என் மலர்
நீங்கள் தேடியது "அழகு நிலையத்தில் பயங்கர தீ விபத்து"
- அறையில் இருந்து கரும்புகை வெளியேறி சிறிதுநேரத்தில் அந்த அறை முழுவதும் புகை பரவி தீப்பிடித்து எரிய தொடங்கியது.
- இந்த தீ விபத்தில் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமாக பொருட்கள் எரிந்து சேதமானதாக தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கல்லறை மேடு அருகே தனியாருக்கு சொந்தமான வணிகவளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு முதல்தளத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடமும், அதற்கு மேல் அழகுநிலையமும் செயல்பட்டு வருகிறது.
இந்த அழகுநிலையத்தை உடுமலைப்பேட்டையை சேர்ந்த ராஜேஸ்குமார் என்பவர் நடத்தி வருகிறார். முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அழகுநிலையத்தில் ஒரு வரவேற்பரை மற்றும் 5 அறைகள் உள்ளன. சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த ஊழியர் மின்இணைப்பை போட்டுள்ளார். அப்போது முதல் அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிதுநேரத்தில் அந்த அறை முழுவதும் புகை பரவி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அவர் தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியாததால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.
இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சற்றுநேரத்தில் அழகுநிலையம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதும் அங்கிருந்த ரூ.50 லட்சத்திற்கும் அதிகமாக பொருட்கள் எரிந்து சேதமானதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நகர் மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான இப்பகுதியில் தீ விபத்து நடந்ததால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனிடையே தீ விபத்து நடந்தபோது அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். அப்போது அவ்வழியே சென்ற கலெக்டர் தனது வாகனத்தை நிறுத்தி தீ விபத்து குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினரிடம் கேட்டறிந்தார்.






