என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களை முட்டாள்"

    மக்களை முட்டாள்கள் என நினைப்பதை நிறுத்துங்கள் மோடி என்று பிரியங்கா காந்தி சாடினார். #PMModi #PriyankaGandhi
    மிர்சாப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் பிரசார களத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பம்பரமாக சுழன்று வருகிறார்.

    உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதிக்கு பொறுப்பேற்ற அவர், பிரயாக்ராஜ் ஆக இப்போது மாறியுள்ள அலகாபாத் நகரில் இருந்து பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசிக்கு 100 கி.மீ. தொலைவுக்கு கங்கை நதியில் படகில் பயணம் செய்து கங்கைக்கரை மக்களின் ஆதரவை திரட்டினார். இந்தப் பயணத்தின் இடையே நேற்று அவர் மிர்சாப்பூரில் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடி கருத்துக்கள் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-



    நாட்டின் அரசு அமைப்புகள் ஒவ்வொன்றின் மீதும் பிரதமர் கடந்த 5 ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வந்திருக்கிறார். நீங்கள் அங்கமாக இருக்கிற அரசு அமைப்பும் இதில் அடங்கும்.

    மக்கள் எல்லாரும் முட்டாள்கள் என்று நினைப்பதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    எங்களுக்கு ஏதாவது நடந்தாலும், நாங்கள் தொல்லைக்கு ஆளானாலும், நாங்கள் பயப்பட மாட்டோம். அவர்களுக்கு எதிரான எங்கள் போரைத் தொடர்ந்து நடத்துவோம். நாங்கள் எந்தளவுக்கு தொல்லைக்கு ஆளாகிறோமோ, அதே அளவுக்கு பலம் வாய்ந்தவர்கள் ஆவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மிர்சாப்பூரில் ஒரு கோவில் அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியிலும் பிரியங்கா பேசினார்.

    அப்போது அவர் நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி எதையுமே செய்யவில்லை என்று குற்றச்சாட்டு சுமத்தினார். இந்த அரசு லாலிபப்புகளைத்தான் (குச்சி மிட்டாய்களை) மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.அரசியல் என்பது நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    “காங்கிரஸ் ஆட்சியிலே வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டது, நாட்டின் மிகப்பெரிய திட்டமாக மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் கொண்டு வந்தோம்” என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.ஆனால் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியிலோ தொழிலாளர்களுக்கு பதிலாக எந்திரங்களை கொண்டு வந்துவிட்டார்கள் எனவும் அவர் சாடினார்.

    மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சி விவசாயிகளுக்காகவும், ஏழை எளிய மக்களுக்காகவும் உழைக்கும் என்று அவர் உறுதி அளித்தார். #PMModi #PriyankaGandhi
    ×