என் மலர்
நீங்கள் தேடியது "தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்"
- மெட்ரோ குடிநீர் லாரிகள் சென்னை மாநகர் முழுவதும் மக்களுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.
- ஒப்பந்தம் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெற்றது.
சென்னை:
சென்னையில் மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரிகள் சுமார் 450 இயங்குகின்றன. இந்த லாரிகள் 6 ஆயிரம், 9 ஆயிரம், 12 ஆயிரம் மற்றும் 18 ஆயிரம் லிட்டர் கொள்ளளவை கொண்டவை. மெட்ரோ குடிநீர் லாரிகள் சென்னை மாநகர் முழுவதும் மக்களுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.
அவ்வாறு இயக்கப்படக் கூடிய லாரிகளின் உரிமையாளர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் லாரிகளை இயக்கி வருகின்றனர். ஆனால் அந்த ஒப்பந்தம், கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெற்றது. மீண்டும் புதிய ஒப்பந்தத்தை அறிவிப்பதிலும், அதனை இறுதி செய்வதிலும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தாமதம் காட்டியதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதத்துக்குள் ஒப்பந்தம் போடப்படும் என சொன்னதை நம்பி, லாரி உரிமையாளர்கள் பலர் புதிய லாரிகளை வாங்கியுள்ளனர். ஆனால் நவம்பரில் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதுவரை அது இறுதி செய்யப்படவில்லை.
இதையடுத்து ஒப்பந்தத்தை இறுதி செய்து பணி ஆணைகளை வழங்கக் கோரி மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய தலைமை அலுவலகத்துக்கு அதிகாரிகளை சந்திக்க வந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் இல்லை.
இதனால் வாரியத்துக்கு முன்பு வெகு நேரம் காத்திருந்த பின்னர் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
இதுதொடர்பாக மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் கேசவராவ் கூறுகையில், 'ஒப்பந்தத்தை நம்பி புதிதாக வாங்கிய லாரிக்கான முதலாம் ஆண்டு காப்பீடு கட்டணத் தொகை செலுத்துவதற்கான நாட்களே வந்துவிட்டது. ஆனால் இதுவரை ஒப்பந்தம் இறுதியாகவில்லை.
உரிமையாளர்களில் சிலர் மனவேதனையில் உயிரிழந்தும் போயுள்ளனர். மேலும் பலர் லாரிக்கான மாத தவணை செலுத்த முடியாமல் திணறுகிறார்கள்.
இதற்காக நாளை முதல் நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். எனவே இதில் வாரியம் உடனடியாக முடிவெடுத்து, ஒப்பந்தத்தை இறுதி செய்து ஆணைகளை வழங்க வேண்டும்' என்றனர். வேலைநிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபடும் பட்சத்தில் சென்னை மாநகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.






