என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிரியர் நியமனம் ரத்து"
- நியமனத்தில் குறைபாடு, களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
- மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
மேற்கு வங்காளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறை கேடு நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டன.
இதை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது. அதில் சட்டவிரோத பணி நியமனத்திற்கு உதவிய மேற்கு வங்காள அரசு அதிகாரிகள் யாா் என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாக ஐகோர்ட்டு தெரிவித்து இருந்தது.
மேற்கு வங்காள அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற் படுத்திய இந்த தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா ஐகோர்ட்டு நியாயமின்றி ஆசிரியா் மற்றும் அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு அப்பீல் வழக்கில் இன்று தீர்ப்பளித்தது.
கொல்கத்தா ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
நியமனங்கள் ரத்து செய்யப்பட்டவர்கள் தங்கள் சம்பளம் மற்றும் பிற ஊதியங்களை திருப்பி தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தனர். அதே நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தளர்வு அளித்து அவர்கள் பணியில் நீடிப்பார்கள் என்றும் கூறினர்.
புதிய தேர்வு செயல்முறையை தொடர்ந்து 3 மாதங்களுக்குள் முடிக்கவும் மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாகும்.






