என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறுகுடி அமர்வு குறித்து"

    • அதிகாரிகள் கிராமத்துக்கு சென்று மறு குடியமர்வு விருப்பம் தெரிவித்த மக்களிடம் கலந்துரையாடினர்.
    • 497 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான இடத்தை தேர்வு செய்து ஆய்வில் ஈடுபட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியையொட்டி மாயார் அடுத்துள்ள தெங்கு மரஹாடா வன கிராமத்தில் வசிக்கும் மக்களை வெளி யேற்றி மறு குடியமர்வு செய்ய வனத்துறை கடந்த சில வருடங்களுக்கு முன்பு பரிந்துரைத்தது.

    இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி வருகின்ற அக்டோபர் மாதம் 10-ந் தேதிக்குள் மறு குடியமர்வு செய்யப்பட்டு அதற்கான அறிக்கையை வனத்துறை தாக்கல் செய்யுமாறு உத்தர விட்டது.

    இதைத்தொடர்ந்து தற்போது வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மறு குடியமர்வு தொடர்பான பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே தமிழக வனத்துறை கூடுதல் முதன்மை செயலர் சுப்ரியா சாகு, கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் வனத்துறை அதிகாரிகள் கிராமத்துக்கு சென்று மறு குடியமர்வு விருப்பம் தெரிவித்த மக்களிடம் கலந்துரையாடினர்.

    அப்போது அவர்கள் வனத்துறை கூடுதல் முதன்மை செயலரிடம் கிராம மக்கள் தங்களுக்கு வீடு கட்ட இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து வனத்துறை கூடுதல் முதன்மை செயலர் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை அருகே உள்ள கோழிப்பண்ணை பகுதிக்கு சென்றனர்.

    அங்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 69 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி 497 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான இடத்தை தேர்வு செய்து ஆய்வில் ஈடுபட்டனர்.

    மேலும் இது குறித்து அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் கூறினர். ஆய்வின்போது வனத்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×