என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கு விருதுகள்"
- விவசாயிகளை ஊக்கப்படுத்த மாநில அளவில் 3 விவசாயிகளுக்கு சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
- சொந்த நிலம், குத்தகை நிலம் வைத்துள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவேண்டும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் மரகதமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், காய்கறிகள், பழங்கள் போன்ற தோட்டப்பயிர் சாகுபடியில் அதிக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, அதிக லாபம் கிடைக்கும் இயற்கை விவசாயத்தில், தோட்டக்கலைப் பயிர் செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்த மாநில அளவில் 3 விவசாயிகளுக்கு சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது பெற விருப்பம் உள்ள விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்யலாம். அதன்பின் சம்பந்தப்பட்ட வட்டார அலுவலகங்களில் ரூ. 100 விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
சொந்த நிலம், குத்தகை நிலம் வைத்துள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவேண்டும். மாவட்டக் குழுவால் விண்ணப்பங்கள் பரிசீலினை, வயலாய்வு செய்யப்பட்டு, மாநில குழுவுக்கு அனுப்பப்படும்.
மாநிலத்தில் தேர்வாகும் விவசாயிக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், 2வது பரிசாக ரூ. 60 ஆயிரம், 3வது பரிசாக ரூ. 40 ஆயிரம் மற்றும் விருது வழங்கப்படும்.
விருது பெற, அந்தந்த பகுதி விவசாயிகள், தொடர்புடைய வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குனரை அணுகலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






