என் மலர்
நீங்கள் தேடியது "கடைக்காரர் கொலை"
- மர்ம கும்பல் காமராஜை வழிமறித்து கத்தியால் வெட்டி கொலை செய்து சாலையிலேயே வீசிவிட்டு சென்றனர்.
- கொலை நடந்த இடத்தில் இருந்த கத்தி, செருப்பு மற்றும் மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்கள் போன்ற தடயங்களை போலீசார் கைப்பற்றினர்.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த சின்ன நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 55). கேபிள் டி.வி. ஆப்ரேட்டர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சின்ன நெற்குணம் சர்வீஸ் ரோட்டில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.
நேற்று இரவு 11 மணியளவில் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். நெடுஞ்சாலை அருகில் உள்ள ரெயில்வே கேட்டை கடந்து மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மர்ம கும்பல் காமராஜை வழிமறித்து கத்தியால் வெட்டி கொலை செய்து சாலையிலேயே வீசிவிட்டு சென்றனர்.
இரவு 11.45 மணியளவில் அவ்வழியே வந்த நபர் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து, காமராஜ் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தார். அலறியடித்து வந்த காமராஜ் குடும்பத்தினர் கதறி அழுதனர். இது தொடர்பாக மயிலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காமராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் கத்தியால் வெட்டியதில் காமராஜின் முகத்தில் அதிகளவில் காயங்கள் இருந்தன. மேலும் கை மற்றும் தோள்பட்டையில் கத்தி வெட்டு காயங்கள் இருந்தன.
கொலை நடந்த இடத்தில் இருந்த கத்தி, செருப்பு மற்றும் மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்கள் போன்ற தடயங்களை போலீசார் கைப்பற்றினர். கொலை செய்யப்பட்ட காமராஜிக்கும், அப்பகுதியில் உள்ள யாருக்கும் முன்விரோதம் இல்லை என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மயிலம் போலீசார், காமராஜை கொலை செய்த மர்மநபர்கள் யார்? என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பான தேசிய நெடுஞ்சாலை அருகே நள்ளிரவில் கொலை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.






