என் மலர்
நீங்கள் தேடியது "மதுகுடித்து பலி"
- மது குடித்ததால் தான் இறந்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
- மதுபான கடை மேற்பார்வையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே தத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் பூராசாமி (வயது 65), பழனிகுருநாதன் (55).
இருவரும் நேற்று முன்தினம் இரவு கழனிவாசல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து மதுவாங்கிக்கொண்டு பழனிகுருநாதனுக்கு சொந்தமான இரும்பு பட்டறையில் வைத்து குடித்தனர்.
பின்னர் சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக இருவரையும் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கூறி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
இவர்கள் இருவரும் மது குடித்ததால் தான் இறந்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். அதனால் அவர்கள் இறந்து கிடந்த இடத்தில் கிடந்த மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு தடய அறிவியல் மருத்துவ நிபுணர் குழு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், கழனிவாசல் டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து இறந்தவர்கள் குடித்த மதுவகையை சேர்ந்த 400 மது பாட்டில்களை பெரம்பூர் போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அதில் 13 மதுபாட்டில்களை டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், மதுபான கடை மேற்பார்வையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் மதுக்கடைகள் பூட்டப்பட்டன. பிரேத பரிசோதனைக்கு பிறகு 2 பேரின் உடல்களும் அவர்களுடைய வீடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகளுக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டன.
இறந்தவர்கள் இருவரும் டாஸ்மாக் மது குடித்து இறந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே தத்தங்குடி கிராமத்தை சேர்ந்த பூராசாமி, பழனிகுருநாதன் ஆகியோர் இறந்தது தொடர்பாக பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இறந்தவர்களின் உடல்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும், திருச்சி மண்டல தடயவியல் துறை துணை இயக்குநரின் முதற்கட்ட பரிசோதனை அறிக்கையில் இறந்த இருவரின் ரத்தம் மற்றும் உள்ளுறுப்புகளில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் பழனிகுருநாதனின் சகோதரர்களான மனோகரன் மற்றும் பாஸ்கரன் (இருவரும் பழனி குருநாதன் தந்தையின் முதல் தாரத்தின் மகன்கள்) சொத்து காரணமாக மதுவில் சயனைடு கலந்து கொலை செய்ய முயற்சித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, மனோகரன், பாஸ்கரன் ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு மேல் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






