என் மலர்
நீங்கள் தேடியது "புதிய வேலைவாய்ப்புகள்"
- 81 கோடி மக்களுக்கு இலவசமாக அல்லது மானிய விலையில் ரேஷன் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு நாம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என கேள்வி எழுப்பினர்.
புதுடெல்லி:
கொரோனா பெருந்தொற்றின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த இடர்கள் மற்றும் அவர்களுக்கான நிவாரணம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகளை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய நிலையில், நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சூர்ய கந்த் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.
இதில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி ஆகியோர் ஆஜராகினர்.
ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் ஆஜரானார்.
விசாரணையின்போது நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
அந்தவகையில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து 81 கோடி மக்களுக்கு இலவசமாக அல்லது மானிய விலையில் ரேஷன் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
உடனே நீதிபதிகள், 'அப்படியென்றால் வரி செலுத்துவோர் மட்டும்தான் விடுபட்டு இருக்கிறார்கள்' என சொலிசிட்டர் ஜெனரல், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலைப்பார்த்து தெரிவித்தனர்.
அதேநேரம் வக்கீல் பிரசாந்த் பூஷன் தனது வாதத்தில், 'ரேஷன் கார்டு இல்லையென்றாலும் இ-ஸ்ராம் தளத்தில் பதிவு செய்த அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் வழங்க உத்தரவிட வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.
உடனே நீதிபதிகள், 'எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும்?, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு நாம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?' என கேள்வி எழுப்பினர்.
அப்போது பிரசாந்த் பூஷன், 'புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்திய அரசு வழங்கும் இலவச ரேஷனைப் பெறுவதற்கு ரேஷன் கார்டுகளை வழங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த கோர்ட்டு அவ்வப்போது உத்தரவு பிறப்பித்துள்ளது' என தெரிவித்தார்.
இவ்வாறு விவாதம் நீண்ட நிலையில், புலம் பெயர் தொழிலாளர் பிரச்சினை குறித்த இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவை எனக்கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.






