search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Syrian army"

    சிரியா எல்லையில் துருக்கியின் தாக்குதலை தடுப்பதற்காக குர்து போராளிகள், அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் புதிய கூட்டணியை அமைத்து உள்ளன. #Syria #Kurdish
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் 2011-ம் ஆண்டு, மார்ச் 15-ந் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் தொடங்கியது. 9-வது ஆண்டாக அது நீடிக்கிறது.

    இந்த உள்நாட்டுப் போரைப் பயன்படுத்தி அங்கே காலூன்றிய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதற்காக அமெரிக்கா 2 ஆயிரம் படை வீரர்களை சிரியாவுக்கு அனுப்பியது.

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் மீது அமெரிக்க படையினர் தொடர் தாக்குதல்கள் நடத்தி அவர்களது கட்டுப்பாட்டில் இருந்து பல நகரங்களை மீட்டனர்.

    இந்தநிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த 19-ந் தேதி, “சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரை வீழ்த்தி விட்டோம், அமெரிக்க படைகள் அங்கிருந்து திரும்பப்பெறப்படுகின்றன” என்ற அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.

    இது உலக அரங்கை உலுக்கியது. அமெரிக்க படைகள் வாபஸ், சிரியாவில் மீண்டும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கும் என விமர்சனங்கள் எழுந்தன.

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினை அமெரிக்கா வீழ்த்துவதற்கு சிரியாவில் குர்து போராளிகள் பக்க பலமாக இருந்தனர். அமெரிக்கா படைகளை திடீரென வாபஸ் பெறுவதாக அறிவித்து, தங்களுக்கு துரோகம் செய்து விட்டதாக அவர்கள் கருதுகின்றனர்.

    குர்து போராளிகள், தென் துருக்கி எல்லையில் தன்னாட்சி பிரதேசத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக 30 ஆண்டுகளாக போராடி வருகிற நிலையில், அவர்களை பயங்கரவாதிகள் என கூறி துருக்கி தடை செய்துள்ளது.

    சிரியாவில் இருந்து படைகள் வாபஸ் என்று அமெரிக்கா அறிவித்ததும், இதுதான் சமயம் என துருக்கி அதிபர் எர்டோகன் முடிவுக்கு வந்து, குர்து போராளிகளை ஓழித்துக் கட்ட வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்.

    சிரியா, துருக்கி எல்லையில் குர்து போராளிகள் தன்னாட்சி பிரதேசத்தை கட்டமைத்து விடக்கூடாது என்பதில் அவர் தீவிரமாக இருக்கிறார்.

    இந்தநிலையில் சிரியா அரசுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு குர்து போராளிகள் தள்ளப்பட்டனர்.

    அமெரிக்க படை விலகலால், தங்களுக்கு எதிராக இப்போது துருக்கி படைகள் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், ரஷியா மற்றும் ஈரான் ஆதரவை பெற்றுள்ள சிரியா படைகளுடன் கூட்டு சேர்ந்தால் மட்டுமே துருக்கியின் தாக்குதலை தடுக்க முடியும் என்பதுதான் குர்து போராளிகள் நிலை.

    அதன் ஒரு அங்கமாக சிரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மான்பிஜ் நகரை அவர்கள் சிரியா படைகளுக்கு விட்டுக்கொடுத்து விட்டனர். அங்கிருந்து குர்து போராளிகள் விலகிக்கொண்டு அங்கு சிரியா படைகளை வரவழைத்துள்ளனர்.

    சிரியா படைகளும் அந்த நகரத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக நுழைந்து இருக்கின்றன. அங்கு சிரியா படைகள் கொடியை ஏற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் புதிய கூட்டணியை அமைத்துள்ள குர்து போராளிகளை இனி துருக்கி என்ன செய்யும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்று உலக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
    சிரியாவில் புரட்சி படையினரிடம் உள்ள இத்லிப் நகரை கைப்பற்றுவதற்காக அந்நாட்டு ராணுவ படைகள் பீரங்கி வாகனங்களுடன் தாக்குதல் நடத்த தயாராகி இருப்பதால் நகரில் உள்ள 7 லட்சம் மக்கள் அச்சத்தில் உள்ளனர். #Syria
    டமாஸ்கஸ்:

    அரபு நாடான சிரியாவில் 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் ப‌ஷர் அல் ஆசாத்தை தூக்கி எறிய அமெரிக்க ஆதரவு புரட்சி படைகள் ஒரு பக்கம் போரிட்டு வருகின்றன. இவை தவிர குர்திஸ் படைகள், துருக்கி ஆதரவு புரட்சி படை ஆகியவையும் போரிடுகின்றன.

    நாட்டின் பல பகுதிகள் புரட்சி படைகளின் கைவசம் உள்ளது. குறுகிய இடங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்ளிட்ட அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

    புரட்சி படை மற்றும் தீவிரவாதிகளிடம் இருக்கும் இடங்களை மீட்பதற்கு சிரிய ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது. அவர்களுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் உதவி வருகின்றன. ரஷியா நேரடியாகவே வான் தாக்குதலை நடத்தி வருகிறது.

    ஏற்கனவே புரட்சி படையினரிடம் இருந்த கிழக்கு அலப்போ, கிழக்கு கூடா, தாரா ஆகிய பகுதிகளை ரஷிய படைகள் உதவியுடன் சிரியா மீட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சண்டைக்கு இடையே குண்டுவீச்சில் சிக்கி பலியானார்கள்.

    சிரியாவில் இத்லிப் என்ற பெரிய நகரம் உள்ளது. இதுவும் தற்போது புரட்சி படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. துருக்கியின் எல்லையில் உள்ள இந்த நகரை மீட்பதற்காக சிரியா படைகள் நகரை முற்றுகையிட்டுள்ளன.

    ஏராளமான கவச வாகனங்களும், பீரங்கி வாகனங்களும் தொடர்ந்து நகரை நோக்கி முன்னேறி வருகின்றன. எந்த நேரத்திலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று ஆங்காங்கே விமானம் மூலமும், பீரங்கி மூலமும் குண்டு வீசப்பட்டது. ரஷிய விமானங்களும் தாக்குதல் நடத்தின. இதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 5 பேர ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் என்பது தெரிய வந்தது. 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.



    இந்த நகரில் தற்போது 7 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் 2½ லட்சம் பேர் அந்த நகரை சொந்த ஊராக கொண்டவர்கள். மற்றவர்கள் வேறு இடங்களில் போருக்கு பயந்து தப்பி வந்தவர்கள். இங்கும் இப்போது சண்டை தொடங்கி இருப்பதால் 7 லட்சம் மக்களும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தாக்குதல் தீவிரமானால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாக கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே, 7 லட்சம் பேரையும் பத்திரமாக வெளியேற்ற வேண்டும் என்று ஐ.நா. சபை சிரியா அரசை கேட்டு கொண்டுள்ளது.

    ஏற்கனவே புரட்சி படைகளிடம் இருந்த நகரங்களை மீட்ட போது, சிரியாவும், ரஷியாவும் கண்மூடித்தனமாக விமான தாக்குதல் நடத்தின. இதில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

    அதேபோன்ற நிலை இந்த நகரிலும் நடைபெறலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இத்லிப் நகரில் தாக்குதலை நடத்தக்கூடாது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அங்கு தாக்குதல் நடத்தினால் மிகப்பெரிய மனித படுகொலையாக அமையும். அதை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்து இருக்கிறது. #Syria
    ×