என் மலர்
நீங்கள் தேடியது "ஒருனோடோய் திட்டம்"
- திட்டத்தைப்பெற அசாமின் நிரந்தர குடியிருப்பாளராக இருக்கவேண்டும்
- தேர்தலுக்காக கொடுக்கப்பட்டது அல்ல
அசாமில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, 40 லட்சம் மகளிருக்கு ரூ.9000 வங்கிக்கணக்கில் வரவுவைத்துள்ளது. தேர்தலை ஒட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெண்களுக்கு ரூ.5,000 வழங்கப்பட்டதாக கூறப்பட்டு வரும்நிலையில் அசாமில் ரூ.9,000 வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு, மொத்தம் ரூ.3,600 கோடியை இன்று ஒரே நாளில் பெண்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக மாற்றியது. அசாம் அரசின் ஒருனோடோய் திட்டத்தின்கீழ் பெண்களுக்கு மாதம் மாதம் ரூ.1,250 வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி முதல் நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகை மற்றும் அசாம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான கூடுதல் தொகை ஆகியவற்றைச் சேர்த்து மொத்தமாக ரூ.9,000 வழங்கப்பட்டுள்ளது.
இது தேர்தலுக்காக வழங்கப்பட்டது அல்ல என அசாம் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒருனோடோய் திட்டம் என்றால் என்ன?
கடந்த 2020ம் ஆண்டு பாஜக அரசால் உருவாக்கப்பட்ட திட்டம். பெண்களின் மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,250 வழங்கப்படுகிறது. தற்போது இந்தத் திட்டத்தின்கீழ் 40 லட்சம் பெண்கள் பயனடைந்துவருகின்றனர்.
பயனாளிகள் கொண்டிருக்கவேண்டிய தகுதிகள்
அசாம் மாநிலத்தின் நிரந்தர குடியிருப்பாளராக இருக்க வேண்டும்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குக் குறைவாக இருக்க வேண்டும்
குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒரு பெண் உறுப்பினர் இருக்க வேண்டும்; அவரே பயனாளியாக இருப்பார்.
கைம்பெண்கள், விவாகரத்து பெற்றவர்கள், திருமணமாகாத 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.






