள். மூன்று மாதங்கள் தொடர்ந்து பயிலுங்கள் காலை / மாலை சாப்பிடுமுன் ஒவ்வொரு முத்திரையும் இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யுங்கள்.
    முதல் முத்திரை - சின் முத்திரை
    சின் முத்திரை
    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும்.  பின் பெருவிரல், ஆள்காட்டி விரல் நுனியை இணைக்கவும்.  மற்ற மூன்று விரல்களும் படத்தில் உள்ளதுபோல் தரையை நோக்கி இருக்கவும்.  அந்த விரல் நுனியில் சிறிய அழுத்தம் கொடுக்கவும்.  இரு கைகளிலும் செய்யவும்.  இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.
    பிராண முத்திரை
    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும்.  பின் சுண்டு விரல், மோதிரவிரல் அதன் மத்தியில் கட்டை விரல் நுனியை வைக்கவும்.  இரு கைகளிலும் செய்யவும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும்.  இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.  அதிகம் மனோ பயம் உள்ளவர்கள் ஐந்து நிமிடங்கள் மூன்று முறை காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.
    சங்கு முத்திரை
    சங்கு முத்திரை
    விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும்.  பின் வலது கை இடது கை விரல்களை கோர்த்து கட்டைவிரல் மட்டும் படத்தில் உள்ளது போல் சேர்த்து முன்னால் வைக்கவும்.  படத்தை பார்க்கவும்.  சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.  இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும்.  ஒரு மனம் மூச்சிலும், மற்றொரு மனம் விரலில் கொடுத்த அழுத்தத்திலும் லயிக்கட்டும்.  பின் சாதாரண நிலைக்கு வரவும்.
    பத்மாசனம் 
    விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  இரு கால் களையும் நீட்டவும்.  வலது காலை மடித்து இ டது தொடையில் போடவும்.  இ டது காலை மடித்து வலது தொடையில் வைக்கவும்.  முது கெலும்பு நேராக இருக்கட்டும்.  இரு கைகளையும் சின் முத்திரையில் வைக்கவும்.  மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை இழுக்கவும்.  மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும்.  பத்து முறைகள்.  பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கூர்ந்து கவனிக்கவும்.  ஐந்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடங்கள் இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும்.  இவ்வாறு மூச்சை கவனிக்கும் பொழுது நமது எண்ணங்கள் சாந்தமாகும்.  பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.  அனைவராலும் முதலில் பத்மாசனத்தில் ஐந்து நிமிடங்கள் இருக்க முடியாது.  எனவே முப்பது வினாடிகள் இருக்கவும்.  பின் மெதுவாக ஒரு நிமிடமிருக்க முயற்சிக்கவும்.  தொடர்ந்து பயின்றால் ஐந்து நிமிடங்கள் இருக்க முடியும்.  பத்மாசனத்தில் இருக்கும் பொழுது எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்.  நேர்முக எண்ணங்கள் வளரும்.
    மனோபயமும் மூச்சும்
    பொதுவாக பய உணர்வு இருக்கும் பொழுது உடலில் மூச்சோட்ட மண்டலம் சரியாக இயங்காது.  பிராணன் உடல் உள் உறுப்புக்கள் அனைத்திற்கும் சரியாகக் கிடைக்காது.  அதனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஆழ்ந்த மூச்சு எடுத்து விடவும்.  இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  ஐந்து முறைகள் செய்யவும்.  அப்பொழுது பிராண சக்தி உடல் முழுவதும் நன்கு பரவும்.  மூளை செல்களுக்கு ரத்த ஓட்டம் நன்கு இயங்கும்.  மன அமைதி கிடைக்கும்.
    மந்திரமும் மன அமைதியும் - ஓம்
    இந்த பிரபஞ்சமே "ஓம் " என்ற அதிர்வலையில் இயங்குகின்றது.  நமது உடலில் ஓம் என்ற ஒலி ஒலித்துக் கொண்டிருக்கின்றது.  நமது புலன்களின் வழி பிராணன் வெளி செல்வதால்,  மன ஒருமைப்பாடு இல்லாததால் அதனை உணர முடியவில்லை.  ஓம் என்ற ஒலியை நன்கு நீட்டி பத்து முறைகள் உச்சரித்தால் மனோ பயம் நீங்கும்.  மன அமைதி கிடைக்கும்.  இது அனாகத ஒலி என்று அழைக்கப்படுகின்றது.  அதிக மனோபயமுள்ளவர்கள் காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன்  ஓம் என்ற மந்திரத்தை நன்கு நீட்டி உச்சரிக்கவும்.  பத்து முறைகள்.  யார் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் உங்கள் மத வழிபாடு தினமும் தவறாமல் செய்து வாருங்கள்.  அதில் மனோபயம் நீங்கும்.
    மணிப்பூரக சக்கரா தியானம்
    நிமிர்ந்து அமரவும். தரையில் விரிப்பு விரித்து அதில் காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் மேற்கு திசை நோக்கியும் அமரவும்.  தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.  மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  
    பத்து முறைகள்.  பின் உங்களது மூச்சோட்டத்தை வயிற்று உள் பகுதியில் நிலை நிறுத்தவும்.  உங்களது மூச்சோட்டத்தை வயிற்று உள் பகுதியில் கூர்ந்து தியானிக்கவும்.  நல்ல பிராண சக்தி வயிற்று உள் உறுப்புகளில் கிடைப்பதாக எண்ணவும்.  ஐந்து நிமிடங்கள் காலை / மாலை இவ்வாறு தியானிக்கவும்.
    பய உணர்வால் பிராண சக்தி உடல் முழுவதும்  சரியாக செல்லாமல் இருக்கும்.  இந்த மணிப்பூரக சக்கரா தியானத்தால் பிராண ஆற்றல் உடல் முழுக்க நன்கு இயங்கும்.  மனோ  பயம் நீங்கும்.  மன தைரியம் கிடைக்கும்.  நேர்முக எண்ணங்கள் வளரும்.  இதயத்துடிப்பு சீராகும்.  உடல் முழுக்க இந்தப் பகுதியில் சக்தி ஓட்டம் குறைவாக இருந் தாலும் மணிப்பூரக சக்கரா தியானம் தொடர்ந்து ஐந்து நிமிடம் தினம் செய்தாலே உடல் இயக்கம், மனோ இயக்கம் மிகச் சிறப்பாக இருக்கும்.  எனவே தினமும் இடைவிடாமல் காலை / மாலை இந்த தியானத்தை செய்யுங்கள்.
    தீப தியானம்
    தினமும் காலை / மாலையில் உங்கள் முன்பு ஒரு விளக்கு தீபம் ஏற்றி வையுங்கள்.  அந்த தீபத்தை ஒரு ஐந்து நிமிடங்கள் உற்று கவனிக்கவும்.  பின்பு கண்களை மூடி இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.  இதனை தினமும் செய்ய முடியாவிட்டாலும் வாரம் இரு முறைகள் பயிற்சி செய்யவும்.
    கோவில் கோபுரம்
    உங்களுக்குப் பிடித்த கோவிலுக்கு செல்லுங்கள்.  அந்த கோவில் கோபுரத்தை உற்றுக் கவனியுங்கள்.  எவ்வளவு பெரிய கோபுரம்.  அதை பார்க்கும் பொழுது மனதில் ஒரு அமைதி கிடைக்கும்.  எண்ணங்கள் ஒடுங்கும்.  அந்த உயர்ந்த கோபுரம்போல் நமது எண்ணங்களும் உயர்ந்து இருக்கட்டும்  என்ற உணர்வு ஏற்படும்.  நிறைய நபர்கள் கோபுரங்களை தொடர்ந்து ஐந்து நிமிடம் பார்ப்பதில்லை.  அப்படிப் பார்த்தால் நிச்சயம் நமது பய உணர்வு நீங்கும்.  எனவே மனோ பயம் உள்ளவர்கள் கோவில் கோபுரத்தையும், அதில் உள்ள சிற்பங்களையும் ஐந்து நிமிடங்கள் வாரம் ஒரு முறை சென்று ரசியுங்கள்.
    உணவு
    மிகவும் காரமான உணவு எடுக்க வேண்டாம்.  மாமிசம் சாப்பிடுவதை தவிர்பபது நலம்.  பழங்கள், கீரை வகைகள் உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.  இரவு சாப்பாடு 8  மணிக்குள் அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்றுப் போக இடமிருக்கட்டும்.  அந்த மாதிரி சாப்பிடுங்கள்.  இரவு 10  மணிக்கு தூங்கவும்.  காலை 5 மணிக்கு எழுந்து விடுங்கள்.  காலை எழுந்தவுடன் விரிப்பில் அமர்ந்து கண்களை மூடி இரு கைகளையும் கூப்பி கும்பிட்டு மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடுங்கள்.  ஐந்து முறை, பின் இன்றைய நாள் முழுவதும் எனக்கு அமைதியை, ஆனந்தத்தை தரும் நாளாக அமையட்டும்.  மன அமைதி நிலைத்திருக்கட்டும் என்று ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.  பின் விரிப்பை விட்டு எழவும்.
    இரவு படுக்கும் பொழுதும், படுப்பதற்கு முன்பாக கண்களை மூடி இரு கைகளையும் கும்பிட்டு மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை விடவும் . பத்து முறைகள்.  பின் இறைவனிடம் இன்று இரவு நல்ல தூக்கம் வரட்டும்.  ஆழ்ந்த நித்திரை கிடைக்கவேண்டும் என்று பிரார்த்தனை இரண்டு நிமிடங்கள் செய்துவிட்டு படுக்கவும்.
    காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் இதே போல் கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  ஐந்து முறைகள்.  பின் இந்த உணவு எனக்கு ஆரோக்கியத்தையும், அமைதியையும் தரும் உணவாக அமையட்டும் என்று பிரார்த்தித்து விட்டு பின் சாப்பிடவும்.
    மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை நம்பிக்கையுடன் பயிற்சி செய்யுங்கள். ஒரு மண்டலம் 48 நாட்கள் தொடர்ந்து செய்யுங்கள்.  நிச்சயமாக மனோபயம் நீங்கி, தைரியமாக, வளமாக வாழலாம்.  
    ×